
இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட்தேர்வு மதிப்பெண்களில் முறைகேடு செய்து, குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற உதவியதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொருவரை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை பத்திரிக்கையாளார் ஒருவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த பதிவை மேற்கோள்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “நீட் தேர்வு தகுதியைப் பற்றியது அல்ல, சந்தையைப் பற்றியது மட்டுமே என்பதை நிரூபிக்கும் மற்றொரு வழக்கு. அதனால்தான் நாங்கள் அதை சத்தமாகவும் தெளிவாகவும் சொல்கிறோம் நீட் தேர்வு என்பது முறையானது அல்ல (NEET is not NEAT). அதற்கான எல்லா காரணங்களும் எங்களிடம் உள்ளன. தரம், தரம் என்றார்கள். நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது.
நீட் எனும் தேர்வுமுறையே ஒரு ஒழுக்க (moral) ஊழல். அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான். நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல். ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. (RSS - BJP) மாநாடுகளில் காட்சிப்பொருளாக (showpiece) ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை” எனக் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.