Skip to main content

வேலூர் மாவட்டம் பிரிப்பதாக அறிவிப்பு; அரக்கோணம் யாருக்கு?

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

 


தமிழகத்தின் நிலப்பரப்பில் வேலூர் மாவட்டம் மிகப்பெரியது. இந்த மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சுதந்திர தினத்தன்று ஆகஸ்ட் 15ந்தேதி, உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வேலூர் மாவட்டத்தை பிரிப்பதாக அறிவித்துள்ளார்.

 

a


வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாகிறது. மாவட்டம் பிரிப்பது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் வரும் 27 மற்றும் 28ந்தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.


மாவட்டம் பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பின்பு, மக்களிடம் கருத்து கேட்பது என்பது வித்தியாசமாக உள்ளது. இதற்கு காரணம் என்னவென விசாரித்தபோது, மாவட்ட எல்லை பிரிப்பதில் பல குழப்பங்கள் உருவாகியுள்ளது தெரியவருகிறது.


வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் நகரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் பிரிக்க வேண்டும் என்பது தான் நீண்ட காலகோரிக்கை. அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது சமீபகால கோரிக்கை.


சென்னை பெருநகரம் வளர்ச்சியடைந்து வருகிறது. அதனால் அரக்கோணம் பெருநகர வளர்ச்சி பகுதியாக அறிவித்து அதனை சென்னை பெருநகர பகுதியோடு இணைப்பதாக ஓராண்டுக்கு முன்பு அறிவித்தது அரசாங்கம். இந்நிலையில் கடந்த மாதம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு நகரை தலைமையிடமாக கொண்டு புதியதாக ஒரு மாவட்டம் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்காக அரசாணையில், அரக்கோணம் வட்டத்தில் இருந்து வடக்கு பகுதி வருவாய் கிராமங்களை செங்கல்பட்டு மாவட்டத்தோடும், தெற்கு வருவாய் கிராமங்களை காஞ்சிபுரம் மாவட்டத்தோடு இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் திடீரென வேலூர் மாவட்டத்தில் இருந்து யாரும் எதிர்பாராத விதமாக ராணிப்பேட்டை என்கிற மாவட்டம் உருவாக்கப்படுகிறது. இந்த ராணிப்பேட்டை மாவட்டத்தின் தலைநகரம் ராணிப்பேட்டையாக இருக்கவே வாய்ப்பு. ராணிப்பேட்டை தலைநகராக இருக்கும் பட்சத்தில் ராணிப்பேட்டைக்கும் அரக்கோணம் நகருக்கும் நீண்ட தொலைவு. இதனால் அரக்கோணம் பகுதி ஆர்வலர்கள் இப்போதே கேள்வி எழுப்பி வருகின்றனர்.


சென்னை பெருநகர வளர்ச்சி பகுதியாக அறிவிக்கப்பட்ட அரக்கோணம் தாலுக்கா, காஞ்சிபுரம் – செங்கல்பட்டு மாவட்டங்களோடு பிரித்து இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபின் புதியதாக ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


அரக்கோணத்தை, ராணிப்பேட்டை மாவட்டத்தோடு இணைக்க வேண்டும் என்றால் பழைய அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் அந்த இரண்டு மாவட்டங்களின் எல்லை குறையும்.   அப்படி செய்யாமல் ராணிப்பேட்டை மாவட்டத்தை உருவாக்கினால் இதன் எல்லை சுருங்கும். இதனால் அதிகாரிகள் என்ன செய்வது என்கிற கேள்வி எழுந்துள்ளது. எப்படி புதிய மாவட்டங்கள் உருவாக்கப்போகிறார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.    இதனால் அரக்கோணம், காஞ்சிபுரம் – செங்கல்பட்டு மாவட்டங்களுக்கா அல்லது ராணிப்பேட்டை மாவட்டத்துக்கா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

'காமராஜருக்கு நடந்த நிகழ்வு எனக்கும் நடந்தது'- பரப்புரையில் முதல்வர் சொன்ன சுவாரஸ்யம்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'What happened to Kamaraj also happened to me' - the chief minister said interestingly in the lobby


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து கோட்டை மைதானம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.

பரப்புரை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டை மேலும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். தேர்தல் சீசனுக்கு மட்டுமே பிரதமர் தமிழகத்திற்கு வருகிறார். வெள்ள நிவாரணம் கேட்டால் தரமாட்டார். தமிழ்நாட்டை வெறுக்கின்ற பிரதமர் மோடிக்கு பதிலாக இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமராக போகிறவர் நிச்சயமாக இந்திய ஜனநாயகத்தின் மேல் உண்மையான மதிப்பும், இந்திய மக்கள் மீது உண்மையான பாசமும், அரசியல் சட்டத்தை மதிக்கின்ற பண்பும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணையாக நிற்பவருமாக இருப்பார்.

இன்று காலையில் நான் பெருமை கொள்ளக்கூடிய ஒரு செய்தியை சமூக வலைத்தளத்தில் பார்த்தேன். நம்முடைய திட்டங்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே முன்னோடியாக இருக்கிறது. இன்று கனடா நாட்டில் காலை உணவு திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த திட்டம் எப்படி உருப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜர் மத்திய உணவு திட்டம் கொண்டு வந்ததற்கு காரணமாக ஒரு சம்பவத்தை சொல்லுவார்கள். பெருந்தலைவர் காரில் போய்க் கொண்டிருந்தபோது விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலரை சந்தித்தாராம். அங்கு காரை நிறுத்தி அவர்களை பக்கத்தில் வரச் சொல்லி 'இன்று பள்ளிக்கு போகவில்லையா?' என்று கேட்டார். அந்த பிள்ளைகள் 'எங்கள் குடும்பத்தில் உணவுக்கே வழி இல்லாததால் எங்க அப்பா அம்மா பள்ளிக்கு அனுப்பவில்லை' என்று சொல்லவும் பள்ளியில் மதிய உணவு போட்டால் அதற்காகவாவது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள் என சிந்தித்து யோசித்து காமராஜர் மதிய உணவு திட்டத்தை தொடங்கினார்.

எனக்கும் அதே மாதிரி ஒரு நிகழ்வு நடந்தது. நான் முதலமைச்சரானவுடன் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். ஒரு குழந்தையை பார்த்து 'என்னம்மா சாப்பிட்டீங்களா' என்று எதார்த்தமா கேட்டேன். அந்த குழந்தை 'வீட்டில் அப்பா அம்மா வேலைக்கு போறாங்க, காலையில உணவு செய்ய மாட்டாங்க அதனால் சாப்பிடவில்லை' என்று சொன்னதும் எனக்கு மனசே சரியில்லை.

கோட்டைக்கு போனவுடனே அதிகாரிகளை அழைத்தேன். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வரணும் திட்டத்தை தயார் பண்ணுங்கள் என்று சொன்னேன். அதிகாரிகள் என்னிடம் ரொம்ப பணிவாக சார்  நம்ம நிதிநிலை ரொம்ப மோசமா இருக்கு. அதோடு இல்லாமல் தேர்தல் அறிக்கையில் கூட நாம் இதை சொல்லவில்லை என்று சொன்னார்கள். உடனே நான் சொன்னேன், 'வாக்குறுதி கொடுக்கவில்லை என்றால் என்ன நம் எதிர்கால தலைமுறை குழந்தைகள் தான். அவர்கள் காலையில் நன்றாக சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் படிப்பது மனதில் மனதில் பதியும். இதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும். நிதி நிலையை சரி செய்யவும் திட்டம் போடுவோம். நீங்க ஃபைலை தயார் பண்ணுங்கள்' என்று சொன்னேன். அந்த ஃபைலில் கையெழுத்து போட்ட கை தான் இந்த ஸ்டாலின் கை''என்றார்.

Next Story

ஏரியில் குளிக்க முயன்ற 4 பெண்கள் உயிரிழப்பு

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
4 women lose their live while trying to bathe in the lake

கோவிலுக்குச் சென்ற நான்கு பெண்கள் ஏரியில் குளிக்கும் முற்பட்ட போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா என்பவர் அவருடைய மகள் லலிதா மற்றும் கல்லூரி மாணவி காவியா அவருடைய தங்கை ப்ரீத்தா ஆகியாருடன் சேர்ந்து வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலுக்கு சென்று வழிபாட்டை முடித்த அவர்கள் கோவிலுக்கு அருகிலேயே உள்ள வேப்பூர் ஏரியை சுற்றி பார்த்துள்ளனர்.

பின்னர் குளிப்பதற்காக ஏரியில் நான்கு பேரும் இறங்கியுள்ளனர். அப்பொழுது நால்வரில் ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்று விட, அவரை மீட்க மற்ற மூன்று பேரும் முயன்றுள்ளனர். இதில் நான்கு பேரும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். நீரில் சிலர் தத்தளிப்பது அந்த பகுதி மக்களுக்கு தெரிய வர, உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் நால்வரும் உயிரிழந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா ஆகிய நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.