
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், திமுக, விசிக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொரப்பட்டது. அதே போன்று 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த வழக்குகள் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி (17.04.2025) உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா (தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்) அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதங்களை பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், “வக்ஃப் வாரிய புதிய சட்டத்தில் எந்தவொரு உறுப்பினர் நியமனமும் இருக்கக் கூடாது. ஏற்கெனவே, வக்ஃப் வாரியம் என அறிவிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
புதிய சட்டப்படி நில வகைப்படுத்துதல் கூடாது. ஆவணங்கள் இல்லாத வக்ஃப் சொத்துக்கள் விவகாரங்களிலும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் கூடாது. நிலம் கையகப்படுத்துதல், உறுப்பினர் நியமனத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்” எனக் கூறி வக்ஃப் புதிய சட்டத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்தனர். மேலும், “இந்த விவகாரத்தில் அடுத்த 7 நாள்களுக்குள் மத்திய அரசு விரிவான பதிலளிக்க வேண்டும். அதே சமயம், 5 ரிட் மனுக்கள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மற்ற மனுக்கள் முடித்து வைத்ததாகக் கருதப்படும். விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு எந்த 5 மனுக்கள் என்பதை தேர்வு செய்து கூறுவோம்” எனத் தெரிவித்து இந்த வழக்கை மே 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (15.05.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கினுடைய அனைத்து தரப்பினரும் தங்களுடைய வாதங்களை முன் வைப்பதற்காகக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதே சமயம், ‘இந்த வழக்கில் விரிவான பதில் மனுவை மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்துள்ளோம்’ என மத்திய அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது. அப்போது, புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள கவாய் இந்த விவகாரத்தில் தற்போது பிரதான வாதங்கள் முன் வைக்கப் போகிறீர்களா?, அல்லது இடைக்கால உத்தரவு தொடர்பான வாதங்கள் முன் வைக்கப் போகிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் ‘தங்கள் தரப்பில் பிரதான வாதம் வைக்க நேரம் தேவைப்படும். இந்த வாதத்திற்கு 2 மணி நேரம் தேவைப்படும்’ எனவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இதற்கு போதிய காலம் இல்லாததால் இந்த வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்க வைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கை வரும் 20ஆம் தேதிக்குத் தலைமை நீதிபதி ஒத்தி வைத்தார்.