Congratulations to EPS for those elected to the Rajya Sabha on behalf of ADMK

தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அந்த வகையில் அன்புமணி ராமதாஸ், மு. சண்முகம், என். சந்திரசேகரன், எம். முகமது அப்துல்லா, பி. வில்சன் மற்றும் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக் காலங்கள் முடிவடைய உள்ளன. இத்தகைய சூழலில் தான் இந்த காலி பதவியிடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து திமுக சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் மற்றும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதேபோல் அதிமுக கூட்டணியில் இன்பதுரை, தனபால் களமிறக்கப்பட்டனர். அந்த வகையில் 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்நிலையில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட இன்பதுரை, தனபால் ஆகியோர் சேலத்தில் உள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் சான்றிதழைக் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Advertisment

அப்போது, “தமிழகத்தின் நலன் மற்றும் உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுப்பதில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. தமிழ்நாட்டிற்கான உங்கள் குரல் உரத்து ஒலிக்கட்டும்” என்று எடப்பாடி பழனிச்சாமி அட்வைஸ் செய்திருக்கிறார். முன்னதாக திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்ற கமல்ஹாசன், பி. வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் என்கிற கவிஞர் சல்மா ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.