
கடந்த 2 வருடங்களுக்கு மேலாகக் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அதாவது சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில், கடந்த சில நாட்களாக அதிக அளவில் பரவி வரும் கொரோனா, தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாகக் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. அதிலும் குறிப்பாக, நேற்று ஒரே நாளில் மட்டும் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை நாட்டில் 2 ஆயிரத்து 710 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஒருவர் என மொத்தமாக நாட்டில் இதுவரை 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மதுரையில் நாளை (01.06.2025) நடைபெறும் திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது திமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு வரும் 50 வயதிற்கு மேற்பட்ட மூத்த நிர்வாகிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும், கொரோனா குறித்து அச்சம் தேவையில்லை எனவும் பாதுகாப்பிற்காக முகக்கவசம் அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.