
கடல் சீற்றம் காரணமாக கிராமத்திற்குள் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளான சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக எர்ணாகுளம், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பாரதப்புழா, நீலேஸ்வரம், மணிமாலா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடல் சீற்றமும் மறுபுறம் கடலோர கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் செல்லாளம் பகுதியில் அண்மையாகவே கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் திடீரென கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்தது. சுமார் 100க்கும் மேற்பட்டோர்களின் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்ததோடு உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளப் போராடினர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.