Skip to main content

சேலத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை; குமுறலில் திமுக நிர்வாகிகள்!

Published on 11/06/2025 | Edited on 11/06/2025
bb

காவிரி டெல்டா பாசனத்திற்காக, மேட்டூர் அணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூன் 12, 2025) திறந்து வைக்கிறார். இதையடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தும் பேசுகிறார்.  

இதற்காக முதல்நாள் (ஜூன் 11) மாலையே சேலம் மாவட்டம் மேட்டூருக்கு வந்து விடும் முதல்வருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். சுற்றுலாத்துறை அமைச்சரும், சேலம் மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், எம்.பி.,க்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பம்பரமாய் சுழன்றடித்து விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.  

பவானி & மேட்டூர் எல்லையில் பெரும்பள்ளம் பகுதியில் முதல்வரை ஆடல், பாடல், செண்டை மேளம் முழங்க வரவேற்கின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆள்களை திரட்டி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வரை வரவேற்க வரும் ஆள்களுக்கு தலா 200 ரூபாய்,  முட்டையுடன் சிக்கன் பிரியாணி, பிஸ்கட் பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படுகின்றன. ஆள்களை அழைத்து வருவதற்கான வாகன ஏற்பாடு, போக்குவரத்துச் செலவு, 200 ரூபாய் ஆகிய பொறுப்புகளை மா.செ.க்களே ஏற்றுக் கொண்டதால் மாவட்ட, ஒன்றிய, பகுதி நிர்வாகிகளுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது என்கிறார்கள் நிர்வாகிகள். எனினும், கொடி நடுதல், பிளக்ஸ் பேனர், ஊடக விளம்பரங்கள் ஆகியவற்றுக்காக கணிசமான லகரங்கள் மொய் எழுதிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, சேலத்திற்கு வரும் முதல்வர் இந்த முறை கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்துப் பேசுகிறார். அதனால் மா.செ.க்களுக்கு எதிரான கோஷ்டியினர் புகார் மனுக்கள் சகிதமாக தயார் நிலையில் இருப்பதால், கட்சிக்குள் ஏகத்திற்கும் பரபரப்பு எகிறிக் கிடக்கிறது.  

dmk salem

                                 நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி

இது தொடர்பாக, சேலம் மேற்கு மாவட்ட திமுக மூத்த உடன்பிறப்புகளிடம் பேசினோம். ''சேலம் மேற்கு மா.செ.வான டி.எம்.செல்வகணபதி எம்.பி. மீது மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள மூத்த உ.பி.க்களுக்கு பலத்த அதிருப்தி உள்ளது. அவர், மறைந்த வீரபாண்டியாரின் ஆதரவாளர்களை முற்றாக புறக்கணிக்கிறார். தனது ஆதரவாளர்கள், உறவினர்களுக்கு மட்டுமே முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார். 

இதுகுறித்து நக்கீரன் இதழ் ஏற்கனவே விரிவான செய்தி வெளியிட்டுள்ளது. செல்வகணபதிக்கு எதிரான கோஷ்டி, கட்சித் தலைமைக்கும் புகார் அளித்துள்ளது.

இந்தநிலையில்தான், சேலம் மண்டல பொறுப்பு அமைச்சரான எ.வ.வேலுவின் உதவியாளர் சில நாள்களுக்கு முன்பு, மேட்டூரைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளை செல்போனில் அழைத்தார். கட்சி தொடர்பான குறைகளைக் கேட்க அமைச்சர் நேரம் ஒதுக்கி உள்ளதாகவும், அவர் தங்கியுள்ள ரேடிஸன் ஹோட்டலுக்கு வருமாறும் அழைத்து இருந்தார்.

மேட்டூர் முன்னாள் எம்எல்ஏ கோபால் உள்பட இருபதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அங்குச் சென்றனர். அங்கிருந்த அமைச்சரின் ஆள்கள், அமைச்சர் வர கொஞ்சம் நேரம் ஆகும். அதற்குள் சாப்பிட்டு விடுங்கள்,' என்று அழைத்துள்ளனர். அவர்களோ, 'நாங்கள் சாப்பிடுவதற்காக வரவில்லை. அமைச்சர் வரட்டும். பார்த்துக்கலாம்,' என்று கொஞ்சம் முறுக்கிக் கொண்டு காத்திருந்தனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு வந்ததும், அவர்களை கையோடு சாப்பிட அழைத்துச்சென்றார். மட்டன் பிரியாணி விருந்து பரிமாறி அவர்களை குளிர்வித்துள்ளார்.

இதற்கிடையே, மேற்கு மா.செ.வான டி.எம்.செல்வகணபதி, மத்திய மா.செ.ராஜேந்திரன், கிழக்கு மா.செ. எஸ்.ஆர்.எஸ். ஆகியோரும் அதே ஹோட்டலுக்கு வந்தனர். அவர்களையும் எ.வ.வேலு பக்கத்தில் அமர வைத்துக் கொண்டதைப் பார்த்ததும், புகார் மனுக்களுடன் சென்றவர்கள், 'இதற்கு மேல் என்னத்த பேசுவது? என்று விரக்தி அடைந்தனர். மேலும், இப்போது விரிவாகப் பேசநேரமில்லை. சென்னைக்கு அவசரமாக கிளம்ப வேண்டியதிருக்கிறது என்று சொல்லிவிட்டு, அவர்களிடம் இருந்து புகார் மனுவை மட்டும் பெற்றுக்கொண்டு கிளம்பி விட்டார்.  

dmk salem

 

                                      மேட்டூர் முன்னாள் திமுக எம்எல்ஏ கோபால்

மேட்டூர் 5வது வார்டில் தொடர்ந்து மூன்று முறை கவுன்சிலராக இருந்த அப்துல் சலாமை நீக்கிவிட்டு, கடந்த 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அவரை தோற்கடிக்க அதிமுகவுடன் கூட்டுச் சேர்ந்து வேலை செய்த அன்பழகனை வார்டு செயலாளராக்கி இருக்கிறார் டி.எம்.எஸ். இதன் பின்னணியில் மேட்டூர் ந.செ., காசி விஸ்வநாதன் இருப்பதாகவும், அவர் அதிமுகவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் சொல்கின்றனர்.  

கொளத்தூர் ஒன்றியத்தில் ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்த தவசிராஜாவை தூக்கிவிட்டு, அந்த இடத்திற்கு அனுபவமே இல்லாத தன் உறவினரான மிதுன் என்பவரை நியமித்திருக்கிறார் டிஎம்எஸ்.  2026 சட்டமன்ற தேர்தலில் மேட்டூர் ந.செ. காசி விஸ்வநாதன் அல்லது மிதுன் ஆகிய இருவரில் ஒருவரை வேட்பாளராக்க டிஎம்எஸ் திட்டமிட்டு அவர்களை புரமோட் செய்து வருகிறார்.  

ஆரம்பத்தில் செல்வகணபதிக்கு நெருக்கமாக இருந்த கொங்கணாபுரம் பரமசிவத்தை ஓரங்கட்டுகிறார். கடந்த தேர்தலில் மேட்டூர் வேட்பாளராக களமிறக்கப்பட்ட சீனிவாசபெருமாள், எடப்பாடி நல்லதம்பி ஆகியோரையும் ஓரங்கட்டிவிட்டார். களத்தில் இறங்கி வேலை செய்ய இயலாத வயதான ஆள்களை எல்லாம் ஒ.செ. பொறுப்பில் நியமித்துள்ளார்,'' என்கிறார்கள் சேலம் மேற்கு மாவட்ட உ.பி.க்கள்.
 
சேலம் மத்திய மாவட்ட திமுகவோ கிட்டத்தட்ட ஐசியூ பிரிவில் இருக்கிறது என்று புலம்புகிறார்கள். ''சேலம் மாவட்டத்திற்கு மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜியை மண்டல பொறுப்பாளராக நியமிப்பார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் அமைச்சரும்,மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன்,  தனக்கு நெருக்கமான அமைச்சர் எ.வ.வேலுவை மண்டல பொறுப்பாளராக கொண்டு வந்துவிட்டார்.  

எ.வ.வேலு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சில நாளில், நிர்வாகிகள் கூட்டம் போட்டார். 'வரும் தேர்தலில், சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும்ஜெயிச்சிடுவோம்ல,' என இரண்டு முறை மைக்கில் கேட்டார். அந்த கூட்டத்தில் ஒருவரிடம் இருந்தும்கூட, 'ஜெயிச்சிடுவோம்' என்று வார்த்தையே வரவில்லை. நொந்துபோன எ.வ.வேலு, 'என்னப்பா... ஏதாவது சொல்லுங்கப்பா...' என்று மீண்டும் கேட்ட பிறகுதான், 'ஜெயிச்சிடுவோம்' என்று கோரஸ் பாடினார்கள்.  

dmk salem

                                   அமைச்சர் ராஜேந்திரன்

மத்திய மா.செ. ராஜேந்திரனுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவருடன் மற்ற நிர்வாகிகள் யாரும் அன்னம் தண்ணீ புழங்கக்கூடாது என்று கட்டளையிட்டு விடுவார். அதையும் மீறி தொடர்பில் இருந்தால் அவர்களையும் கட்டம் கட்டுவிடுவார்.  

மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான அருண் பிரசன்னாவை, அந்தப் பொறுப்புக்கு கொண்டு வரக்கூடாது என்று அமைச்சர் ராஜேந்திரன் பல வழிகளில் முயன்றார். இத்தனைக்கும் அவர் அமைச்சருடன் நெருக்கமாகத்தான் இருந்தார். தேர்தல் நேரத்தில் அவருக்காக செலவும் செய்திருக்கிறார்.  

அருண் பிரசன்னா, ஓமலூர் அல்லது சேலம் மேற்கில் எம்எல்ஏ சீட் கேட்பார் என்பதாலும், கட்சிக்குள் அவர் வளர்ந்து விடக்கூடாது என்பதாலும் அவரை ஒடுக்கி வைக்க முயன்றார். கட்சி நிகழ்ச்சிகள் எதற்கும் அருணை அழைப்பதில்லை என்பதோடு, அவருடன் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் கட்டளையிட்டுள்ளார். இதனால் அவர் கடும் மன உளைச்சலில் உள்ளார்.  

சூரமங்கலம் பகுதியில் தனிப்பட்ட செல்வாக்குடன் உள்ள கவுன்சிலர் சக்கரை சரவணன், மாஜி மாநகர செயலாளர் ஜெயக்குமார் ஆகியோரை சாதாரண ஒரு பிரச்னைக்காக கட்சியைவிட்டு கட்டம் கட்ட வைத்தார் ராஜேந்திரன். இரண்டு ஆண்டுக்கும் மேலாக அவர்கள் கட்சிக்கு வெளியே இருக்கிறார்கள்.  

சேலம் தெற்கு ஒ.செ. மாணிக்கம், சாதி வெறியாட்டம் ஆடிய சம்பவம் தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணிக்கத்தை கட்சி மேலிடம் மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்துவிட்ட நிலையில், ஜெயக்குமார், சக்கரை சரவணன் ஆகியோர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை முடிவுக்கு வராததற்கு ராஜேந்திரனின் தனிப்பட்ட காழ்ப்புணர்வுதான்காரணம்.
 
சேலம் மத்திய மா.செ.வாக ராஜேந்திரனை நியமிக்க வேண்டும் என்று அறிவாலயத்திற்கு பலமுறை நேரில் சென்று பேசி இருக்கிறார் மாஜி அவைத்தலைவர் எஸ்.டி.கலையமுதன். அவர் மேயர் சீட் கேட்டு அழுத்தம் கொடுத்தார் என்பதற்காக அவரை ஓரம் கட்டினார். இதே ராஜேந்திரனால் ஒதுக்க வைக்கப்பட்டிருந்த ரகுபதியை, அவரே பின்னாளில் மாநகர செயலாளராக்குகிறார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கன்னங்குறிச்சி பேரூராட்சித் தலைவர் குபேந்திரனையும் ஒதுக்கி வைத்திருக்கிறார். சேலம் மாநகராட்சி கவுன்சிலர்களில் 25க்கும் மேற்பட்டோர் அமைச்சர் மீது அதிருப்தியில் உள்ளனர்,'' என குமுறுகிறார்கள் சீனியர் உடன்பிறப்புகள்.  

சேலம் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் பேசினோம். ''சேலம் கிழக்கு மா.செ. எஸ்.ஆர்.சிவலிங்கம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கள்ளக்குறிச்சி தொகுதியில் சீட் கேட்டிருந்தார். அமைச்சர் எ.வ.வேலுவை வெயிட்டாக 'கவனித்து' இருந்ததால் எப்படியும் சீட் கிடைத்து விடும் என நம்பியிருந்தார். அதற்காக பிரச்சார வாகனம் கூட தயார் செய்துவிட்டார். கடைசியில் அவருக்கு சீட் கிடைக்காமல் போகவே, பெருத்த ஏமாற்றம் அடைந்தார்.  

dmk salem

                                          எஸ்.ஆர்.சிவலிங்கம்   

எஸ்ஆர்எஸ், உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். சமூக ரீதியாக அவர் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், சட்டமன்ற தேர்தலில் இனி அவருக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது. இதையெல்லாம் மனதில் வைத்துதான், அவரை குளிர்விக்கும் நோக்கில் ராஜ்யசபா எம்பியாக்கி இருக்கிறது கட்சிமேலிடம்.

ஒன்றியம், நகரம், செயற்குழு, பொதுக்குழு என ஒவ்வொரு பதவியையும் பணம்வசூலித்துக் கொண்டுதான் ஆள்களை நியமனம் செய்ய பரிந்துரைத்தார்,எஸ்ஆர்எஸ். இப்போது ராஜ்யசபா எம்பியாகவும் ஆகிவிட்டார். எப்படிப் பார்த்தாலும் அவருடைய கல்லா நிரம்பி விட்டது.  ஆனால், டெண்டர் பணிகளை துறை அமைச்சரும், மா.செ. மட்டுமே இப்போது வரை 15 முதல் 20 சதவீதம் வரை கமிஷன் கல்லா கட்டி வருகின்றனர். டெண்டர்கமிஷனில், ஒன்றியம், நகரம், கிளை நிர்வாகிகளுக்கு இதுவரை சல்லி பைசாபிரித்துக் கொடுத்ததில்லை. இதுகூட பரவாயில்லை. ஆனால் பணம் வசூலித்துக்கொண்டு, ஊராட்சி நிதியில் கையாடல் செய்தவரையும், தகுதியேஇல்லாதவர்களையும் பதவியில் நியமித்துள்ளதுதான் வருத்தம் அளிக்கிறது,''என புலம்புகிறார்கள் திமுக நிர்வாகிகள்.  

''இவை ஒருபுறம் இருக்க, கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மா.செ.க்களும்முதல்வருடன் இருப்பதால், அதிருப்தி நிர்வாகிகள் வெளிப்படையாக புகார் சொல்ல மாட்டார்கள். பெயரளவுக்குதான் இந்த கூட்டம் நடக்கும்,'' என்கிறார்கள் ஒரு தரப்பினர்.  

நடிகர் விஜய்யின் அரசியல் வரவு, ஆளுங்கட்சி மீதான அதிருப்தி, அதிமுக&பாஜக கூட்டணி என வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக பலமான தாக்குதல் இருக்கலாம் எனப் பேசப்படும் நிலையில், அதிருப்தி கோஷ்டியினரை சமாதானப்படுத்தி, அரவணைத்துச் செல்வதே திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் மூத்த உடன்பிறப்புகள்.