
திமுகவின் உயர்மட்டப் பொறுப்புகளில் சில அதிரடி மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளார் தலைவர் மு.க.ஸ்டாலின். திமுகவில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகள் அதிகாரம் மிக்கவை. அந்த வகையில் மறைந்த கலைஞர் மற்றும் பேராசிரியர் ஆகிய இருவரும் திமுகவின் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருந்தனர். முக்கிய முடிவுகள் அனைத்தும் இருவரும் கலந்தாலோசித்தே எடுத்தனர். அதன் பிறகு, பொதுக்குழு, செயற்குழுவில் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதே அணுகுமுறை திமுகவில் தொடர்ந்து வந்த நிலையில், துரைமுருகன் மீது சமீபகாலமாக அதிருப்தி அடைந்திருக்கிறது திமுக தலைமை. இதற்கு பல காரணங்களும் சம்பவங்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுமாறும், அதற்கான விலகல் கடிதத்தை தலைமைக்கு அனுப்புமாறும் துரைமுருகனுக்கு தலைமையின் உத்தரவின் பேரில் சபரீசன் தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல் துரைமுருகனை அதிர்ச்சிடைய வைத்திருக்கிறது. இந்நிலையில், புதிய பொதுச் செயலாளராக, திமுகவின் தற்போதைய பொருளாளர் டி.ஆர்.பாலுவும், புதிய பொருளாளராக அமைச்சர் எ.வ.வேலுவும் நியமிக்க மு.க.ஸ்டாலின் தீர்மானித்துள்ளாராம். இந்த அதிரடி மாற்றம் செப்டம்பர் 15-ந்தேதி நடக்கவிருக்கிறது. அப்போது துரைமுருகன் பதவிப் பறிக்கப்பட்டு, பொதுச்செயலாளராக டி.ஆர்.பாலுவும், பொருளாளராக ஏ.வ.வேலுவும் பொறுப்பேற்கவிருக்கின்றனர். பொதுச்செயலாளர் பொறுப்பேற்கவிருக்கும் டி.ஆர்.பாலுவும் உடல் ரீதியாக பலகீனமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.