கலெக்டரை கண்டித்து அரசு டாக்டர்கள் போராட்டம்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருப்பவர் சித்தி அத்திய முனவா. இவரை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூர் தவறான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நெல்லை மருத்துவக் கல்லூரியில் அரசு டாக்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவக் கல்லூரி முதல்வரை அவமானப்படுத்திய கலெக்டர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அவருக்கு ஆதரவாக சென்னை மாவட்ட அரசு டாக்டர்கள் சங்கம் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டது. ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. சென்னை மாவட்ட தலைவர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் தலைமையில், செயலாளர் நெடுஞ்செழியன் முன்னிலையில் நடந்த போராட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வரை அந்த மாவட்ட கலெக்டர் மிகவும் தரக்குறைவாக நடத்தியுள்ளார். மற்றவர்கள் மத்தியில் அரசு டாக்டர்கள் அவமரியாதைப்படுத்திய கலெக்டர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது என்றார்.