Skip to main content

திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட இரு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம்!

Published on 23/06/2025 | Edited on 23/06/2025

 

Administrators appointed for two newly formed teams in DMK

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காக்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும்  கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தான் மதுரை மாவட்டம் உத்தங்குடியில் கடந்த 1ஆம் தேதி (01.06.2025) திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது திமுகவில் கல்வியாளர்கள் அணி, மாற்றுத்திறனாளிகள் அணி என 2 சார்பு அணிகள் உருவாக்குவதற்காக ஒப்புதலை பொதுக்குழு அளித்திருந்தது. இதன் மூலம் திமுகவில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் கொண்ட கல்வியாளர் அணியும், அதேபோல் மாற்றுத்திறனாளிகள் அணியும் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே இளைஞர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி, மாணவர் அணி, சட்ட வழக்கறிஞர் அணி என திமுகவில் 23 சார்பு அணிகள் உள்ள நிலையில் புதிதாக கல்வியாளர் அணி, மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி கொண்டுவரப்பட்டுள்ளதால் திமுகவில் சார்பு அணிகளின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரு அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரையில் 01.06.2025 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் தி.மு.க. சட்ட திட்டம் விதி 31, பிரிவு 21-ன்படி, கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட தி.மு.க. கல்வியாளர் அணிக்கு தலைவராக ந. செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும் நியமிக்கபடுகிறார்கள். மாற்றுத் திறனாளிகள் அணியின் தலைவராக ரெ. தங்கமும், செயலாளராக டி.எம்.என். தீபக்கும் நியமிக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்