Skip to main content

எந்த “மேலிடத்திற்காக" இந்த ஈனச் செயல்? நிர்மலா தேவிக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

Published on 16/04/2018 | Edited on 16/04/2018


எந்த “மேலிடத்திற்கு" இப்படிப்பட்ட ஈனச் செயலில் ஈடுபட முயன்றார் நிர்மலா தேவி என்பதை விசாரித்து அக்குற்றாவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரியின் பேராசிரியரான நிர்மலாதேவி, கல்லூரியில் படித்து வரும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் போக்கில் அலைபேசியில் பேசிய ஆடியோ தற்போது வாட்ஸ்ஆப், சமூகவளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கல்லூரி பேராசிரியரின் இந்த அதிர்ச்சிமிக்க பேச்சு பொதுமக்களிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கல்லூரி நிர்வாகமானது பேராசிரியர் நிர்மலா தேவியை இடைநீக்கம் செய்தது. இதை தொடர்ந்து இன்று கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துசெல்லும் வகையில் பேசிய பேராசிரியரை கைது செய்யவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பேராசிரியரை கைது செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து பேராசிரியர் நிர்மலா தேவி மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விரைவில் நிர்மலா தேவி கைது செய்யப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 


இந்நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேராசிரியர் நிர்மலா தேவிக்கு கடும் கண்டனம் தெரிவித்து டிவிட்டர் பதிவில் கூறியதாவது,

கல்லூரி மாணவிகளை ஒரு பேராசிரியையே தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சித்திருப்பது அதிர்ச்சியளிப்பதோடு கடும் கண்டனத்திற்குரியது. அவரை உடனடியாக கைது செய்து, எந்த “மேலிடத்திற்கு" இப்படிப்பட்ட ஈனச் செயலில் ஈடுபட முயன்றார் என்பதை விசாரித்து அக்குற்றாவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும்.

கல்வியை போதிக்க வேண்டிய பேராசிரியர் ஒருவரே கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை நாசமாக்க முயன்ற இந்தப் பிரச்சினையில், வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்