Skip to main content

4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி

Published on 29/09/2017 | Edited on 29/09/2017
4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பின்ச் ஆகியோர் முதலில் இருந்தே நிதானமாக விளையாடினர். நூறாவது போட்டியில் விளையாடிய வார்னர் 103-வது பந்தில் சதமடித்தார். அவரை தொடர்ந்து பின்ச்சும் அரை சதமடித்தார்.

இந்த ஜோடியை கேதார் ஜாதவ் பிரித்தார். 35 ஓவரில் 231 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜாதவ் வீசிய பந்தை தூக்கியடித்த வார்னர் அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவர் 119 பந்துகளில் 4 சிக்சர், 12 பவுண்டரியுடன் 124 ரன்கள் எடுத்தார். அவரை தொடர்ந்து சதத்தை நெருங்கிய பின்ச், உமேஷ் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்தார். இவர் 96 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரியுடன் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்மித்தையும் உமேஷ் யாதவ் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். அப்போது ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின்னர் டிராவிஸ் ஹெட் மற்றும் ஹேண்ட்ஸ்கோம்பும் நிதானமாக விளையாடினர்.  இந்த ஜோடி 63 ரன்கள் சேர்த்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் அவுட்டானார். கடைசியில் அதிரடியாக ஆடிய ஹாண்ட்ஸ்கோம்ப், 30 பந்துகளில் ஒரு சிக்சர், 4 பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்து உமேஷிடம் வீழ்ந்தார். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டும், கேதார் ஜாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த போட்டியில் உமேஷ் யாதவ் தனது 100வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். 

இதைதொடர்ந்து 335 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானேவும் ரோகித் சர்மாவும் களமிறங்கினர். இந்த ஜோடி நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தது. 106 ரன்கள் எடுத்த நிலையில் ரகானே ஆட்டமிழந்தார். அவர் 66 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். அவரை தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார். 

ஆனால் அவர் அவசரப்பட்டு ஓடியதால் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா ரன் அவுட்டானார். அவர் 55 பந்துகளில் 5 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கோலி 21 ரன்களில் வெளியேறினார். அதிரடி வீரரான ஹர்திக் பாண்ட்யா 40 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 41 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. கேதார் ஜாதவ் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 67 ரன்கள் சேர்த்தார். மணீஷ் பாண்டே 33 ரன்களும், டோனி 13 ரன்களும் அடித்தனர். இறுதிக்கட்டத்தில், ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியா பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

சார்ந்த செய்திகள்