Skip to main content

சட்டமன்றத்தை கூட்டினால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம்:ஸ்டாலின்

Published on 13/09/2017 | Edited on 13/09/2017
எடப்பாடிக்கு தைரியம் இருந்து சட்டமன்றத்தை கூட்டினால் 
தி.மு.க சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம்:மு.க.ஸ்டாலின் 
 
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான  மு.க.ஸ்டாலின் இன்று (12-09-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:
 
 
செய்தியாளர்: அஇஅதிமுக பொதுக்குழுவில் இறந்தவர்தான் நிரந்தர பொதுச் செயலாளர் என்று அறிவித்திருக்கிறார்களே, அதை பற்றி உங்கள் கருத்து என்ன?
 
ஸ்டாலின்: அது அவர்கள் கட்சி. அது அவர்கள் கட்சியின் உட்கட்சி விவகாரம். அதில் நான் தலையிட விரும்பவில்லை.
 
செய்தியாளர்: அதிமுக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ரு திமுக கூறி வருகிறது. அதற்கான கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டது என நினைக்கிறீர்களா? தினகரன் வேறு ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே?
 
ஸ்டாலின்: அதற்கெல்லாம் பதில் சொல்ல நான் தயாராக இல்லை. நாங்கள் நேற்று முன்தினம் கவர்னரிடம் சென்று தெளிவாக கூறிவிட்டு வந்திருக்கிறோம். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜனநாயக ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னருக்கு இருக்கக்கூடிய பொறுப்பு, கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். அப்படியில்லையென்றால், விரைவில் நீதிமன்றத்தை நாடுவோம், மக்கள் மன்றத்தை சந்திப்போம் என்று தெளிவாக சொல்லியிருந்தோம். அந்த அடிப்படையில், இன்று நீதிமன்றத்திற்கு சென்றாயிற்று, வழக்கும் தொடுத்தாயிற்று. அந்த வழக்கின் அடிப்படையில், ஜனநாயக அடிப்படையில் கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறோம்.
 
செய்தியாளர்: அதிமுக அரசுக்கு பெரும்பான்மை இல்லையென்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்களே?
 
ஸ்டாலின்: பெரும்பான்மை இருக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள். அப்படி பெரும்பான்மை இருக்கிறது என்றால், சட்டமன்றத்தை கூட்டக்கூடிய அதிகாரம் இப்போது யாருக்கு இருக்கிறது என்றால், கூட்டத்தொடரை ஏற்கனவே முடித்தாயிற்று, முடித்தப் பிறகு மீண்டும் கூட்டக்கூடிய அதிகாரம் கவர்னருக்குதான் இருக்கிறது. ஒருவேளை முதலமைச்சருக்கு தன் மீதான் நம்பிக்கையை நிரூபிக்கக்கூடிய தைரியம் இருந்தால், அவரே கவர்னரிடம் பரிந்துரை செய்தால் சட்டமன்றத்தை கூட்டுவார்கள். அப்படி கூட்டினார்கள் என்றால், நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம்.
 
செய்தியாளர்: உங்களைப் பற்றி எடப்பாடி பழனிசாமி அவர்கள் விமர்சனம் செய்துள்ளாரே?
 
ஸ்டாலின்: முதலில் மெஜாரிட்டியோடு அவர் முதலமைச்சராக இருந்துகொண்டு கேள்விகள் கேட்கட்டும், பிறகு பதில் சொல்கிறேன்.
 
செய்தியாளர்: தனக்கும் திமுக விற்கு மட்டுமே போட்டி என்று டி.டி.வி தினகரன் சொல்லியிருக்கிறாரே?
 
ஸ்டாலின்: அவருடைய விளம்பரத்திற்காக அவர் அப்படி சொல்லலாம். அதற்கு நான் விளம்பரம் சேர்க்க விரும்பவில்லை.
 
செய்தியாளர்:  சட்டசபையில் உங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பீர்களா? அல்லது தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு வருவீர்களா?
 
ஸ்டாலின்: தொடர்ந்து திமுகவின் கொள்கை மற்றும் தலைவர் கலைஞர் அவர்களின்  உணர்வு எல்லாமே கொள்ளைப்புறமாக என்றைக்கும் திமுக ஆட்சிக்கு வர விரும்பியது இல்லை, வரவும் வராது.
 
செய்தியாளர்: அனிதா மரணம் தமிழக அரசின் அலட்சியப் போக்கினால் தான் நடந்தது என உயர்நீதிமன்ற நீதிபதி சொல்லியிருக்கிறாரே?
 
ஸ்டாலின்: இதை நாங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே தான் இருக்கிறோம்.

சார்ந்த செய்திகள்