‘ராகுல்காந்தி பிரதமரானால் ஜி.எஸ்.டி. பிரச்சனைக்கு முடிவுகட்டுவார்!’ - ராஜ் பப்பார்
ராகுல்காந்தி பிரதமராக பொறுப்பேற்றபின் ஜிஎஸ்டி-யில் இருக்கும் பிரச்சனைகளை மதிப்பாய்வு செய்வார் என உத்தரப்பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பார் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய ராஜ் பப்பார், ‘காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி பிரதமராக பதவியேற்றதும், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்து மதிப்பாய்வு செய்வார். ஜி.எஸ்.டி வரிவிகிதம் 18% வரை இருக்கக்கூடாது. இதனால், சிறுதொழில் முனைவோர்கள் மற்றும் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இளைஞர்களை தேசப்பற்று என்ற பெயரில் தவறான பாதைக்கு இட்டுச்செல்லும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் சூழ்ச்சிகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் ஊழியர்கள் பாஜக-வால் அரங்கேற்றப்படும் நாடகங்களை நேர்மறையாக எதிர்கொள்ள தயாராகிக் கொள்ளவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.