
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள பனர்கட்டா என்ற பகுதியில் இளம்பெண் ஒருவர் காய்கறிகள் வாங்குவதற்காகக் கடைக்குச் செல்ல முற்படுகிறார். அப்போது அந்த பகுதியில் போதையில் இருந்ததாக கூறப்படும் 5 பேர் இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதோடு பாலியல் ரீதியாகத் தொல்லை அளித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பாதிக்கப்பட்ட இளம்பெண் அவர்களைத் தாக்கிவிட்டு அவரது வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இருப்பினும் 5 பேரும் அந்த இளம்பெண்ணை பின் தொடர்ந்து அவரது வீடு வரைக்கும் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் 5 பேரும் அந்த பெண்ணிடம் பிரச்சனையில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அந்த பகுதியில் இருந்தவர்கள், 5 பேரிடம் இருந்து இளம்பெண்ணைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். இருப்பினும் போதை கும்பலானது காப்பாற்ற முயன்றவர்களையும் தாக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டை பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், “இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு பல்வேறு பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த சம்பவத்திற்குக் காரணமானவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்றும் தெரிவித்துள்ளனர். பெங்களூரு நகரத்தில் இளம்பெண் ஒருவர் மாலையில் நடந்து செல்லும் போது அவரிடம் பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.