
திண்டுக்கல் மாநகராட்சி காமராசர் பேருந்து நிலையத்தில் இருந்து ஆடலூர், பன்றிமலை, சோலைக் காடு, கொடைக்கானல் கிளாவரை, உட்பட மாவட்டத்தில் உள்ள 9 மலைப்பகுதி கிராமங்களுக்கு புதிய பேருந்துகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மயிலாப்பூர், குட்டத்துப்பட்டியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் 35 குடும்பங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “சிறுமலையில் பட்டா கேட்பவர்களுக்கு வனத்துறையுடன் பேசி அதற்கான வாய்ப்புகள் இருந்தால் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மலைப்பகுதிகளில் வனத்துறை அனுமதி அளிக்கும் பட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை நிதி மூலம் சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது” என்றார்.
அதன்பிறகு, தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்து கேள்விக்கு, பதிலளித்த அவர், “இந்தியாவில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு உள்ளது. வேறு எந்த மாநிலமும் வாழ்வதற்கு தகுதியற்று உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுக் கூற வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு எங்கு கெட்டுள்ளது? தமிழ் நாட்டில் எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வயதுக்கு வந்த பெண்கள் கூட நடந்து செல்லலாம். எந்தவிதமான சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கும் இடமே கிடையாது. தமிழ்நாடு காவல்துறையினர், விமானத்தில் ஏறி அமர்ந்த நபரையே கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.ஸ்காட்லாண்டு காவல்துறையினருக்கு இணையாக காவல் துறையே முதல்வர் வைத்துள்ளார். தமிழ்நாடு மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்கு உறுதி அளித்துள்ளார்” என்றார்.

காவல்துறை மீது திருமாவளவன் வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “யார் தவறு செய்தாலும் அமைச்சராகிய நானே தவறு செய்தாலும் அதனை முதல்வர் ஏற்றுக் கொள்ள மாட்டார். என்ன நடந்தது என்பதை விசாரித்துத் தான் முடிவு எடுப்பார்கள். காவல்துறை மீது குற்றச்சாட்டு சுமத்தப்படும் போது அது உண்மையா என்பதை பார்க்க வேண்டும். தவறு இருந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். திருமாவளவனுக்கு எதிர் கருத்து இல்லை. பாதிக்கப்பட்டு இருந்தால் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்” என்று பதிலளித்தார்.
மேலும், “சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசு எடுப்பது குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் பேசியுள்ளார். அவரது கருத்தை எங்களது கருத்து. முதல்வர் அவரது கருத்தில் இறுதிவரை நிலை யாக என்று கூறினார்