Skip to main content

கணவனை கூலிப்படை வைத்து கொன்ற மனைவி உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை!

Published on 01/08/2018 | Edited on 27/08/2018
 


கடலூர் மாவட்டமம் திட்டக்குடி அருகேயுள்ள ராமநத்தத்தை சேர்ந்த முத்துசாமி என்பவரது மகன் தங்கராசு (45), விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி (38). இருவருக்கும் திருமணமாகி ஆதி, ஆகாஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் பரமேஸ்வரிக்கும், பெண்ணாடம் அருகே உள்ள கோனூர் கிராமத்தை சேர்ந்த சிவகுருநாதன் மகன் ரவிச்சந்திரன் (40) என்பவருக்கும், பள்ளிப் பருவத்திலிருந்து பழக்கம் இருந்து வந்துள்ளது. ரவிச்சந்திரனுக்கும் திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

திருமணமான பிறகும் பரமேஸ்வரிக்கும், ரவிச்சந்திரனுக்கும் கள்ளக்காதல் நீடித்து வந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த தங்கராசு, பரமேஸ்வரியை கண்டித்து எச்சரித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த பரமேஸ்வரி கடந்த 9.11.2014 அன்று கள்ளக்காதலன் ரவிச்சந்திரனிடம் தன் கணவரை தீர்த்துக்கட்ட கூறியுள்ளார்.

அதையடுத்து ரவிச்சந்திரன் திட்டம் தீட்டி பெண்ணாடம் வெங்கடேசன் மகன் ஸ்வீட்லின் (30), கடலூர் குப்புராம் மகன் ஞானமூர்த்தி (38), ராஜேந்திரன் மகன் நரேஷ் குமார் (25), கண்ணன் மகன் கார்த்தி (34), புதுச்சேரி அரியாங்குப்பம் அஜீஸ்ராஜ் மகன் விஜி (எ) ஆல்பர்ட் விஜய் (27), கடலூர் சங்கர் மகன் சிலம்பரசன் (30), பெண்ணாடம் ராஜி மகன் ரமேஷ் (36), பெண்ணாடம் அரியராவியைச் சேர்ந்த ஆதிமூலம் மகன் அருள்செல்வன் (37) ஆகிய 8 பேர் சேர்ந்து தங்கராசு வீட்டில் இருந்தபோது கத்தியால் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து சிறையிலடைத்தனர். இவ்வழக்கு விசாரணை விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அரசு வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜராகி வாதாடி வந்தார். கடந்த 4 வருடமாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதியில் பரமேஸ்வரி, ரவிச்சந்திரன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும், ஸ்வீட்லின், ஞானமூர்த்தி, நரேஷ்குமார், கார்த்தி உள்ளிட்ட 4 பேருக்கு 3 வருடம் கடுங்காவலுடன் ஆயுள் தண்டனை மற்றும் தலா 2 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி இளவரசன். தீர்ப்பளித்தார். அதேசமயம் விஜி, அருள்செல்வன், ரமேஷ், சிலம்பரசன் ஆகியோரின் குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் நால்வரையும் வழக்கிலிருந்து விடுவித்தும் தீர்ப்பளித்தார்.

சார்ந்த செய்திகள்