
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் உள்ள 16 வயது சிறுவனின் அண்ணன் ஒருவர் காதல் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் அந்த சிறுவனைக் கடத்திச் சென்று தாக்கிய விவகாரமானது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக இந்த சிறுவனை ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் காரில் கடத்தி செல்லப்பட்டு மிரட்டப்பட்டார் எனத் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று (16.06.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வேல்முருகன், இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியும், ஏ.டி.ஜி.பி. ஜெயராமனும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது இந்த வழக்கு விசாரணையின் போது ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜி.பி. ஜெயராமனைக் கைது செய்யுங்கள் என நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் ஏ.டி.ஜி.பி. ஜெயராமனை காவல்துறையின் பாதுகாப்பில் வையுங்கள் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி ஆள் கடத்தலுக்கு அரசு வாகனத்தைப் பயன்படுத்திய வழக்கில் ஏ.டி.ஜி.பி. ஜெயராமனைக் காவல் சீருடையிலேயே போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்திலேயே முதன் முறையாக சீருடையுடன் கைது செய்யப்பட்ட முதல் ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் ஆவார். ஜெயராம் கர்நாடக மாநிலம் ராம நகரத்தை சேர்ந்தவர். கன்னட மொழியில் முதுகலை வரலாறு பாடத்தில் எம்ஃபில் முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். கர்நாடக அரசின் குரூப்-பி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஜெயராம், 34 வயதில் தன்னுடைய ஐபிஎஸ் கனவை நிறைவேற்ற யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று பின்னர் தமிழகப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியானார்.
1996 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக சேர்ந்த ஜெயராம் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு ஏஎஸ்பியாகவும், பின்னர் நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் எஸ்பி ஆகவும் பணியில் இருந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று டிஐஜியாக வேலூர், தஞ்சாவூர், கோவை சரகங்களில் பணியாற்றினார். பின்னர் சென்னை வடக்கு இணை ஆணையராகவும் பணிபுரிந்தார். அதன் பிறகு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று தமிழக காவல்துறை மேற்கொள்ளும் ஆப்ரேஷன் மற்றும் குற்ற ஆவண காப்பகங்களில் பணிபுரிந்தார். தற்பொழுது ஆயுதப்படை ஏடிஜிபியாக பணிபுரிந்து வரும் ஜெயராம் அடுத்த ஆண்டு மே மாதம் ஓய்வுபெற உள்ள நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.