அரசு ஊழியர்களை தமிழக அரசு அழைத்துப் பேச வேண்டும்! மஜக வேண்டுகோள்!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை தமிழக அரசு அழைத்துப் பேச வேண்டும் என்று தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை செயல்படுத்த வேண்டும், ஒப்பந்த பணி முறையை ஒழித்துவிட்டு நிரந்தர பணிகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டொ-ஜியோ உள்ளிட்ட அரசு ஊழியர் அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தால் அரசு பணிகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
அவர்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்தாமல், அவர்களை அழைத்து தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வேலை நிறுத்தத்தை முறியடிப்பதில் கவணம் செலுத்தாமல், அவர்களோடு சுமூக பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரமுடியும். இதில் தமிழக அரசு கவனம் செலுத்தி அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.