
சென்னை சத்யபாமா பல்கலைக்கழக 34வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. அவர் இப்பல்கலைக்கழகத்தில் காட்சி தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேடையில் பேசிய அட்லீ, “கொஞ்ச நாளாவே பொய் சொன்னால் இருமல் வருது, ஏன்னு தெரியல. அதனால் முடிஞ்ச வரை உண்மையை சொல்றேன். பொய் சொன்னால் இரும்பல் வந்துவிடும்” என்று ஆரம்பித்தவர் நான் இந்த காலேஜில் பயங்கரமான ஸ்டூடண்ட் என்றார். உடனே அவருக்கு இருமல் வந்துவிட்டது. இதனால் அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர். தொடர்ந்து பேசிய அவர், “ஊருக்கு என்னவாக இருந்தாலும் வீட்டுக்கு அரசன்னு சொல்வாங்க. ஊருக்கு அரசனாக என்றால், சண்டைக்கு போகனும், ஜெயிக்கனும், அறிவுபூர்வமாக யோசிக்கனும். ஆனால் இதையெல்லாம் செய்வதற்கு முன்னே அம்மா, நம்மளை அரசன்னு சொல்லிடுவாங்க. வா ராஜான்னு கூப்பிடுவாங்க. அந்த மாதிரிதான் இந்த காலேஜ். ஆரம்பத்தில் இருந்தே என்னை அரசனாக பார்த்தது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பொதுவா என்னுடைய படங்களை பார்த்து அங்கிருந்து எடுக்கிறேன், இங்கிருந்து எடுக்கிறேன்னு சொல்வாங்க. ஆனால் நான் இங்க ஒரு உண்மையை சொல்றேன். நான் இதுவரை வாழக்கையில் பார்த்தைத் தான் படமா எடுத்திருக்கேன். அப்படி சொல்லனும்னா, உதாரணத்துக்கு பிகில் படத்தில் வரும் ராயப்பன் கேரக்டர். அது என்னுடைய தலைவர் ஜேப்பியார் சாரை பார்த்து தான் இன்ஸ்பைர் ஆகி எழுதினேன்” என்றார். பின்பு விஜய்யும் தன்னுடைய குடும்பத்தில் ஒருவர் என நெகிழ்சியுடன் பேசிய அவர் அவரைப் போன்று குட்டி கதை ஒன்று சொல்வதாக சொன்னார்.
அவர் சொன்னதாவது, “ஒரு கோயில்ல ஒரு படி, ஒரு சிலை இருந்தது. அங்கு வர பக்தர்கள் எல்லாம் படியை தாண்டி வரிசையில் நின்னு சாமி கும்பிட்டு போய்டுவாங்க. அப்போ கோயில் நடை சாத்தினதும் நைட்டு அந்த படி, சிலைக்கிட்ட பேசுது. என்னப்பா... நீயும் கல்லு, நானும் கல்லு, என்னை தாண்டி போறங்க, ஆனா உன்னை மட்டும் கும்பிடுறாங்கன்னு கேட்டிருக்கு. அதுக்கு அந்த சாமி கல் சொன்னுச்சாம், கண்ணா ,உன்னை இரண்டு சைடும் வெட்டி ஒரு ரெக்டாங்குலர் ஷேப்ல ஆக்கிடுறாங்க. ஆனா என்னை ஒரு ஆயிரம் பேர் வச்சு செஞ்சு சிலையாக்குறாங்க. அதனால அந்த மரியாதை இருக்கத்தான் செய்யும்’ அதனால் வாழ்க்கையில் நிறைய பேர் வெச்சு செய்றாங்கன்னா நீங்க கும்பிடுற அளவுக்கு வருவீங்க” என்று தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விஜய் குறித்து அவரிடம் கேட்ட கேள்விக்கு, “விஜய் அண்ணாவும் எனக்கு டீச்சர் மாதிரிதான். நான் பட்டம் பெற்றது அவருக்கும் பெருமையாக இருக்கும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “லைஃப்ல ரொம்ப முக்கியம் எஜுகேஷன் தான். நம்மள எப்படியும் அடிக்கப்போறாங்க. நம்மளுடைய முதல் ஆயுதமே நம்ம படிப்பு தான். அது இல்லைன்னா நம்ம இன்னும் கீழ போய்விடுவோம். அதனால் படிப்பு என்பது அடிப்படை உரிமை” என்றார். அட்லீ இப்போது அல்லு அர்ஜூனை வைத்து இன்னும் பெயரிடாத தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார்.