Skip to main content

பெண் காவலரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட எஸ்.ஐ. பணியிட மாற்றம்!

Published on 12/06/2025 | Edited on 12/06/2025

 

Virudhunagar Dt Amathur Police Station SI Ganesan incident
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன்

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் கணேசன், முதல்நிலை பெண் காவலர் ஒருவரைத் தன் வீட்டுக்கு வரச்சொல்லிக் கட்டிப்பிடிக்க, அதிர்ச்சியில் உறைந்த அந்தப் பெண் காவலர் அவரைத் தள்ளிவிட்டுத் தப்பித்துள்ளார். இது நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண் காவலர் இரவுநேரப் பணியில் இருந்தபோது, தனது அறைக்கு வரச்சொன்ன சார்பு ஆய்வாளர் கணேசன் அத்துமீறி முத்தம் கொடுத்துள்ளார். உடனே இந்த விவகாரத்தைத் தன் கணவரிடம் கூறிய அந்தப் பெண் காவலர், அவரை அழைத்துக்கொண்டு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனைச் சந்தித்து முறையிட்டுள்ளார். சார்பு ஆய்வாளர் கணேசன் உடனடியாக  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நமக்குக் கிடைத்த தகவல் குறித்து அந்தப் பெண் காவலரிடம் கேட்டபோது “சம்பந்தப்பட்ட நானே வெளியில் எதுவும் பேசாதபோது, உங்களுக்கு யார் சொன்னது? இதுபோல் காவல்துறையில் வேலை பார்க்கிற மற்ற பெண்களுக்கு எதுவும் நடந்துறக்கூடாதுங்கிற நல்ல எண்ணத்தில்தான் நீங்க பேசுறீங்கன்னு எனக்குத் தெரியுது. நாங்களும் அந்த எண்ணத்தில்தான் ஸ்டெப் எடுத்தோம். இப்ப ஸ்டேஷன்ல இருக்கேன் சார். கொஞ்சம் ஃப்ரீ ஆயிட்டு பேசுகிறேன்” என்றவர், அடுத்துப் பேசவே இல்லை. சார்பு ஆய்வாளர் கணேசனைத் தொடர்புகொண்டோம். “நான் பேசுனத தவறா புரிஞ்சிகிட்டு, இந்த மாதிரி ஒரு குற்றச்சாட்டு வந்ததும், தனிப்பட்ட முறையில் என் மனசு புண்பட்டதில், பக்கத்தில் இருக்கிற சப்-டிவிஷன்ல போடுங்கன்னு நான் கேட்டுக்கிட்டதுனால, அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையத்துக்கு என்னை மாற்றி இருக்கிறார்கள். நான் கையெழுத்து வாங்க வர்றத அந்தப் பெண் காவலர் தவறா புரிஞ்சிகிட்டாங்க.

இது குவார்ட்டர்ஸுக்கு வெளியில் நடந்துச்சு. அவங்க ஃபேமிலி பேக்ரவுண்ட், அவங்களோட சூழ்நிலை என்னன்னு தெரியவில்லை. டிபார்ட்மென்ட் எனக்கு பனிஷ்மெண்ட் தர்ற அளவுக்கு எதுவும் நடக்கல. நடந்ததை மிகைப்படுத்திட்டாங்க. ஆமத்தூர் போலீஸ் ஸ்டேஷன்ல இரண்டு மூன்று பேர் சஸ்பெண்ட் ஆனார்கள். அதற்கு நான்தான் காரணமென்று நினைக்கிறார்கள். அங்க ஒரு பாலிடிக்ஸ் மாதிரி நடத்துகிறார்கள். நீங்க வேணும்னா, அவங்ககிட்ட (பெண் காவலர்) கேட்டு பாருங்கள். அப்படி ஒன்றும் இல்ல. ஓரலா பேசினதுதான். எழுத்துபூர்வமாவோ, நேரடியாகவோ என் மீது எந்தப் புகாரும் தரலை” என்று முழுங்கிப் பேசினார்.

உண்மை நிலையை அறிந்திட, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கண்ணனை, அவருடைய கைப்பேசி எண் 994****199இல் தொடர்புகொண்டோம், அவர் நமது லைனுக்கு வராத நிலையில் குறுந்தகவல் அனுப்பியும் பதிலில்லை. அவர் விளக்கம் அளிப்பதற்கு முன்வந்தால் பிரசுரிக்கத் தயாராக உள்ளோம். ஆமத்தூர் காவல்நிலையத்தில் நடந்த வில்லங்க விவகாரம், ‘வேலியே பயிரை மேய்ந்தால் விளைநிலம் என்னாகும்?’ என்னும் கேள்வியைக் கொஞ்சம் மாற்றி ‘வேலியே வேலியை மேய்ந்தால்?’ எனக் கேட்க வைத்துள்ளது. 

சார்ந்த செய்திகள்