
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி பகுதியைச் சேர்ந்தவர் குமாரி. இவரது தாயார் பத்மா(70). கணவர் வெளியூரில் வேலை செய்து வரும் நிலையில் தாய் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் பரிமளா, முனியம்மாள், செல்வி மற்றும் கோவிந்தன். இரு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி பரிமளா மற்றும் அவரது குடும்பத்தார் குமாரியின் வீட்டு அருகே குப்பையை கொட்டி எரித்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. எதிர் தரப்பைச் சேர்ந்த பரிமளா மற்றும் அவரது குடும்பத்தினர் மூதாட்டி பத்மா மற்றும் குமாரியை சரமாரியாக திட்டி, கம்பால் தாக்கியதில் பத்மாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இதுகுறித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி குமாரி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து எஸ்பி உத்தரவைத் தொடர்ந்து பரிமளா, முனியம்மாள் மற்றும் சிலர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பள்ளிகொண்டா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.