கடந்த 2019 ஜீலை 27-30 தேதியிட்ட நக்கீரன் இதழில் ’அமைச்சருக்கு ஷேர்! ஒன்றரைக்கோடியுடன் சிக்கிய அதிகாரி’ என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டுயிருந்தோம். திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த 19ஆம் தேதி ரூ.1.50 கோடி பணத்துடன் சென்ற கூட்டுறவுத் துறை திருச்சி இணை பதிவாளர் ரவிச்சந்திரன் பணம் கொண்டு போனதை குறித்து விரிவாக எழுதியிருந்தோம்.
![r](http://image.nakkheeran.in/cdn/farfuture/Q9IKii6ht_sgFEPRumD9Tf6FfdpCAjxn5kyyq28wuZc/1564504536/sites/default/files/inline-images/Ravichandran_0.jpg)
இச்செய்தி வெளியானவுடன் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஏற்கனவே இடமாறுதல் உத்தரவு வந்திருந்தும் புதுக்கோட்டைக்கு செல்லாமல் இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன் திருச்சியில் தொடர்ந்து இருக்கிறார் என்று எழுதியிருந்தோம். ஆனால் நக்கீரனில் செய்தி வெளியான அன்று திடீரென அவர் அப்பணியிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் உமாமகேஸ்வரி உடனடியாக கூடுதல் பொறுப்பேற்க சொல்லி அவரை விடுவித்தனர்.
![o](http://image.nakkheeran.in/cdn/farfuture/Cu9Y0joeZwh8gx2NX1UqAVPTU8YSmp6kj-03eTsZm4Y/1564507456/sites/default/files/inline-images/order1.jpg)
ஏற்கனவே போடப்பட்டிருந்த உத்தரவின்படி தூத்துக்குடியில் இருந்து திருச்சிக்கு வரும் இணைப்பதிவாளர் அருளரசு உடனே பதவி ஏற்க சொல்லி அறிவிக் கப்பட்டுள்ளது.
![o](http://image.nakkheeran.in/cdn/farfuture/duqmPGsU3WNppK8gvXlwMmCzvrknqQk_kVmWkAlK4p4/1564507506/sites/default/files/inline-images/order2_0.jpg)
இதற்கு இடையில் நக்கீரன் செய்தி வெளியானதிலிருந்து ரேசன் கடையில் எடையாளர், உதவியாளர் வேலைக்கு பணம் கொடுத்தவர்கள் அமைச்சர், எம்.பிகள், மா.செ. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிவபதி, பரஞ்சோதி உள்ளிட்ட முக்கியமானவர்களிடம் பணம் கொடுத்தோமே ஆர்டர் போடுவாங்களா? என்று கேட்ட ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே இந்த பணியிடங்கள் நிரப்பக்கூடாது என்று வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தான் தற்போது அந்த இடங்களை நிரப்புவதற்கு ஏகப்பட்ட கோடிக்கணக்கில் பணம் புரண்டு இருக்கிறது என்று எழுதியிருந்தோம்.
எந்த தகுதியும், நிர்ணயம் செய்யாமல் பணம் கொடுத்து அரசு வேலையா என்று கொதிப்படைந்த சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு தயாராக இருக்கிறார்கள். அதே போல் வேலை கிடைக்கவில்லை என்றாலும் நீதிமன்றத்தில் செல்லவோம் என்கிறார்கள் பணம் கொடுத்தவர்கள்.
இந்நிலையில், 29.07.2019 தேதி நீதிமன்றத்தில் தடை ஆணை நீங்கியதும் உஷார் ஆன அமைச்சர் செல்லூர் ராஜூ சூட்டோடு சூடாக இரவோடு இரவாக 183 பேரை தேர்வு செய்யும் பணிகள் மன்னார்புரத்தில் உள்ள கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தில் இருந்து அனைத்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அனைவரும் திருச்சி மன்னார்புரம் அலுவலகத்திற்கு அவசரமாக வரவழைக்கப்பட்டனர். நள்ளிரவில் 183 பேருக்கும் வேலை ஆர்டர் அனுப்பப்பட்டது. பணம் பாதாளம் வரை பாயும் என்பது இது தானோ !