
மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை (01.06.2025) நடைபெற உள்ளது. இதற்காக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (31.05.2025) மதியம் மதுரைக்குச் சென்றடைந்தார். அதன்படி விமான நிலையத்திற்கு வந்திருந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மூத்த அமைச்சர் துரைமுருகன் அமைச்சர்கள் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.என். நேரு மற்றும் உட்பட பல்வேறு தரப்பினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதோடு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தின் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து மதுரையில் சுமார் 25 கி.மீ. தொலைவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரோட் ஷோ நிகழ்ச்சியை நடத்தினார். இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியானது மதுரை பெருங்குடியில் தொடங்கி அவனியாபுரம் வரை சென்றது. இதற்கிடையே ஜீவாநகர், வில்லாபுரம் மற்றும் ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார். அப்போது அவருக்குச் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வகையில் வழிநெடுகிலும் பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பின்போது, தலைவர்களின் வேடமணிந்த சிறுவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதோடு ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலின் நிரந்தர நிழற்கூரையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மெஜிரா கோட்ஸ் ஆலை முன் அமைக்கப்பட்டுள்ள மதுரையின் முதல் மேயராக பதவி வகித்த முத்துவின் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இதற்கிடையே பந்தல்குடி வாய்க்காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், தனது மூத்த சகோதரருமான மு.க. அழகிரியை மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள அவரது இல்லத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசியுள்ளார். மு.க. அழகிரி கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அவர் மதுரையில் தனது குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக மு.க. அழகிரியின் ஆதரவாளர்களான மன்னன், இசக்கிமுத்து உட்பட முக்கிய ஆதரவாளர்கள் தங்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் எனக் கட்சித் தலைமைக்கு மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதி இருந்தனர். இந்த சந்திப்பிற்குப் பிறகு நாளை நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் அழகிரியின் ஆதரவாளர்கள் கட்சியில் இணைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.