Skip to main content

கலாச்சாரம், மொழி நம்பிக்கைகளை கடைபிடிக்க மக்களுக்கான சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்: நாராயணசாமி

Published on 25/01/2018 | Edited on 25/01/2018
கலாச்சாரம், மொழி நம்பிக்கைகளை கடைபிடிக்க 
மக்களுக்கான சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்: நாராயணசாமி பேச்சு

தாங்கள் விரும்பும் கலாச்சாரம், மொழி, நம்பிக்கைகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கான சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டுமென்று, திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கம் சார்பில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி பேசும் போது புதுச்சேரி முதலமைச்சர் வி.நாராயணசாமி குறிப்பிட்டார்.



திருவண்ணாமலை, காந்தி நகர், பைபாஸ் சாலையில் உள்ள  அருணகிரிநாதர் அரங்கத்தில், அருணைத் தமிழ்ச் சங்கம் சார்பில், தமிழர் திருநாள் விழா நடைபெற்றது.  காலை 9.00 மணிக்கு அருணை சகோதரிகள் டி.கே.சாரதா, டி.பி.பரமேஸ்வரி குழுவினரின் மங்கல இசை நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு, ஸ்ரீ துர்காதேவி நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை 10.00மணிக்கு கவிஞர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன் தலைமையில், தமிழ் இலக்கியங்களில் அதிகமாக வெளிப்படுவது தாயா? தாரமா? என்ற தலைப்பில் மாபெரும் பட்டி மன்றம் நடைபெற்றது. தாயே! என்ற தலைப்பில் பேச்சருவி கு.சபரி, மங்கலம்.ம.பிரபாகரன், பாவலர் சு.வேலாயுதம், தாரமே! என்ற தலைப்பில் இலக்கியதாரகை வெ.சென்னம்மாள், இலக்கியசுடர் சு.சிவப்பிரகாசம், கவிச்சுடர் அஜ்மல் (எ) முத்தழகன் ஆகியோர் வாதிட்டனர். காலை 11.00 மணிக்கு வீரத்தமிழன் கலைக்குழுவின் போர்ப்பறை நிகழ்ச்சியும், பிற்பகல் 12.00 மணிக்கு இன்னிசை சொல்லரசி கல்பாக்கம் ரேவதி தலைமையில் பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் போன்ற ஊடகங்களால் கூட்டு குடும்ப வாழ்க்கைக்கு  மகிழ்ச்சியா? தொல்லையா? என்ற தலைப்பில் இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது. பிற்பகல் 3.00 மணிக்கு சீமனம் ஸ்ரீ கிருஷ்ணா கட்டைகூத்து குழுவினரின் பகடை துகில் தெருக்கூத்து நடைபெற்றது. மாலை 4.00 மணிக்கு ஆக்காட்டி ஆறுமுகம் குழுவினரின் கிராமிய பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலை 6.00 மணிக்கு தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் என்ற தலைப்பில் கலைமாமணி தேச.மங்கையர்க்கரசி உரைவீச்சு நிகழ்த்தினார்.



இரவு 7.00 மணிக்கு தமிழ்த் தொண்டாற்றிவரும் எழுத்தாளர் ந.சண்முகம் அவர்களுக்கு மறைமலையடிகள் விருதும், பொற்கிழியும், சமூகத் தொண்டாற்றிவரும் திரிசூல் அ.நாராயணன் அவர்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி விருதும், பொற்கிழியும், கலை தொண்டாற்றிவரும் ஓவியர் நா.கோபால் அவர்களுக்கு கலைவாணர் விருதும், பொற்கிழியும், ஆன்மீகத் தொண்டாற்றி வரும் முனைவர் வெ.ராமு அவர்களுக்கு கிருபானந்த வாரியார் விருதும், பொற்கிழியையும் புதுச்சேரி முதலமைச்சர் வி.நாராயணசாமி வழங்கினார். சாதனையார்கள் சார்பில் கிருபானந்த வாரியார் விருது பெற்ற முனைவர் வெ.ராமு நன்றி கூறினார்.

தமிழ் மண்ணில் பிறந்ததுதான் பரதக்கலை:

திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் விழாவில் தலைமையேற்று முன்னாள் அமைச்சரும், அச்சங்கத்தின் தலைவருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ பேசும்போது, அருணை தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருக்கூடிய நான் ஒரு இந்து. செயலாளராக இருக்ககூடிய வெ.ஆல்பர்ட் அவர்கள் ஒரு கிருத்துவ மதத்தை சேர்ந்தவர், பொருளாராக இருக்ககூடியவர் தொழிலதிபர் எம்.இ.ஜமாலுதின் ஒரு முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர். நாங்கள் மூன்று பேரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கூட, திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கத்தின் மூலம் தமிழை வளர்க்கிற பணியை செய்து கொண்டு இருக்கிறோம்.



உலக மொழிகளில் தமிழை தவிர கிரேக்க, இலத்தீன், சமஸ்கிருத, அரேபிய மொழிகள் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் இல்லாமல் போய் விட்டன. தமிழ் மட்டுமே அன்றும், இன்றும் நிலைத்து நிற்பதுடன் - சங்க இலக்கியமாக, நீதி இலக்கியமாக, பக்தி இலக்கியமாக, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உரை நடை இலக்கியமாக, அதன்பின் பத்திரிக்கை வளர்ச்சி, பேச்சு, எழுத்து, விளம்பர கலைகள், கனிணியுகம் என இலக்கிய - மொழித்திறன் வளர்ச்சியை கண்டுள்ளது. இத்தகைய தமிழ் - “இயற்றமிழ் - இசைத்தமிழ் - நாடகத் தமிழ்’’  என்று மூன்று துறையாக வளர்ச்சி பெற்றுள்ளது. அதனால் தான் முத்தமிழ் என்கின்றோம்.    “பரிதிமாற் கலைஞர் என்கிற சூரிய நாராயண சாஸ்திரி’’ அவர்கள் முத்தமிழுக்கு விளக்கம் தந்துள்ளார். இயற்றமிழ் :  சங்க பாடல்களும், இடைகாலத்து கம்பராமயணமும், இக்காலத்து செய்யுள் நூல்களும் தான். இயற்றமிழ்.

இசைத்தமிழ் : பன்னொடு கலந்துள்ள தாளத்தோடு கூடியும், செந்தமிழ் பாட்டுகளாய் - கீர்தனைகளும் - வரிப்பாட்டுகளும் - சிந்து - ஆனந்த களிப்பு - தெம்மாங்கு - ஆகும். நாடகத்தமிழ் : இயற்றமிழும், இசைத்தமிழும் இணைந்து பிறப்பது நாடகத்தமிழ். படிக்கத் தெரியாதவர்களும் நல்ல பிற கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே நாடகம். இதை ஒரு காலத்தில் “கூத்து’’ என்றே அழைக்கப்பட்டது.

       குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 5500 ஆண்டுக்களுக்கு முன்பு நமக்கு கிடைத்த முதல் தமிழ் நூல் “தொல்காப்பியம்’’. அதில் “கூத்து நாடகம்’’ என்ற சொற்கள் உள்ளன. 11ம் நூற்றாண்டில் - “திவாகர நிகண்டு’’ என்னும் நூலில்  கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே!   நாட்டியம் பிறந்தது நாடக வகையே! மற்றொரு பாடலில்: நடமே  நாடகம்   கண்ணுள்  நட்டம்! படிதம்   ஆடல்   தாண்டவம்  பரதம் ! ஆலுதல்    தாங்கல்    வாணிகுரவை ! நிலயம்  நிருத்தம்  கூத்தெனப் படுமே! ஆடல், பாடல், அபிநாயம் இணைத்த கதைகள் “கூத்து’’ எனப்பட்டது. அபிநாயத்தோடு ஆடிய ஆட்டத்தை சதுராட்டம் என்றும் - பரதநாட்டியம் என்றும் தமிழ்நாட்டில் அழைக்கப்பட்டது. கேரள மாநிலத்தில் - “கதகளி ஆட்டம்’’     “மோகினியாட்டம் என்றும் ஆந்திராவில் - குச்சிப்புடிநடனம், ஒரிசா மாநிலத்தில் - ஒடிசி நடனம் அசாம் மாநிலத்தில் - மணிப்புரி நடனம் - என்றும் அழைக்கப்படுகிறது.



       காலப்போக்கில் பரதம்’’ என்பது வடக்கே இருந்து வந்தது என்று சிலர் பேசவும், எழுதவும் செய்தனர். அது அல்ல உண்மை, “பரதம்’’ என்பது தமிழ் நாட்டியம் தான். எனவே தான் சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு எட்டுத்தொகை  நூல்களில் ஆடல்கலையும், கலைஞர்களையும் அரசர்கள் பாதுகாத்தனர் என்ற குறிப்புகள் உள்ளன.  கி.மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த “இளங்கோவடிகள்’’ எழுதிய சிலப்பதிகாரத்தில், ஆடல்கலையின் நுட்பங்களை அருமையாக எடுத்து சொல்கிறார். சிலப்பதிகாரத்தில் புகார் காண்டத்தில் அரங்கேற்றுக் காதையில், மாதவி நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியை - ஆடல் கலையை, மேடை அமைப்பை, காட்சி அமைப்பை, திரைசிலைகள் அமைப்பை மிக அருமையாக கூறப்பட்டுள்ளது. “பொன்னியல் கொண்ட பூங்கொடி போல! நாட்டிய நன்நூலில் கடைப்பிடித்து ஆடினாள் மாதவி’’!  சிலப்பதிகாரம் கூறியது.   மாதவி 11 வகையான ஆடல்களை ஆடியதாக பதிவு உள்ளது.

       12ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “அடியார்க்கு நல்லார்’’ உரையில் பரதம் என்னும் நூல் ஆடற்கலையை பற்றி ஒன்று இருந்தது என்று எழுதுகிறார். இந்த ஆடற்கலை அரங்கேற்றம் செய்ய உகுந்த இடம்  திருக்கோயில்கள். அங்கு தான் அனைவரும் கூடும் இடமாக இருந்தது.

       கி.பி 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த காஞ்சி மன்னன் “பல்லவ நந்திவர்மன்’’ காலத்தில் “முத்தீஸ்வரர் கோவில்’’ 44 கலை மாதர்கள் கலைப்பணிக்காக அமர்த்தப் பட்டனர். கி.பி 11ம் நூற்றாண்டில் மாமன்னர் இராஜராஜ சோழன் காலத்தில் “தஞ்சை பெருஉடையார்’’ கோவிலில் கலைப் பணிக்காக 400 கலை மாதர்கள் அமர்த்தப்பட்டனர் என்று கல்வெட்டில் பதிவு உள்ளது. கலையை சொல்லி கொடுப்பவர்களை ஆடலாசன் என்றும், நட்டுவனார் என்றும் அழைக்கப்பட்டனர்.       அந்த  காலக்கட்டத்தில் கூத்து,  ஆடல், சதிராட்டம், சின்னமேளம், தாசி ஆட்டம்,  பரதம்  - என அழைக்கப்பட்டன.    பரதக்கலை தமிழ்கலை என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன.



       புறாநானுற்று பாடலில் “பரதவர்’’ என்கிற பெயர் இடம் பெற்றுள்ளன. பரதர் என்ற சொல்லுக்கு நடனம் என்று பொருள் உண்டு. பரதகலை என்பது சைவ சமயத்தோடு தொடர்புடையது. சினிமா பாடல்  இராகவேந்திர படத்தில் கூட ஆடல் கலையே தேவன் தந்தது, ஆடல் கலையே தேவன் தந்தது, தேவனில் இருந்து தான் ஜீவன் தந்தது, தேவனில் இருந்து தான் ஜீவன் தந்தது என்று பாடினர். நடன கலையின் தெய்வமாக, ஆடல் வல்லான் என்றும், நடராஜர் பெருமகன் என்றும், ஆனந்த தாண்டவ மூர்த்தி என்றும் பெருமிதம் கொள்கிறார்கள் ஆன்மீக மக்கள். சிவனை இந்தியா முழுவதும் லிங்கவடிவில் தான் வழி பாடுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் தான் தில்லையில் ஆனந்த தாண்டவம் ஆடிய நிலையில் வழிபடும் மரபு அன்று முதல் இன்று வரை வளர்ந்து கொண்டே உள்ளது.

       கோவில்களில் ஆடல் கலைகளை “சிற்பங்களாக’’ மன்னர்கள் செதுக்கினார்கள். தஞ்சையில் - பிரகதீசுவரர் ஆலயம், கும்பகோணத்தில் - சாரங்கபானி ஆலயம் விருதாசலத்தில் - விருத்தகிரிசுவரர் ஆலயம் திருவண்ணாமலையில் - அருணாச்சலேஸ்வரர் ஆலயம் பல்வேறு “அடவுகள்’’ சிலைகள் உருவத்தில் இன்றும் உள்ளன. பரதத்தின் ஒரு பகுதி தான் ஆனந்த தாண்டவம்.        பிற்காலத்தில் 1802ல் தஞ்சை நால்வர் என்று சொல்லப்பட்ட சின்னையா - பொன்னையா - சிவானந்தம் - வடிவேலு என்ற நான்கு சகோதரர்கள் நாட்டியதற்கு தக்கவாறு இசை அமைத்து பரதநாட்டிய கலை வளர்ச்சி பெற உதவினார்கள். குறிப்பாக சிவானந்தம் தஞ்சை பெரிய கோவிலின் நட்டுவாங்க பணியில் இருந்து பல கலை மகளிருக்கு பயிற்சி கொடுத்தார் என்று “கல்வெட்டு’’ பதிவு கூறுகிறது. பரத நாட்டியத்திற்கு உரிய ஆடைகள் எட்டு கஜ புடவையை “பஞ்சகச்சம்’’ போல் அணிந்து ஆடினார்கள்.  

 “ருக்மணி அருண்டேல்’’  தனிகவனம் செலுத்தி நடன உடைகளை தனித்தனி பாகமாக பிரித்து தயார் நிலையில் உள்ள ஆடையாக மாற்றினார். காலப்போக்கில் ஆலயத்திற்கு இருந்த தொடர்பு குறையவே நடனகலையும் மறையத் தொடங்கியது. குறிப்பாக சமுகத்தில் இருந்த கல்வியாளர்கள், உயர்பதவியில் இருந்தவர்கள், வசதிபடைத்தோர் இந்த கலையை வளர்க்க முன் வரவில்லை.

1928ம் ஆண்டு சங்கீதவித்வசபா செயலாளர் இ.கிருட்டினன் அவர்கள் பரதநாட்டியத்தின் ஒரு அங்கமாக “சதிர் நடனத்தை’’ அறிமுக படுத்தி “கல்யாணி - இராசலட்சுமி’’ சகோதிரிகள் மூலம் அரங்கேற்றினர். அதன் தொடர்ச்சி இன்று பல்வேறு மேடைகளில் இன்னும் சொல்லப் போனால் பல வெளிநாடுகிளலும் “பரதநாட்டியம்’’ சிறப்பாக நடைபெறுகிறது. மறைந்துவிட்ட புகழ்பெற்ற திரைபட நடிகை பத்மினி அவர்கள் அமெரிக்காவில் நாட்டிய பள்ளி வைத்து பாரதத்தை கற்றுதந்தார்.        ஆக  பக்தி இலக்கிய சான்றுகள் படியும், நமக்கு கிடைத்திருக்கிற தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திவாகர நிகண்டு போன்ற பல நூல்களின் ஆவண படியும் பரதம் கலை என்பது தமிழ் கலையே. எனவே தான் அருணை தமிழ்ச் சங்கத்தில் காலையில் நடந்த நிகழ்ச்சியில் பரதநாட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம் என்றார்.



இரவு 8.00 மணிக்கு அருணை தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் விழாவில் கலந்து கொண்டு பேச்சு- கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றுகள், கோலப்போட்டியில் வெற்றிபெற்ற மகளிர்களுக்கு பரிசுகள் வழங்கி, புதுச்சேரி முதலமைச்சர் வி.நாராயணசாமி அவர்கள் விழாப்பேரூரை நிகழ்த்தினார். அவர் பேசும் போது, அருணை தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் விழா இங்கு சிறப்பாகவும், எழுச்சியாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. 8ஆண்டுகளுக்கு மேலாக இந்த சங்கத்தை சிறப்பாக நடத்தி வரும் எ.வ.வேலு அவர்கள் இங்கே ஆற்றிய உரை, அவரது அனுபவ உரைய அல்லது ஆராய்ச்சி உரையா என்று வியக்க வைக்கும் அளவிற்கு அற்புதமான ஒரு உரையை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

தமிழகமும், புதுச்சேரி மாநிலமும் தமிழ் பாண்பாட்டை, தமிழ் கலாச்சாரத்தை எப்படி தமிழ் சமுதாயம் வாழ வேண்டும், வாழ்ந்து இருக்கிறார்கள் அதை எப்படி நம் கடைப்பிடிக்க வேண்டுமென்று பின்னி பிணைந்த மாநிலங்கள், புதுச்சேரி மாநிலத்தில் கம்பன் தமிழ்ச் சங்கம் என்று வைத்து கம்பனுடைய புகழை நாங்கள் பாடி வருகிறோம். புதுசேரி மாநிலத்திற்கு மிக்பெரிய பாக்கியம் உண்டு, மகாகவி பாரதியார் அவர்களை புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நம்முடைய வீரம் சேரிந்து நம்நாட்டின் சுகந்திரத்திற்கான பாடலை பாடினார். அவர் ஒரு தீக்கதரிசி அவர் வாழ்ந்த நாளிலேயே ஆடுவோமே, பல்லு பாடுவோமே ஆனந்த சுகந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடினார். மிகப்பெரிய தீக்கதரிசி மகாகவி பாரதியார். அதுமட்டும் அல்ல தனி ஒருவருக்கு உணவு இல்லை எனில், இந்த ஜகத்தை அழித்துவிடோம் என்று சமுதாயத்தில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று பாடியவர் தலைவர். அவருக்கு சீடனாக இருந்த புரட்ச கவிஞர் பாரதிதாசனார் வீரம் சேரிந்த பாடல்கள், விடுக்கான பாடல்கள் பாடி தமிழுக்கு புகழ் சேர்த்தனர். இப்படி பாரம்பரியமாக தமிழகத்திலேயும், புதுச்சேரி மாநிலத்திலேயும் இருக்கிற தமிழ் ஆசிரியர்கள், தமிழ் புலவர்கள் தமிழுக்காக தொண்டு செய்பவர்கள் எல்லாம் இப்படி தன்னலமற்று சேவை செய்வதற்கு காரணமாக அவர்கள் தமிழ் மொழியை காக்க வேண்டுமென்ற என்பதற்காக நம்முடைய தமிழகத்திலேயே நம்முடைய பாரம்பரியும், கலாச்சாரம், கலைகள், நாட்டிய கலைகள், ஓவியங்கள், சிற்பங்கள் என்று அனைத்தும் நாம் பாதுகாத்து வருகிறோம். அதில் ஒரு பணிதான், அதில் ஒரு அங்கமாக தான் அருணை தமிழ்ச் சங்கம் இருந்துவருவது என்பதை நான் பெருமையோடு கூறிக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.

இங்கே பேசிய அருணை சங்கத்தின் தலைவர் அவர்கள் சொன்னார்கள் காலை 9.00மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த விழா, மங்கல இசையோடு ஆரம்பித்து பரநாட்டியத்தில் இருந்து தொடங்கி, பட்டிமன்றம் நடத்தி, அதுமட்டும் அல்லாமல் கிராமப்புற பாடல்கள், தெருகூத்து இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, முடிவிலே அம்மையர் மங்கையர் கரசி அவர்கள் சொற்பொழிவுகளை கட்டு இங்கே தமிழை வளர்த்தவர்கள், தமிழை வளர்ப்பதற்காக பாடுபட்டுவர்களுக்கு விருதுகளை வழங்குவது மட்டுமல்லாமல் கட்டுரைப்போட்டி, பேச்சுப் போட்டி, கோலப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குகின்ற விழாவை நடத்தி பாரம்பரியமாக, தமிழ் பாரம்பரியத்தை கடைபிடித்து அதில் தமிழுக்கு பெருமை சேர்க்க வேண்டும், தமிழ் கலாச்சாரத்தை காக்க வேண்டுமென்று  முயற்சிக்கு நான் மரியதைக்குரிய தலைவர் அவர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலமாக நமது தமிழ்மொழியை, வருங்கால சங்கதிகள் அவர்கள்  இப்போது இந்த மேலை நாட்டு மோகம் ஆட்டிப்படைக்கின்ற இந்த காலத்திலே நாம் தொடர்ந்து நம் பாரம்பரியத்தை கடைப்பிடிக்க வேண்டுமென்று மிக சிறப்பான முறையில் இந்த விழா நடைபெற்று கொண்டு இருக்கிறது.

நானும் என்னுடைய புதுச்சேரி மாநிலத்திலே பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறேன். குறிப்பாக புதுவை தமிழ்ச் சங்கத்தில் இருந்து புதுச்சேரி மாநிலத்தில் இருக்கிற நாட்டிய கலைஞர்கள், நாடகம் நடத்துபவர்கள், தெருகூத்து நடத்துபவர்கள், எழுத்தாளர்கள் புத்தகங்களை வெளியிடுவது, அதுமட்டுமல்லாமல் புலவர்களின் பாடல் புத்தகங்கள் வெளியிடுவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு நான் நிறை சென்ற போது என் மனதிலேயே நம்முடன் பின்னி பிணைந்து இருக்கிற, இந்த தமிழ் மொழிப்பற்று எந்த சக்தியாலையும் அழிக்க முடியாது என்பது எனக்கு அழுத்தமாக தெரிகிறது. ஏன் என்று சொன்னால் நம் இரத்ததில் ஊரியது தமிழ், நாம் வாழ்வில் நாம் கடைப்பிடிப்பது தமிழ் நாம் எங்கு சென்றாலும், நாம் ஜம்மு காஷ்மீர் சென்றாலும் சரி, குறிப்பாக வட மாநிலங்களே குறைவாக பணிபொழிவு இருந்தாலும் சரி நான் வேட்டிகட்டிக்கொண்டு தான் செல்வேன்.

நம்முடைய தமிழ் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்க கூடாது, நம்மை பார்த்து நான் ஆங்கிலத்தில் உரையாடவது மட்டுமல்ல இந்தியையும் கற்று இருக்கிறேன். வட மாநிலங்களிலே என் கட்சியில் பல பொறுப்புகளில் இருந்து இருக்கிறேன். மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் மாநிலம் ஒடிசா மாநிலம், ராஜஸ்தான் மாநிலம், ஜம்மு காஷ்மீர் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் எல்லாம் தொடர்ந்து நான் செல்லும் போது, நான் வேட்டிக் கட்டிக்கொண்டு தான் செல்வேன். குறிப்பாக வடமாநிலங்களில் எனக்கு மவுஸ் என்று சொல்ல மாட்டேன். நான் மேடையில் இந்தியில் பேசும் போது சரளமாக பேசுவேன். அதை ஒரு வேட்டிக்கட்டிய தமிழன் இந்தியில் சரளமாக பேசுகிறானே என்று என்னை பாரட்டுகிறவர்கள் அந்த வட மாநிலத்திலேயே இருக்கிறார்கள். மொழியை தெரிந்து கொள்ளலாம், மொழியை ஒருவர் பேசலாம், மொழியை திணிக்க கூடாது. மொழியை திணிப்பதை யாரும் ஏற்றக்கொள்ள கூடாது. நான் விரும்புகிற மொழியை கடைபிடிக்க வேண்டும்.

நாம் தெரிந்து கொள்ளலாம், ஆனால் இந்த மொழியில் தான் படிக்க வேண்டுமென்று சொன்னால் நாம் அதை எதிர்க்க வேண்டும். ஆகவே நான் வடமாநிலங்களில் செல்லும் போது, நான் இந்தியில் மேடையில் பேசும் போது, வேட்டிக்கட்டி பேசும் போது, வட மாநிலத்தில் உள்ளவர்கள் ரசிப்பார்கள். இப்போது அருணை தமிழ்ச் சங்கத்தின் தலைவரின் உரையை நான் கேட்டேன். அவர் பேசும் போது தெளிவாக சொன்னார். நான் ஒரு நாத்திக வாதி என்று சொன்னார், நான் ஒரு ஆன்மீகத்தை கடைபிடிக்கிறவன். ஆனால் நாத்திக வாதிகள் தான் ஆன்மீகத்தை அதிகமாக தெரிந்து கொள்வார்கள். அதற்கு காரணம் எதில் குறை இருக்கிறதோ அதை சுட்டி காட்டுவார்கள். நிறை இருந்தால் பாராட்டுவார்கள்.

இப்போது ஒரு புதிய முறை தமிழக்தில் உள்ளது. அது எனக்கு புரியாத முறை ஆன்மீக அரசியில். அது பெரிய குழுப்பம். இப்ப நாட்டில் நீங்கள் பார்த்தீங்கனா அதாவது ஆன்மீக என்பது இறைவணின் வழிபாடு, அதில் எப்படி அரசியலை நுழைக்க முடியும். நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். அரசியில் வேறு, ஆன்மீகம் வேறு, நாத்தீகம் வேறு அரசியலும், ஆன்மீகமும் இணைந்தால் இந்த நாடு என்ன ஆகும் என்று நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். வட மாநிலங்களிலேயே கிருஸ்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய வீட்டிலே அவர்கள் பாய்புல் படிக்கும் போது வெளியே இழத்து அடிக்கிறார்கள், அதாவது இந்து மதம் என்று சொல்லிக்கொண்டு, அவர்கள் அவர்களை தாக்குகிறார்கள் இஸ்லாமியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை தொழுவைக் செல்லும் போது தாக்குகிறார்கள். இது இந்து மதம் கிடையாது, ஆன்மீகம் கிடையாது.

எல்லா மத்தையும் ஏற்றுக்கொள்வதுதான் இந்து மதம். எல்லோருடைய மதத்தை, அவரவர் அவர் மதத்தை, மத கோட்பாடுகளை  கடைபிடிக்க வேண்டிய கடமை, செய்ய வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு தலையிடுவதற்கு வேறு யாருக்கும் உரிமை கிடையாது. இப்போது வட நாட்டிலே இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது.  இதையெல்லாம் எதிர்த்து போராட வேண்டிய கால கட்டாயம் நமக்கு இருக்கிறது. நாம் எல்லா மத்தையும் மதிக்க வேண்டும். எல்லா மதத்தினருக்கும் உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். அவரவர்கள் விரும்பிய மதத்தை அவர்கள் கடைபிடிக்க வேண்டும்.  ஆனால் அவர்களை ஒரு கடைபிடிப்பவர்களை  தாக்குவதோ, அவர்கள் மீது குறை சொல்வதோ என்பது அது இந்து மதத்தின் கோட்பாடுகளும் கிடையாது, கொள்கையும் கிடையாது. இதை தான் எதிர்த்து நாங்கள் போராடி கொண்டு இருக்கிறோம். நம்முடைய தனி மனிதனுடைய சுதந்திரம். ஒருவருக்கு நாம் எப்படி வாழ வேண்டும். எந்த மதத்தை கடைபிடிக்க வேண்டும், எந்த உடை, உணவு உடுத்த வேண்டும் என்று அவரவர் முடிவு செய்ய வேண்டும் மற்றவர்கள் அதை திணிக்க கூடாது. இது தனிமனிதனின் சுதந்திரத்தின் மிகப்பெரிய கோட்பாடு.

நாம் பார்க்கிறோம், இப்போது தமிழகத்திலே ஏற்கனவே சொல்வார்கள் உங்களுக்கு ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு  இப்போது ஜல்லிக்கட்டு என்று தமிழகத்திலே தமிழர் திருநாள் அன்று தமிழகத்தில் பல இடங்களில் இந்த ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. இது தமிழுனுடைய பாரம்பரியமான ஒரு விளையாட்டு ஒரு வீர விளையாட்டு இதை மத்திய அரசு தடை செய்தார்கள். அதற்காக ஒரு அமைப்பு எதிர்த்து மனு தாக்கல் செய்தார்கள் தமிழகத்திலேயே அதை நடத்த வேண்டும் என்றும், போராட்டம் நடத்துவர் மீது  தடியடி, துப்பாக்கி சூடு நடைபெற்றது என்று உங்களுக்கு தெரியும். ஆனால் எங்களுடைய மாநிலத்திலேயே இந்த  ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு அரவணிப்பு கொடுத்து, அவர்களுக்கு ஆதரவு கொடுத்து  இதை நடத்துவது தமிழரின் பாரம்பரியம், கலாச்சாரம் என்று நாங்கள் ஒருவித அசம்பாவிதமும் ஏற்படாதவாறு அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தோம். இது தான் இன்றைய தமிழகத்தில் நடக்கிற ஆட்சிக்கும், எங்களுக்கும் உள்ள வித்தியாசம். சட்டத்தை நிறைவேற்றினோம் சட்டமன்றத்தில். இப்போது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பினோம். அது வந்த பிறகு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை எங்கள் அரசு முறையாக செய்து கொடுக்கும்.

நம்முடைய பாரம்பரியத்தை காக்க வேண்டிய பொறுப்பு  நாம் அனைவருக்கும் உண்டு. சிறிது, சிறிதாக நம்முடைய கலாச்சாரம், கலைகள் எல்லாம், அவைகள் அழிகின்ற நிலையில் நாம் விட்டுவிட கூடாது. இன்னொரு மிகப்பெரிய மகிழ்ச்சியான விஷியம், நான் மரியாதைக்குரிய இந்த அமைப்பின் தலைவரிடம் கூட பகிர்ந்து கொண்டேன்.  எங்கள் மாநிலத்தில் உள்ள பள்ளியினுடைய மாணவ, மாணவியர்கள்  அகில இந்திய அளவில் நடைபெற்ற  நாடகப்போட்டியில் கலந்து கொள்ள சென்றார்கள். டெல்லியில் அந்த போட்டி நடைபெற்றது.  அதிலே எங்களின் புதுச்சேரி மாநிலத்தின் மாணவர்கள்  10,11,12ம் வகுப்பு மாணவர்கள் சென்றார்கள். அவர்கள் அந்த மேடையில் தெருகூத்து நடத்தினார்கள்  அந்த தெருகூத்திற்கு அகில இந்திய அளவில் முதல் பரிசு கிடைத்தது. நம்முடைய மாநிலத்தில் இருந்து  நாம் தெருகூத்தை இந்தியா முழுவதும் பரப்பி வருகிறோம்.

 அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். நம் கலை, கலாச்சாரங்கள் எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக தலைவர் அவர்கள் சொன்னது போல ஒவ்வாரு மாநிலத்திலும், தமிழகத்தில் பரதநாட்டியம் இருப்பது போல என்னை பொருத்த வரையில் தமிழகத்தில் பரதநாட்டியம் என்பது  வேர் ஒன்றாக இருப்பது தான் என்னுடைய கருத்து. அதில் உங்களுடைய கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இது வரல இது தமிழனின் பாரம்பரியம் இல்லை என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. பரத நாட்டியம் என்பது நமக்கு பெருமை சேர்க்க கூடிய ஒன்று. அதைப்போல அங்க கதக்களி கேரளா மாநிலத்தில் மிக அழகாகவும், பெருமையாகவும் இருக்கிற ஒரு நிகழ்வு. 

அதைப்போல குச்சுப்புடி, ஒடிசி அவர்களுடைய நாட்டியமாக மிகப்பெரிய அளவில் பாரட்ட கூடியது. நீங்கள் மணிப்புர் சென்று பார்த்தீர்கள்  என்றால் இரண்டு பகுதி உள்ளது. ஒருமலை வாழ் மக்கள் இருக்கிறார்கள், மலைவாழ் மக்கள் தங்களுடைய கலாச்சாரத்தை  கடைபிடிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மணிப்புர் என்ற நகரம் உள்ளது. அந்த மணிப்பூர் பகுதியல் வைனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

அந்த வைணவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் இராமயணம், மகாபாரதம் போன்ற நாடகங்கள் நடத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் மணிப்புரி என்று அவர்களுடைய நாட்டியமானது, ஒரு அளவிற்கு பரதநாட்டியத்தை ஒட்டி வருகிற நாட்டியமாக இருந்து வருகிறது. எப்படியும் நம்முடைய இந்திய நாட்டியல் உள்ள பல கலைகள் ஒன்றுக்கொன்று பின்ணி பிணைந்து இருக்கிறது. இதைத்தான் நாம் பாராட்ட வேண்டும், போற்ற வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும்.  இதுபோன்ற நிகழ்வுகள், நிகழ்ச்சிகள் தமிழர் திருநாள் அன்று போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு, அதுமட்டும் அல்லாமல் பல துறைகளில் வல்லுனராக இருப்பவர்களுக்கு விருது கொடுத்து கௌரவ படுத்து மட்டுமல்லாமல் மற்றும் பல வல்லுனர்களையும், புலவர்களையும் அவர்களின் துறையில் சிறந்த விளங்க வேண்டுமென்று அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருதுகளை கொடுத்திருக்கிற அருணை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மற்றும் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் என்னுடைய பாராட்டையும், நன்றியும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.

விழா ஏற்பாடுகளை அருணை தமிழ்ச் சங்க துணைத் தலைவர் கவிஞர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், செயலாளர் வே.ஆல்பிரட், பொருளாளர் ஹாஜி.எம்.இ.ஜமாலுதீன், இணைச் செயலாளர் எ.வ.குமரன் ஆகியோர் செய்திருந்தனர்.

தொகுப்பு – து. ராஜா



சார்ந்த செய்திகள்