
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவரான தங்கர் பச்சான் அவரது மகன் விஜித் பச்சான் தற்பொழுது தமிழ் சினிமாவில் புதுமுக நாயகனாக இந்த பேரன்பும் பெருங்கோபமும் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவில் இப்போது ட்ரெண்டில் இருக்கும் சாதிய பாகுபாடு ஆணவக் கொலைகள் ஆகிய சமூகத்துக்கு அவசியமான பிரச்சனையை இந்த படம் மூலம் கையில் எடுத்துள்ள தங்கர்பச்சான் அண்ட் கோ அதை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்களா..? இல்லையா..?
அரசு மருத்துவமனையில் சீஃப் நர்சாக பணிபுரியும் விஜித் பச்சான் குழந்தை கடத்தலில் ஈடுபட்டு போலீஸிடம் சிக்கிக் கொள்கிறார். போலீஸ் விசாரணையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் இதே போன்று ஒரு குழந்தை கடத்தல் சம்பவம் செய்ததாகவும், அதற்கு காரணமாக தனக்கு நடந்த ஒரு கொடூர சம்பவம் பற்றியும் போலீஸிடம் கூறுகிறார். அந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடையும் போலீசார் வழக்கை இன்னும் தீவிரப் படுத்துகின்றனர். இதைத்தொடர்ந்து நாயகன் விஜித் பச்சானுக்கு ஏற்பட்ட துயரம் என்ன? அவர் ஏன் குழந்தை கடத்தலில் ஈடுபட்டார்? துயரத்திலிருந்து அவர் விடுபட்டாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
சாதிய பாகுபாடு என்பது பிறப்பிலிருந்து வருவது கிடையாது நம் வளர்வதில் தான் என்ற ஆழமான ஒரு கருத்தை இந்த படம் மூலம் மக்களுக்கு வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் அறிமுக இயக்குனர் சிவபிரகாஷ். பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து வந்த இவர். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற சமூக நல்லிணக்கத்தோடு கூடிய ஆணவக் கொலைகள் பற்றியும் அதை சுற்றி நடக்கும் சாதிய பாகுபாடுகள் பற்றியும் நம் பக்கத்து வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் போல் அன்றாடம் அறியப்படும் நமக்கு நெருக்கமான பிரச்சனையை அப்படியே கண் முன் கொண்டு வந்து காட்டி இருக்கிறார். அதேபோல் சாதி வெறியர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை எந்த அளவு ஆழமாகவும் அதே சமயம் அவர்களுக்கு வலி ஏற்படுத்தக் கூடிய தண்டனையாகவும் இருக்க வேண்டும் என்பதையும் சாவை விட பெரிய தண்டனை எது என்று இந்த படத்தின் மூலம் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
சமூகத்திற்கு இது ஒரு பாடமாக காண்பித்த இயக்குனர் ஏனோ படமாக காண்பிக்க சற்று கோட்டை விட்டிருக்கிறார். அழுத்தம் நிறைந்த ஒரு படமாக கொடுத்த இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கூட கவனம் செலுத்தி இருக்கலாம். படம் ஆரம்பத்தில் முதல் இறுதி வரை பல இடங்களில் ஆங்காங்கே தொய்வு ஏற்பட்டு பின்பு வேகம் கூடி தொய்வு, வேகம், தொய்வு, வேகம் என மாறி மாறி வருவது சற்றே அயற்சியை கொடுத்தாலும் சமூகத்துக்கு அவசியமான ஒரு கருத்தை கூறியிருப்பது படத்தை தவிர்க்காமல் பார்க்க தூண்டுகிறது.

அறிமுக நாயகன் விஜித் பச்சான் புதுமுக நடிகர் போல் இல்லாமல் தேர்ந்த நடிகர் போல் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். சின்ன சின்ன முக பாவனைகள் மற்றும் வசன உச்சரிப்புகள் மூலம் காட்சிகளை மெருகேற்றி நன்றாக நடித்திருக்கிறார். இவருக்கு போட்டியாக நாயகியாக களம் இறங்கி இருக்கும் ஷாலி நிவேகாஸ் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரும் சின்ன சின்ன வசன உச்சரிப்புகள் முகபாவனைகள் மூலம் கவர்கிறார். தமிழ் சினிமாவுக்கு புதிய வரவாக இந்த இளம் நாயகி கிடைத்திருக்கிறார். வில்லன்களாக வரும் மைன் கோபி மற்றும் அருள் தாஸ் ஆகியோர் வழக்கம்போல் வில்லத்தனம் காட்டி மிரட்டும் முயற்சி செய்திருக்கின்றனர். இவர்களின் வழக்கமான வில்லத்தனம் வழக்கமாகவே நகர்ந்து சென்று விடுகிறது. நாயகனின் அம்மாவாக வரும் சுபத்ரா ஜாதி வெறி பிடித்த பெண்ணாக வந்து மிரட்டி இருக்கிறார். மற்றபடி முக்கிய பாத்திரத்தில் வரும் கீதா கைலாசம், சாய் வினோத், லோகு, பாவா சந்திரசேகர் உட்பட பலர் அவரவர் வேலையை நிறைவாக செய்துவிட்டு சென்றிருக்கின்றனர்.
ஜே பி ஒளிப்பதிவில் காதல் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தேனி மற்றும் கேரளா சுற்றுவட்டார பகுதிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இளையராஜா இசையில் வழக்கம் போல் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. அழுத்தமான மனதிற்கு நெருக்கமான காட்சிகளை வழக்கம் போல் தன் இசையால் வருடி அனைவரையும் கலங்க வைத்திருக்கிறார் இசைஞானி.
சமூகத்தில் அன்றாடம் நடக்கும் நாம் கேள்விப்படும் மற்றும் கண்ணெதிரே பார்க்கக்கூடிய அதே சமயம் நம் குடும்பத்திலேயே நடக்கக்கூடிய ஒரு சாதிய வன்கொடுமைகளை பெரும் கோபத்துடன் காட்டிய இயக்குனர் அதை பேரன்புடன் காட்ட சற்று தவறி இருக்கிறார். ஏற்கனவே நாம் பார்த்து பழகிய ஒரு கதையாக இருந்தாலும் கதை கரு வித்தியாசமாகவும் சாதிய வன்கொடுமைகளுக்கு கொடுக்கப்படும் தண்டனை புதியதாகவும் இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. இருந்தும் அதற்கான திரைகதை இன்னும் கூட வேகமாகவும் சிறப்பாகவும் இருந்திருந்தால் பேரன்பும் பெரும் கோபமும் இணைந்து ரசிகர்களை கவர்ந்திருக்கும்.
பேரன்பும் பெருங்கோபமும் - சாதி வெறியர்களுக்கு சரியான தண்டனை!