Skip to main content

டிரம்ப் vs மஸ்க்...விசுவாசி வில்லனான கதை...ஹாலிவுட்டை மிஞ்சும் மோதல்...அடுத்து என்ன நடக்கும்?

Published on 07/06/2025 | Edited on 07/06/2025

 

 Trump vs Musk...A story of a believer turned  villain! A clash that surpasses Hollywood...What will happen next?

டிரம்ப், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்று 150 நாட்களை நெருங்கிக்கொண்டிருக்கிறார்.

ஒரு நாட்டின் தலைவரின் தலைமைப்பண்போ, செயல்பாடோ அவரது ஆட்சிக்காலத்தின் இறுதியில் தான் பெரும் கவனம் பெற்று விவாதமாக மாறும். ஒருவேளை, அந்த தலைவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றால் அவரின் செயல்பாடுகள் அவரது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும். ஆனால், அப்படி அவர் போட்டியிடவில்லை என்றால், அடுத்து வரப்போகும் தலைவர் யார், எப்படி செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுக்கவே இருக்கும். 

இப்படித் தான் இருந்தது அமெரிக்காவில்...ஜோ பைடன், அவரது மோசமான உடல்நிலைக் காரணமாக, அரசியலில் வலுவாக செயல்பட முடியவில்லை. Make America Great Again (MAGA) என்னும் கோஷத்துடன் வந்த டிரம்ப், பைடனின் இயலாமையை சரியாக பயன்படுத்தியது நாம் அனைவரும் அறிந்ததே. பைடன் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.  அவரைத் தொடர்ந்து வந்த கமலா ஹாரிஸ் வீழ்த்தப்பட்டார். டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபரானதும், அவர் எடுத்த முதல் முக்கியமான முடிவு 'நாட்டை விட தனக்கு யார் விசுவாசமாக இருப்பார்களோ அவர்களை அருகில் வைத்துக் கொள்வது'. 

முதல் முறையாக டிரம்ப் அதிபராக வந்தபோது அவர் இங்கே தான் சறுக்கினார். ஏனென்றால், அப்போது அவர் நியமித்த அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அவருக்கு எதிராகவும், நாட்டிற்கு, சட்டத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டனர். (அப்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உட்பட... 2020 தேர்தலில் டிரம்ப் தோல்வியை ஏற்காத அவரது ஆதரவாளர்கள் பென்ஸை தூக்கிலிடவேண்டும் என கோஷம் எழுப்பியது தனி கதை). 

முதல் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட அனுபவத்துடன் டிரம்ப் இரண்டாவது முறை வந்த பிறகு, அமைச்சர்களை, அதிகாரிகளை பார்த்துப் பார்த்து நியமித்தார். அவரது நியமனங்கள் எவ்வளவு சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் பரவாயில்லை, அவர் உறுதியாக நின்றார். ஆனால், இம்முறை மீண்டும் ஒரு சறுக்கல்...யாரால் வந்தது? அவரின் உயிருக்கு உயிராக இருந்த எலன் மஸ்க்கால்...டிரம்ப்புக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சட்ட போராட்டம், மாணவர்கள் கைது செய்யப்படும் விவகாரம், வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா நடைமுறையை இறுக்குவது என இதனைப் பிரச்சனைகளையும் தாண்டி டிரம்ப் - மஸ்க் மோதல் தான் அமெரிக்காவில் பேசுபொருளாகியுள்ளது. 

விசுவாசி வில்லனான கதை: 

அமெரிக்காவில் ஒரு புதிய அதிபர் பதவியேற்று, அவரின் முதல் 100 நாள் ஆட்சிக்காலம் பெரிதும் கவனிக்கப்படும், விவாதிக்கப்படும். ஏனென்றால், இந்த முதல் நூறு நாட்கள் ஒரு அமெரிக்க அதிபரின் நான்காண்டு ஆட்சிக்கு முன்னுரையாக பார்க்கப்படுகிறது. இந்த முதல் நூறு நாட்களில் அதிபரின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறதோ, அவரின் முழு ஆட்சிக்காலத்திலும் அப்படித்தான் சற்றே ஏறக்குறைய இருக்கும் எனப் பெரும்பாலும் நம்பப்படுகிறது. இப்போது, இந்த நடைமுறை பல நாடுகளில் இருக்கிறது. டிரம்ப்பை பொறுத்தமட்டில், இந்த நடைமுறை சற்றே வித்தியாசமானது. ஏனென்றால், முதல் நூறு நாட்களை கடந்தும் டிரம்ப்பின் ஒவ்வொரு நாட்களையும் அமெரிக்காவும், உலக நாடுகளும் மிகவும் கூர்ந்து கவனிக்கின்றன...ஒவ்வொரு நாளும் தலைவன் செய்யும் சம்பவம் அப்படி! 

அடிப்படையில் டிரம்ப் ஒரு கணிக்க முடியாத தலைவர். அவர் ஒரு unpredictable leader என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். எப்படி யோசிப்பார், எந்த முடிவை எப்படி, எவ்வாறு எடுப்பார், எப்போது கோபப்படுவார் என்பவை அனைத்தும் அவருக்கே வெளிச்சம்...(உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் நடந்துகொண்ட விதம் ஒரு சின்ன சாம்பிள் தான்). டிரம்பின் குணாதிசயங்களில் சற்றும் வேறுபாடில்லாத ஒரு முக்கிய நபராக நாம் மஸ்க்கை குறிப்பிடலாம். இருவருக்குமான ஒற்றுமை அதிகம்...வணிகப்பின்னணி, வலதுசாரி கொள்கையை ஆதரிக்கக்கூடியவர்கள் என்பதில் தொடங்கி யார் பெரியவர் எனப் போட்டி வந்தால் அவர்களை நிருபிக்க எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள் என்பது வரை! இந்த ஒற்றுமை தான் அவர்களை நெருக்கமாக கொண்டுவந்தது. இப்போது அதே ஒற்றுமை தான் அவர்களை நெருக்கடியில் தள்ளியுள்ளது. 

டிரம்ப், மஸ்க் இருவருமே அதிக வரிக்கு எதிரானவர்கள். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் தொழிலதிபர்களாக இருக்கும் பின்னணி. டிரம்ப், வரியை முக்கிய ஆயுதமாக மாற்றி, அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளின் மீது பரஸ்பர வரி விதித்தார். கலிஃபோர்னியாவில் உள்ள அதிக வரி நடைமுறை மற்றும் தனது தொழிலுக்கு ஏற்ற வசதியோ, வளர்ச்சியோ இல்லை என்பதால் அதனை வேறொரு அமெரிக்க மாகாணத்திற்கு மாற்றினார் மஸ்க். இப்படி அதிக வரி விதிப்பு, பைடன் ஆட்சிக்காலத்தில் கிடைத்த ஏமாற்றம், சட்டவிரோத குடியேற்றம், மற்றும் அதீத அரசாங்க கட்டுப்பாடுகள் போன்ற காரணங்கள் மஸ்க்கை டிரம்பிடம் நெருங்க வைத்தன. 

பைடன் அரசாங்கத்தில் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்த, வரிகள், அரசாங்க கட்டுப்பாடுகளை குறித்து தனது எதிர்ப்பை பதிவுசெய்ய, தனது கொள்கைகளை பிரபலப்படுத்த மஸ்க் தான் வாங்கிய ட்விட்டர் (இப்போது X) தளத்தை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார். டிரம்பும் சமூக வலைதள பிரியர் என்பதால் இவர்கள் இருவரும் பைடனுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். அதுதான் இவர்களின் நெருக்கத்திற்கு ஆரம்பப் புள்ளி. பிறகு, ட்விட்டரில் தடைசெய்யப்பட்ட டிரம்ப், மஸ்க் வந்தவுடன் மீண்டும் தனது றெக்கைகளை ட்விட்டரில் பறக்கவிட்டார். ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக இருந்த மஸ்க், தனது மாஸ்க்கை கழற்றிவிட்டு, வலதுசாரியாக மாறி, உண்மையான ஆதரவை டிரம்புக்கு அளித்தார். 

 Trump vs Musk...A story of a believer turned  villain! A clash that surpasses Hollywood...What will happen next?

குடியரசுக் கட்சியினரும், உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் நம் பக்கம், உலகின் சக்திவாய்ந்த தலைவரும் நம் பக்கம் தான், என இருவரின் ஒற்றுமையையும் கொண்டாடினர். டிரம்பிற்கு தார்மீக ஆதரவு என்பதை தாண்டி, அவரின் பிரச்சாரத்திற்கு நிதியுதவியும் அளித்தார் மஸ்க் - டிரம்பை ஆதரித்தால் பல வணிக நலன்கள் வரும் என மஸ்க் நம்பினார். 'டிரம்ப்பால்  மட்டுமே ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும்' என மஸ்க் பிரச்சாரம் செய்தார். அவரின் தீவிர பிரச்சாரம், மஸ்க் டிரம்ப்பின் விசுவாசியாக, அபிமானியாக மாறிவிட்டார் எனக் காட்டியது. 

பைடனின் தாமதமான விலகல், கமலா ஹாரிஸிடம் இருந்த குறைவான காலம், பைடனுக்கு எதிராக டிரம்ப்பின் தனிப்பட்ட தாக்குதல், மஸ்க்கின் திடீர் டிரம்ப் பாசம் என பல படிக்கட்டுகளின் உதவியுடன் மீண்டும் வெள்ளை மாளிகையில் கால் வைத்தார் டிரம்ப். டிரம்ப்பின் கால்கள் முன்செல்ல, மஸ்க்கின் கால்கள் பின்தொடர்ந்தன. தன்னுடைய முழு நம்பிக்கை நட்சத்திரமாக மாறிவிட்டதால், டிரம்ப் மஸ்க்கை தன் அருகே நிழல்போல வைத்துக் கொண்டார். ஒரு தொழிலதிபருடன் சேர்ந்து அரசாங்கத்தை நடத்துவது, அவரை வைத்துக்கொண்டே மிக முக்கியமான ராஜ்ஜிய முடிவுகளை எடுப்பது, பல நாட்டுத் தலைவர்களின் சந்திப்பில் அவரை கலந்துகொள்ளச்செய்வது என்பவை நாம் இதுவரை கேள்விப்படாத, பார்த்திடாத ஒன்று. 

கணிக்கமுடியாத தலைவராக இருக்கும் டிரம்ப்பின் ஆட்டத்தில் இது ஒரு பகுதி. டிரம்ப்பின் முதல் 100 நாட்களில் மஸ்க் ஆடிய ஆட்டம் யாரும் எதிர்பார்த்திடாத ஒன்று. தன் நம்பிக்கை நட்சத்திரத்தை கௌரவிக்கும் வகையில், மஸ்க்கிற்கு பிரத்யேகமான ஒரு துறையை (அரசாங்க செயல்திறன் துறை) டிரம்ப் உருவாக்கினார். மஸ்க்கோ இந்த அரசாங்க துறையை அவரின் சொந்த நிறுவனத்தை போல் நடத்தத் தொடங்கினார். மைதானம் கிடைத்துவிட்டது. சும்மா விடுவாரா? செவ்வாய் கிரகத்தின் மீது இருந்த தன் பார்வையை மீண்டும் பூமி பக்கம் திருப்பி, இங்கு பல நாடுகளுக்கு அமெரிக்கா அளிக்கும் நிதியுதவியை (USAID) நிறுத்தினார் மஸ்க். வறுமையில் தவித்த பல நாடுகளுக்கு மிக முக்கிய நிதி ஆதாரமாக இருந்த இந்த நிதியுதவியை நிறுத்தி, டிரம்ப்பால் வழங்கப்பட்ட தன்னுடைய பதவிக்கு நீதி அளித்தார். அதையும் தாண்டி பல திட்டங்கள் நிறுத்தப்பட்டன, பல அரசாங்க ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். 

டிரம்ப்பின் ஆசிர்வாதத்துடன் மஸ்க் பல அரசாங்க விவகாரங்களில் மூக்கை நுழைத்தார். தன்னுடைய நிறுவனத்திற்கு அளிக்கும் கட்டளையைப் போல, மஸ்க் பல மத்திய அமைச்சர்களுக்கு கட்டளையிட்டார் என பேசப்பட்டது. டிரம்ப்பிற்கு விசுவாசமாக இருந்த பல அமைச்சர்கள், மஸ்க்கிற்கு அப்படி இல்லை. ஆனால், டிரம்ப் அளித்த சுதந்திரத்தினுடன் மஸ்க் தொடர்ந்து இயங்க ஆரம்பித்தார். எண்ண முடியாத பண பலமும், எண்ணற்ற அதிகாரமும் இங்கு இருந்ததால் இருவரும் பறக்க தொடங்கினர். நிச்சயமற்ற கனவுகளுடன்! ஆனால், இவர்கள் இருவரும் பொறுமையில்லாதவர்கள், நிதானமற்றவர்கள் என்பதால் இந்த கூட்டணி நீண்ட நாட்கள் நீடிக்காது என பல மாதங்களாக பேசப்பட்டது. அது உண்மைதான் என இப்போது நிரூபிக்கப்பட்டு விட்டது. 

மஸ்கின் சுதந்திரம் மூன்று மாதத்தில் முடிவிற்கு வந்துவிட்டது. இந்த கூட்டணி உடைந்ததற்கு மிக முக்கிய காரணம் டிரம்ப் கொண்டு வந்த ஒரு மசோதா. மஸ்கின் கவனம் அரசாங்கத்தின் மீது இருந்ததால் அவரின் தொழில் சற்று இறக்கத்தைக் கண்டது. சிறப்பு அரசாங்க ஊழியராக இருந்த மஸ்க், அரசாங்க செயல்திறன் துறையில் இருந்து 130 நாட்களுக்கு பிறகு தன்னை கடந்த மே மாதம் இறுதியில் விடுவித்துக் கொண்டார். தன் தலைமையில் பல தேவையில்லாத அரசாங்க செலவுகள் குறைக்கப்பட்டன என மஸ்க் மார்தட்டிய தருவாயில் டிரம்ப் தன்னுடைய கனவு மசோதாவைக் கொண்டு வந்தார். டிரம்ப்பின் கனவு மசோதா தன் கனவிற்கு எதிராக இருப்பதை மஸ்க்கால் ஜீரணிக்க முடியவில்லை. கணிக்க முடியாத தொழிலதிபராக இருக்கும் மஸ்க், கணிக்க முடியாத இந்த மசோதா, கணிக்க முடியாத தலைவராக இருக்கும் டிரம்ப்பிடம் இருந்து வரும் என கணித்திருக்க மாட்டார். விளைவு: விசுவாசியிடம் இப்போது வில்லனைக் காண்கிறார் டிரம்ப். 

அப்படி என்ன இருக்கிறது அந்த மசோதாவில்? 

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், இந்த புதிய மசோதாவின் நோக்கம் வரி விலக்கு அளிப்பதுதான். டிரம்ப்பின் இந்த பட்ஜெட் மசோதா பல பில்லியன் டாலர்கள் வரி விலக்குகள் தருவதால் இது தனக்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாக மஸ்க் தெரிவித்தார். இந்த ஏமாற்றம், டிரம்ப்-மஸ்க் பழகும் விதத்தை மாற்றியமைத்தது. முன்பே குறிப்பிட்டது போல, யார் பெரியவர் எனப் போட்டி வந்தால் தங்களை நிரூபிக்க இருவரும் எந்த எல்லைக்கும் செல்வார்கள் .அதுதான் இப்போது நடக்கிறது. நான் என்னுடைய கடின உழைப்பைப் போட்டு, பல செலவுகளைக் குறைத்து, அரசாங்கத்திற்கு வருமானத்தை தேடித்தந்தால் நீங்கள் மீண்டும் வரி விலக்கு அளிப்பீர்களா? நாம் பெரும் வருமானத்தை இழக்க நேரிடுமே என மஸ்க் கோபப்படுகிறார். இந்த மசோதா மஸ்கின் டெஸ்லா நிறுவனத்திற்கும் எதிராக உள்ளதால், மஸ்க் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் டிரம்ப்போ, நீங்கள் ஏற்றால் என்ன, ஏற்கவில்லை என்றால் எனக்கென்ன? நான் இந்த நாட்டின் அதிபர் என ஓங்கி அடிக்கிறார். மஸ்க்கோ, என்னுடைய உதவி இல்லையென்றால் நீங்கள் அதிபராகியிருக்கமுடியாது என பதிலடித் தருகிறார். 

தொடங்கிய சைபர் போர்: 

டிரம்ப் - மஸ்க் வார்த்தைப் போர் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இருவரும் பரஸ்பர மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் விடுக்கின்றனர். இருவரும் தங்களிடம் இருக்கும் ஆயுதங்களை (சமூக வலைத்தளங்களை) பயன்படுத்தி ஒரு சைபர் போரை ஆரம்பித்துள்ளனர். இதில் நாம் கவனிக்கவேண்டிய மிக முக்கியமான விவகாரம் என்னவென்றால் இது அத்தனையும் வெளிப்படையாக, மக்கள் முன்னிலையில் நடக்கிறது. வந்த மூன்று மாதத்தில், இப்படி சிறு பிள்ளைகளை போல இருவரும் அடித்துக் கொள்வது அமெரிக்க ஜனநாயகத்தையும், வாக்களித்த மக்களையும் கேலி செய்யும் செயல் என பேச்சுக்கள் கேட்கின்றன. ஏற்கனவே பல போர்கள் நடக்கின்ற சமயத்தில், 'இந்த போர் நமக்கு தேவைதானா?' என இருவரும் சிந்திக்கவேண்டும். ஆனால், அவர்களுக்கோ, போட்டி என்று வந்துவிட்டால் போட்டி தான். இது இரு தொழிலதிபர்களுக்கு இடையே நடைபெறும் அதிகாரப் போட்டி. இங்கு மக்கள் நலனுக்கு வேலையில்லை. 

 Trump vs Musk...A story of a believer turned  villain! A clash that surpasses Hollywood...What will happen next?

பல பணக்காரர்கள், பல தலைவர்களுக்கு, பல தேர்தல்களில், பல வழிகளில், பல உதவிகளை செய்கின்றனர். இதில் முக்கியமானது நிதியுதவி மற்றும் பிரச்சார உதவி. அந்த வகையில் மஸ்க், டிரம்ப்பை வெளிப்படையாக ஆதரித்தார், வெளிப்படையாக பல நலன்களை எதிர்பார்த்தார், இப்போது வெளிப்படையாக மோதுகிறார். இருவரிடம் இருக்கும் ஒற்றுமை இப்போது பகைக்கு வித்திட்டுள்ளது என எடுத்துக்கொள்ளலாம். டிரம்ப்பிற்கோ, மஸ்க்கை ஆதரித்தது தவறு என்ற எண்ணம், நாம் தவறு செய்து விட்டோமோ என்ற ஒரு சந்தேகம், மஸ்கின் ஆதிக்கத்தை குறைக்கவேண்டும் என்ற நோக்கம் .அவரை பொறுத்தவரை, மஸ்க் இப்போது புத்தி கெட்டுப் போய்விட்டார். .மஸ்க்கை பொறுத்தவரை டிரம்ப் நன்றி கெட்டவர். டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற பிரச்சாரத்தை இப்போது கையிலெடுத்துள்ள மஸ்க்,  துணை அதிபர் JD வான்ஸ்சை அதிபராக்க வேண்டும் என்று கோஷம் எழுப்புகிறார். இன்னும் ஒரு படி மேலே சென்று ஒரு புதிய கட்சியைத் தொடங்க மஸ்க் ஆயத்தமாகிறார். (எதிராளியை பழிவாங்க புதிய கட்சியை உருவாக்கும் இந்திய அரசியல் பார்முலாவை மஸ்க் கேள்விப்பட்டிருப்பாரோ?) 

டிரம்ப்பிற்கு இது மற்றுமொரு சறுக்கல். ஆனால், மஸ்க் விவகாரத்தில் அவருக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்காமல் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். ஒன்று மட்டும் நிச்சயம். டிரம்ப் - மஸ்க்கின் வெளிப்படையான மோதல் அமெரிக்க மக்களுக்கு தர்மசங்கடத்தை கொடுத்துள்ளது மற்றும் டிரம்ப்பின் ஆட்சி மீது நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது. டிரம்ப் - மஸ்க் மீண்டும் இணைவார்கள் என்பது சந்தேகமே. ஆனால், அதையும் தாண்டி பல பிரச்சனைகள் அமெரிக்க மக்கள் முன்பும்,  அரசாங்கத்திற்கு முன்பும் வரிசைகட்டி நிற்கின்றன. இப்போது இந்த பரபரப்பு ஓய வேண்டும் என அமெரிக்க மக்கள் விரும்பினாலும், டிரம்ப்-மஸ்க் மீண்டும் இணைவதை அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. 

அடுத்து என்ன நடக்கும்? 

தன்னை சர்வாதிகாரியாக பார்க்கும் டிரம்ப், தனது சர்வ அதிகாரத்தை கட்சியில் செலுத்துகிறார். இனி, காட்சிகள் மாறலாம். கட்சி பிளவுபடலாம். மஸ்க்கே அந்த பிளவை ஏற்படுத்தலாம். குடியரசு கட்சியினர் இவர்கள் இருவரையும் கொண்டாடுவது, இவர்கள் இருவருக்கும் வலுவான ஆதரவு இருப்பதை காட்டுகிறது. மஸ்க் தனது பணபலத்தால் கட்சியினரை டிரம்ப்பிற்கு எதிராக திருப்பலாம். பல எம்பிகளை விலைக்கும் வாங்கலாம். டிரம்ப் பதவி விலகி, வான்ஸ் அதிபராக வரவேண்டும் என மஸ்க் செய்யும் பிரச்சாரம் கட்சியை டிரம்ப்பிற்கு எதிராக திருப்பும் ஒரு முயற்சிதான். இன்னும் சொல்லப்போனால், அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க பாராளுமன்றத் தேர்தலில் (mid-term elections) டிரம்ப்பை வீழ்த்த இப்போதே மஸ்க் தயாராகலாம். டிரம்ப்பிற்கு எதிராக பிரச்சாரம் செய்யலாம், வேட்பாளர்களை நிறுத்தலாம். 

ஏனென்றால், டிரம்ப் மற்றும் மஸ்க்கை சுற்றி இருப்பவர்கள் அவர்களைப் போன்றே கணிக்க முடியாதவர்கள். ஆகையால், யார் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். தற்போது டிரம்ப் எடுக்கும் சர்ச்சையான முடிவுகள், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் அவருக்கு பின்னடைவை தரலாம். மேற்கொண்டு, மஸ்க் டிரம்ப்பிற்கு எதிராக திரும்பினால் அவரின் செல்வாக்கு நிச்சயம் சரியும். மறுபுறம் டிரம்ப் அவரின் அதிபர் அதிகாரத்தைப் பயன்படுத்தி மஸ்கின் வணிக சாம்ராஜ்ஜியத்தை தகர்க்கலாம். கணிக்கமுடியாத இந்த இருவர்களின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.  

எது எப்படியோ, இந்த மூன்று மாத டிரம்ப் - மஸ்கின் நட்புறவு (bromance) அமெரிக்க அரசியல் சகாப்தத்தில் பல தருணங்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும். ஜனநாயகத்தில் மக்கள் தான் ஜெயிக்கவேண்டுமே தவிர தொழிலதிபர்களோ, அவர்களின் பணமோ இல்லை என்பதற்கு இந்த bromance பிரேக் அப் தான் மிகச்சிறந்த உதாரணம்.


- அழகு முத்து ஈஸ்வரன்