
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர், தமிழக தொழில், முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவை நேர்காணல் கண்டோம். நம்முடைய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
சுகாதாரத்துறை, போக்குவரத்து துறை மாதிரி மக்கள் வாழ்க்கையில் நேரடி தொடர்பு இல்லாமல் இருந்த தொழில்துறையில் தற்போது பல்வேறு மாற்றங்களை பார்க்க முடிகிறது; மக்கள் இது குறித்து பேசுகிறார்கள்; இந்த மாற்றம் எப்படி சாத்தியமானது?
தொழில்துறையில் அமைச்சர் தங்கம் தென்னரசு எனக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். முதல் இரண்டரை வருடம் போராடி மீட்டெடுத்து கொடுத்தார். அதனால் எனக்கு வேலை செய்ய எளிமையாக இருந்தது. தொழில்துறை குறித்து எளிய மக்கள் வரை எதுவும் பேசமாட்டார்கள்; பேச வைக்க வேண்டும் என்று தான் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தோம். இது திட்டமிட்டு எடுத்த முடிவு தான்.
திமுக அரசு அடுத்தடுத்து திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி விட்டு சென்று விடுவார்கள். அது குறித்து பேச மாட்டார்கள். அது சிலசமயம் எங்களுக்கு எதிராகவும் அமைந்தது. எங்களது பிள்ளைகளுக்கே எங்கள் சாதனை தெரியாமல் இருந்தது. அதனால் அது குறித்து தொடர்ச்சியாக பேசினோம், சமூகவலைத்தளங்களில் தொடர்ச்சியாக சொன்னோம். அதனால் மக்கள் அது குறித்து பேச ஆரம்பித்தார்கள்.
திமுக கொண்டு வந்த திட்டமான விடியல் பயணம் என்பதை விவரம் தெரியாதவர்கள் சாதாரணமாக விமர்சிக்கிறார்கள். கட்டணமின்றி பயணிப்பவர்கள் பல்வேறு புதிய விசயங்களைப் பார்க்கிறார்கள். அதைப் போல தங்களையும் மாற்றிக் கொள்ள மெனக்கிடுகிறார்கள். இது பெரிய மாற்றத்தின் தொடக்கம் தானே. எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால் கிருஷ்ணகிரி பகுதியில் ஓலா கம்பெனி வந்த பொழுது அங்கே பணிபுரிவதற்காக என்ன படிக்க வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறார்கள் என்று பத்திரிகை தரவுகள் சொல்கிறது.
இதன் வழியாக படிக்கும் ஆர்வம் மேலோங்குகிறது, வெளியுலகத்தை பார்க்க வைக்கிறோம், ஓரிடத்திலிருந்து இங்கே முதலீடுகளைக் கொண்டு வருகிறோம். அங்கே பெண்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்துகிறோம். இதெல்லாம் விடியல் பயணத்தின் வழியாக மகளிர் உரிமைத்தொகையில் வழியாக நடந்திக் காட்டியிருக்கிறோம். அதனால் அனைத்து தரப்பு மக்களும் பேசுகிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு தொழில்துறை முதலீடுகளை எப்படி கொண்டு வந்தீர்கள்?
தமிழ்நாட்டிற்கென்று முதலீடு என்று வரும் பொழுது முதலில் இந்தியா பற்றிய பார்வையை தமிழ்நாட்டோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள் என்று தான் சொல்வோம். தமிழ்நாட்டில் நடந்த மாற்றத்தையெல்லாம் நாம் உலகநாடுகளுக்கு சுட்டிக் காட்டுகிறோம். நார்வே போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளோடு தமிழ்நாட்டை ஒப்பிட்டு அதைப் போல பாருங்கள் என்று சொல்வோம். சீனாவிற்கு இணையான உற்பத்தி மேம்பாடு எங்களிடத்திலும் உள்ளது. எங்களால் நிறையா உற்பத்தியை செய்து தர முடியும் என்று தமிழ்நாட்டை உலகநாடுகளில் மார்க்கெட்டிங் செய்து முதலீடுகளை கொண்டு வந்திருக்கிறோம்.
இந்தியாவிற்கு எந்த முதலீட்டாளர்கள் வந்தாலும் முதலில் தமிழ்நாட்டிற்கு வந்து முதலீடு செய்வது பற்றி யோசித்து விட்டு தான் அடுத்த மாநிலங்களுக்குச் செல்வார்கள் அந்த அளவிற்கு தமிழகத்தினை பிராண்ட் செய்திருக்கிறோம். தொழில்துறை வளர வேண்டுமென்றால் தமிழ்நாட்டைப் பற்றி பேச வேண்டும். எனவே எங்கு சென்றாலும் தமிழ்நாடு என்ற முத்திரையை பதித்து அதன் வழியாக 10 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து கொண்டு வந்தோம்.
தொழில்துறை அமைச்சராக ஆன பிறகு முதல்வரோடு சென்று வந்த அமெரிக்க பயணம் தமிழகத்திற்கு கொண்டு வந்தது என்ன?
பல நாடுகளுக்குச் சென்று தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் போது இங்கே போடப்படுகிற புரிந்துணர்வு ஒப்பந்தம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அவை எவ்வாறு முதலீடாக மாறுகிறது என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது, வெறும் பேப்பரில் இல்லாமல் முதலீட்டாளர்கள் இங்கே வந்து அலுவலகங்கள் அமைத்து முதற்கட்ட ஆயத்த பணிகள் ஆரம்பிப்பது தான் முக்கியம்.
எல்லா முதலீட்டாளர்களிடமும் நாம் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. யாரெல்லாம் உண்மையாகவே நிறுவனங்களை ஆரம்பிப்பார்களோ, தொழிற்சாலைகளை துவங்குவார்களோ அவர்களோடு தான் ஒப்பந்தமும் செய்தோம். 50 லட்சம் பேருக்கு இந்த 5 ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் வேலைவாய்ப்பு தர வேண்டும் என்று முதல்வர் உறுதியாக இருக்கிறார். 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பினை எட்டி விட்டோம். இன்னும் 18 லட்சம் தான் பாக்கியிருக்கிறது. நிச்சயம் அதை அடைவோம். அமெரிக்க பயணம் மட்டுமல்லாது ஸ்பெயின், துபாய், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று தொழில்துறையில் முதலீடுகளுக்கு 7500 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டோம். இது தமிழக தொழில்துறையில் 65 சதவீதம் செயல்படுத்தப்பட்டதாகவும் மாறியிருக்கிறது.
சாம்சங்க் என்ற பிராண்ட் பிரபலமாக இருந்ததற்கு இணையாக தமிழகத்தில் பேசுபொருளானது அது குறித்து?
சாம்சங்க் நிறுவனம் மீண்டும் 100 பேரை வேலைக்கு எடுக்கப் போகிறோம். மொத்தமாக 3500 பேரை வேலைக்கு வைக்கப் போகிறோம். 1000 கோடி ரூபாய் மீண்டும் முதலீடு செய்யப்போகிறோம் என்றும் எங்களுடைய ஊழியர்களின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றும் சாம்சங்க் நிறுவனமே சொல்லியுள்ளது. இது அந்த நிறுவனம் ஊழியர்களின் மீதும் நமது முதல்வரின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையையும் மரியாதையையும் உணர்த்துகிறது.
எங்கள் குடும்பத்திற்குள் பிரச்சனை உள்ளது. அதனை ஒவ்வொரு படிப்படியாக நாங்கள் சரி செய்து வருகிறோம்.
இன்னும் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டினால் சரி செய்து விடுவோம் என்ற நம்பிகை எங்களுக்கு உள்ளது என்று சாம்சங்க் நிறுவனம் ஊழியர்களிடமும் அரசிடமும் சொல்லியிருக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் என்று வந்தால் பிரச்சனைகள் வரத்தானே செய்யும், அது தானே பிசினஸ் என்றாகவும் இருக்கிறது. ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி சரி செய்ய வேண்டியதை சரி செய்யும் என்று அரசிடம் உத்திரவாதம் அளித்திருக்கிறார்கள்.
தற்போது அதிமுக - பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளது, அது பற்றிய உங்கள் கருத்து?
இந்திய அளவில் வாக்களிக்கிறவர்களையும் தமிழகத்தில் வாக்களிக்கிறவர்களையும் ஒரே மாதிரி பார்க்க கூடாது. நம் மக்கள் சற்று ஆழ்ந்து யோசித்து வாக்களிக்கக்கூடிய படித்த வாக்காளர்கள். இளைய தலைமுறையிடம் வாக்களிப்பதில் சற்று முன் பின் மாற்றம் இருக்கலாம். ஆனாலும் அவர்களும் புதிதாக வருகிற, போகிறவர்களை கண்டுகொள்ளாமல் சித்தாந்த தெளிவோடு வந்த திமுகவிற்கு வாக்களிப்பவர்களாக மாறுவார்கள். தமிழகத்தில் திமுகவின் கொள்கைகள் அதற்கு எதிரான கொள்கைகள் என்று மட்டும் தான் அரசியலாய் இருக்க முடியும். தமிழகத்தில் போட்டி இரண்டு பேருக்குமிடையே தான். ஒன்று திமுக, மற்றொன்று எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுக.
இதற்கு காரணம் என்னவென்றால் திமுகவைப் பொறுத்தமட்டில் பரவலாக்கப்பட்ட வளர்ச்சிக்காகவும், படிப்பிற்காகவும், சுகாதாரத்திற்காகவும், உள்கட்டமைப்பிற்காகவும் இப்படியாக எல்லாவற்றிற்காகவும் நிற்கிறது. எதிர் தரப்பில் அரசியல் செய்கிறவர்கள் மதம் சார்ந்து பிரிவினையினை மையமிட்டு அரசியல் செய்கிறார்கள். வெறுப்பு அரசியல் செய்கிறார்கள். ஆக்கப்பூர்வமான வாதத்தை எடுத்து வைப்பவர்கள் யாருமில்லை. அவர்களோடு இவர்கள் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.
திமுகவை எதிர்க்க வேண்டுமென்று கண்டதையெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்படியெல்லாம் ஆட்கள் இருக்கிறார்களா என்று வெளியில் உள்ளவர்கள் பார்க்கும் போது இது தமிழ்நாட்டிற்கு அவப்பெயரை உண்டாக்குகிறது. அதனால் அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் தயவு செய்து நன்றாக படியுங்கள், எங்களிடம் குறைபாடு இருந்தால் அதை வைத்து விமர்சனம் செய்யுங்கள், அதை விட்டு விட்டு இல்லாத ஒன்றை பேசி ஒரு மாயபிம்பத்தை உருவாக்கி தமிழ்நாட்டை பின்நோக்கி இழுக்காதீர்கள். நீங்கள் செய்த தவறையெல்லாம் திருத்தி நாங்கள் கஷ்டப்பட்டு வளர்த்துக் கொண்டு இருக்கிறோம். அவர்களோடு கூட்டணி வைத்து தமிழ்நாட்டின் பெயரை கெடுக்காதீர்கள்.