
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் அருகே இருக்கும் சின்ன குளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் மகள் காளீஸ்வரி. காளீஸ்வரியின் மகள் பவித்ரா என்பவருக்கும், கரூர் மாவட்டம் பள்ளபட்டி அருகே உள்ள செளந்தபுரம் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக தனது தாயார் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ஒருவருடன் பவித்ராவுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. அதனால் இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், நேற்று அந்த நபருடன் பவித்ரா வீட்டை வீட்டு சென்றுள்ளார். இதனால் அவமானம் அடைந்த பவித்ராவின் பாட்டி செல்லம்மாள், மகள் காளீஸ்வரி இருவரும் பவித்ராவின் பெண் குழந்தை இருவரையும் கொன்றுவிட்டு, வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இடையன்கோட்டை போலீசார் 4 பேரின் உடலையும் மீட்டு திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.