Skip to main content

இறால் பண்ணைகளை அகற்ற தடையை மீறி சத்யாகிரக போராட்டம் செய்த கிராம மக்கள்!

Published on 28/09/2017 | Edited on 28/09/2017
இறால் பண்ணைகளை அகற்ற தடையை மீறி
சத்யாகிரக போராட்டம் செய்த கிராம மக்கள்!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பிச்சாவரத்தை சுற்றி அரசின் அனுமதி இல்லாமல் மாங்குரோவ் காடுகளை அழிக்கும் வகையில் 300க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர், நிலத்தடிநீர், விவசாயம், கால்நடை மேய்ப்பு என மக்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் வாழ்வாதரத்தை நாசப்படுத்தும் சட்டவிரோத இறால் பண்ணைகளை அகற்ற கோரி பல கிராம மக்கள் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். நியாம் கேட்டு போராடும் மக்களை அரசு கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் பல கட்ட போராட்டங்களை நடத்திய அப்பகுதி மக்கள் கிள்ளை அருகே குச்சிபாளையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இறால் பண்ணைகளை போர்கால அடிப்படையில் அகற்ற வலியுறுத்தி கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்கத்துடன் இணைந்து வியாழக்கிழமை குடும்பத்துடன்  அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் இறால் குட்டைகளில் அமர்ந்து சத்தியாகிரக போராட்டம் நடத்த அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து வியாழன் காலை 6 மணிக்கு குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள்,குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் குச்சிபாளையம் கிராமத்தில் இருந்து இறால் குட்டைகள் அமைந்துள்ள பகுதிக்கு இறால்குட்டைகளை தடை செய் என்ற பாதகைகளை ஏந்திகொண்டு பேரணியாக சென்றனர். அப்போது காவல் துறையினர் பொதுமக்களை அனுமதியில்லை என்று தடுத்து நிறுத்தினர். குடிக்க நல்ல தண்ணீர் கொடுக்க வக்கு இல்லை. எங்களை தடுத்து நிறுத்துகிறீர்களே என்று காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினரின் தடுப்பை மீறி அனைவரும் அதே கிராமத்தில் எம்ஆர்வி என்ற நிறுவனம் நடத்தும் இறால் குட்டையில் அமந்து சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்கள். அப்போது சட்டவிரோத மாக செயல்படும் இறால் குட்டைகளை தடுக்காத தமிழக அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினர். இதில் தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து குடிநீர் கேட்டு கோசங்களை எழுப்பியது அனைவரின் கவனத்தை ஈர்தது.

இதனை தொடர்ந்து போராட்டகளத்திற்கு வந்த சிதம்பரம் வட்டாட்சியர் மகேஷ், மீன் வளத்துறை பரங்கிப்பேட்டை ஆய்வாளர் ஜெயராஜ் உட்பட சம்பந்தபட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வியாழன் மாலை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். ஆட்சியரின் பேச்சுவார்த்தையில் சரியான தீர்வு இல்லையென்றால் வெள்ளிக்கிழமை காலையிலே போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 126 இறால் குட்டைகள் இருப்பதாக அரசின் இணைய தளம் கூறுகிறது. இந்த 76 பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ளது. இந்த 76 இறால் குட்டைகளில் 50 குட்டைகள் தங்களது அனுமதி சான்றை (லைசன்ஸ்) இன்னும் புதுப்பிக்காமல் நடத்துகின்றனர். அரசின் அனுமதி பெற்றது 26 இறால் பண்ணைகள் என்றாலும், சட்டவிரோதமக 400 க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் எவ்வித தடையும் இல்லாமல் செயல்படுகிறது.

இறால் பண்ணைகள் ஊருக்கு மிக அருகாமையிலும், வயல்வெளிகளை நாசப்படுத்தியும் அமைக்கட்டப்படுள்ளது. இதனால் அப்பகுதியை சுற்றி உள்ள கிராமங்களில் குடிநீர் மிகவும் தட்டுப்பாட்டில் உள்ளது. பல கிராமங்களில் ஒரே ஒரு அடிகுழாய் தண்ணீரை நம்பி 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கிறார்கள். இதனை கண்டித்து கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் இப்பகுதியில் உள்ள கிராம மக்களுடன் இணைந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். இத்தகைய தொடர் போராட்டங்களால் கடந்த ஜூலை மாதம் 37 இறால் பண்ணைகளில் உள்ள நீர் மோட்டார்களுக்கு சீல் வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் வந்து அடுத்த சில தினங்களில் அந்த சீல் உடைக்கப்பட்டு மீண்டும் நிலத்தடி நீர் உறுஞ்சப்படுகிறது.

குறிப்பாக கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் இறால் பண்ணைகளின் ஏஜெண்டுகளாக செயல்படுகின்றனர். இவர்கள் கொடுக்கும் ஆதரவில் அனுமதி இல்லாத இறால் பண்ணைகள் செழிப்பாக வளர்ந்துவருகின்றனர். உதாரனமாக கிள்ளை பேரூராட்சி குச்சிபாளையம் கிராமத்தில் எம்.ஆர்.வி நிறுவனம் ஒரேஒரு இறால் குட்டைக்கு அனுமதி பெற்று 10 குட்டைகளை நடத்துகின்றனர். இந்த ஊரில் குடிநீர் இல்லாமல் இக்கிராம மக்கள் 2 கிலோ மீட்டர் நடத்து கிள்ளையில் குடிநீர் பிடிக்க தினமும் வேதனையோடு நடந்துவருகின்றனர்.

- அ.காளிதாஸ்

சார்ந்த செய்திகள்