விழுப்புரம் டவுனில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் சென்றவர்களை கட்டுப்படுத்தும் பணியில் டவுன் டிஎஸ்பி சங்கர் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி வைத்து அவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்தில் சங்கு ஊதி சேகண்டி அடித்து (இறந்தவர் களுக்கு செய்வது போல்) செய்து காட்டப்பட்டது. இதன் மூலம் நோய் பரவினால் உயிர் போவது உறுதி. எனவே யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று காவல்துறையினர் பொது மக்களை எச்சரிக்கை செய்து காட்டினார்கள்.
அப்போது அந்த இடத்திற்கு விசிட் வந்த மாவட்ட எஸ்பி ஜெயகுமார், அங்கிருந்த போலீசாரையும் டிஎஸ்பி சங்கரையும் கடிந்து கொண்டார். விழிப்புணர்வு என்ற பெயரில் இது போன்ற அபத்தமான செயல்களில் ஈடுபடக்கூடாது என அவர்களை அறிவுறுத்தியதோடு அவர் வாகன ஓட்டிகளிடம் கொரோனா நோய் பரவாமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களை தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் வீட்டுக்குள்ளேயே இருங்கள் நோய் பரவினால் அதை உடனடியாக மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் அதில் இருந்து உயிர் பிழைத்துக் கொள்ள முடியும். எனவே அப்படிப்பட்ட ஆபத்தான நோய் வருமுன் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகளிடம் எடுத்துக் கூறி அவர்களை அனுப்பிவைத்தார்.
போலீசார் சங்கு ஊதி சேகண்டி அடித்து விழிப்புணர்வு என்ற பெயரில் நடந்துகொண்ட விதம் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.