
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் ஆளுநர் பெயரும் இடம்பெறவே அவர் பெயரும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர் ஒருவரது கன்னத்தில் ஆளுநர் தன் கையால் தட்டிக்கொடுத்த விவகாரம் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, பெண் பத்திரிகையாளர் கோபமடைந்தார். அதற்கு ஆளுநரும் அந்த செய்தியாளரிடம் தன் செய்கைக்கு மன்னிப்பு கோரினார். தொடர்ச்சியான இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசியல் கட்சிகளிடையே எழ ஆரம்பித்துள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களை அநாகரிகமான வார்த்தைகளால் குறிப்பிட்டு ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்த உடன் உடனடியாக நீக்கி விட்டார். இதையடுத்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எஸ்.வி.சேகருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி வெளியிட்ட கருத்துக்காக எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியுள்ளார். மன வருத்தம் ஏற்பட்டுள்ள பத்திரிகை சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.