
தென் கொரியாவில் 18 முதல் 28 வயதுக்குட்பட்ட நல்ல உடல்நலத்தோடு இருக்கும் அனைத்து ஆண்களும் இரண்டு அண்டுகள் இராணுவத்தில் கட்டாயம் பணியாற்ற வேண்டும். அதன் படி தென் கொரியாவை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற பிடிஎஸ்(BTS) இசைக்குழுவினரும் பணியாற்றி வந்தனர். இந்த குழுவில் மொத்தம் 7 பேர் இருக்கும் நிலையில் முதலில் ஜே-ஹோப் மற்றும் ஜின் ஆகிய இரண்டு பேர் ராணுவ சேவையில் இணைந்து கடந்த ஆண்டு அதை நிறைவு செய்திருந்தனர்.
இவர்களை தொடர்ந்து 2023ஆம் ஆண்டு இணைந்த ‘ஆர் எம்’ என அழைக்கப்படும் கிம் நம்ஜூனும் ‘வி’என அழைக்கப்படும் கிம் டேஹ்யூங்கும் தற்போது தங்களது கட்டாய இராணுவ சேவையை நிறைவு செய்துள்ளனர். இவர்கள் பிடிஎஸ் குழுவில் கட்டாய இராணுவ சேவையை நிறைவு செய்யும் மூன்றாவது மற்றும் நான்காவது உறுப்பினர்கள் ஆவர். இருவரும் இராணுவ உடையில் மத்திய சியோலில் உள்ள ஹைபின் தலைமையகத்தின் முன் வெளியேறினார். இவர்களை வரவேற்க அவரது ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடியிருந்தனர். அவர்களில் பல பேர் பிடிஎஸ் குழுவின் அடையாள நிறமான பர்புல் நிற உடையணிந்து, ‘ஆர் எம்’ மற்றும் ‘வி’-யின் பேனர்கள் மற்றும் புகைப்படங்களை ஏந்தியிருந்தனர். அவர்கள் முன் ‘ஆர் எம்’ சாக்ஸபோன் கருவியை வாசித்து காண்பித்தார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிடிஎஸ் குழுவில் மீதமுள்ள ஜிமின், ஜங்குக் மற்றும் சுகா ஆகியோர் இம்மாதம் தங்களது கட்டாய இராணுவ சேவையை நிறைவு செய்கின்றனர். இதில் ஜிமின் மற்றும் ஜங்குக் ஆகியோர் ஜூன் 11ஆம் தேதியும் சுகா ஜூன்21ஆம் தேதியும் சேவையை நிறைவு செய்கின்றனர். இதையடுத்து மீண்டும் இந்த 7 பேரும் ஒன்றிணைந்து பாடல்களை வெளியிடும் திட்டத்தில் உள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.