
இந்த ஆண்டு மாம்பழங்களின் விளைச்சல் இருந்த போதிலும் அதற்கு உண்டான உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலைத் தெரிவித்திருந்தனர். இதனால் விவசாயிகள் மாம்பழங்களைச் சாலையோரம் கொட்டும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதே சமயம் மாம்பழக்கூழ் உற்பத்தி ஆலையை அமைக்கவும், அதற்காக மாம்பழங்களைக் கொள்முதல் செய்யும்போது உரிய விலை கொடுக்க கோரியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யும் ஆலைகள் விவசாயிகளிடமிருந்து மாங்கனிகளைக் கொள்முதல் செய்யத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது மாம்பழங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன் கருதி, மாம்பழங்களைப் பதப்படுத்தும் நிறுவனங்கள் மாம்பழக் கூழ் தயாரிக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வேளாண்மை உற்பத்தி ஆணையரும் அரசு செயலாளருமான தட்சிணாமூர்த்தி இந்த கோரிக்கையை மாம்பழக்கூழ் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.