Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #04

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

maayapura series part 4

 

’எங்கேயோ பறந்து எதை எதையோ கொத்தித் தின்று ஊர் மேய்ந்த  காக்கா, உழைச்சுக் களைச்சு ஏமாந்த எருது முதுகுல ஏரோப்ளேன் ஓட்டுச்சாம்’ ங்கற  கதையா, ஊரிலிருந்து வந்ததிலிருந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு சுறுசுறுப்பாக  வேலை செய்து கொண்டிருக்கும் சங்கவியை, வேலைக்காரி என சொன்னதும் கொடுமைக்கார அத்தைக்கும் லேசாக உறுத்தல் இருந்தது. 

 

‘என்ன செய்வது? அண்ணன் மகளை எதிர்த்து பேசினால் அண்ணன் கோபித்துக் கொள்வார்’ என பயந்து அமைதியாக இருந்தார் தங்கம்.

 

புவனா சொன்னதைக் கேட்டுக் கொண்டே அங்கே வேகமாக உள்ளே நுழைந்த அசோக், "உழைக்கறவங்க  வியர்வை மண்ணுல விழறதால, அவங்க  சீவி முடித்து சிங்காரிக்காட்டியும் அழகாகத்தான் தெரிவாங்க. அடுத்தவங்களை அதிகாரம் பண்ணி வாழற  கூட்டத்துக்கு உடம்பு முழுவதும் அண்டாக் கணக்கில் கொழுப்புதான் இருக்கும் புவனா" என்று பொதுவில் சொல்லி விட்டு, “அது யாருன்னு தெரியாமலே வேலைக்காரின்னு சொல்றே...?”என்று சிரித்தான்.

 

இதை கேட்டதும் எண்ணெய்யில் போட்ட பணியாரம் மாதிரி "அசோக் மாமா நான் ’அண்டாவா?’ என்னைப் பார்த்தா எப்படி தெரியுது?  என் அழகுக்கு என்னைக் கட்டிக்க நான் நீன்னு போட்டி போட்டுக்கிட்டு ஒரு கூட்டமே எங்க வீட்டு வாசல்ல காத்துகிட்டு இருக்காங்க தெரியுமா?” என்று குதித்தாள் புவனா.

"உங்க வீட்டு வாசல்ல இளிச்சவாயன்கள் காத்துகிட்டு இருக்கலாம். பித்தளைக்கு முலாம் போட்டா மாதிரி  நீ போட்டுகிட்டு இருக்கற உன்  நகைகளுக்காகத் தான் அவங்க இருப்பாங்க. அன்பா இருக்கறவங்களுக்கு புன்னகைங்கிற நகையே போதும்" என்று புவனாவை வெறுப்பேத்தினான் அசோக்.

 

இதுக்குமேல அமைதியா இருந்தா சோளக்காட்டில் நெருப்பு பொறி பட்டா மாதிரி ஆகிடும் நிலைமைன்னு  நினைத்துப் பதறிய தங்கம் "டேய் அசோக், வந்ததும் வராததுமா என்னடா மாமன் பொண்ணு கிட்ட வம்பளந்துகிட்டு இருக்கற"என்று அவனை அமைதிப்படுத்தினார்.

 

புவனா வெடுக்கென்று முகத்தை வெட்டி, சங்கவியை ஒரு பார்வை பார்த்து விட்டு விருட்டென்று உள்ளே ஓடினாள்.

 

கை கால் கழுவுவது போல கொல்லைப்  பக்கம் வந்து சங்கவியிடம் ரகசிய குரலில்  ”புவனா சொன்னதை எல்லாம் மனசுல வச்சிக்காத சங்கவி" என்று ஆறுதலாக பேசி விட்டு அன்பாய் ஒரு பார்வை வீசி விட்டுப் போனான் அசோக்.

 

வெளியில் சென்ற பெருமாளும் மணியும் வீடு வந்து சேர்ந்தார்கள். மாமன் மச்சான் நலன் விசாரிப்புகள், அலமேலுவிடம்  நலம் விசாரிப்புகள் என்று வீடு கல்யாணக் களை கட்டியது. 

 

மறுநாள் பந்தக்கால் நட்டு நலங்கு வைக்க வேண்டும். அதற்கு ஊராருக்குச் சொல்ல வேண்டும். வீட்டில் இருக்கும் சின்னப் பொண்ணுங்க  தான் போய் சொல்லிட்டு வருவார்கள். 

"கம்புக்கு களை எடுத்த மாதிரியும் ஆச்சு. தம்பிக்குப் பொண்ணு பார்த்தா மாதிரியும் ஆச்சு " என்கிற கதையாக  எங்கள் வீட்டிலும் திருமண வயதில் பெண்  இருக்கிறது என்று,  ஊராரும் உற்றாரும் தெரிந்து கொள்வார்கள் என்று இந்தச் சடங்கெல்லாம்  வைத்துள்ளார்கள்.

 

அன்று மாலை அலமேலுவை அழைத்த தங்கம் "நீயும் சங்கவியும் போய் ஊர் சொல்லிட்டு வாங்க" என்று சொல்லி வைத்தாள். அதற்குள் தங்கத்தின் அண்ணி நாகம்மா "என் மகள் புவனாவும் போகட்டும்" என்று சொன்னாள். புவனா "எனக்கு கால் வலிக்குது. என்னால் போக முடியாது" என மறுத்தும் வலுக்கட்டாயமாக ஊர் சொல்லக் கிளம்பிப் போகச் சொன்னாள் தங்கம். 

 

காரணம் தன் அண்ணன் மகளை அனைவரும் பார்க்கவேண்டும். அவளின் செல்வச் செழிப்பை எல்லாரும் பார்த்து வியக்க வேண்டும் என்பதற்காகத்தான் இது. 

 

சங்கவி, தான் கட்டியிருந்த பாவாடை தாவணியைச் சரி செய்தாள். "லைபாய்" சோப்பு போட்டு முகம் கழுவி, தலையைச் சீவி காலையில் வைத்த கனகாம்பரத்தையே மீண்டும் வைத்து எளிமையாக கிளம்பினாள். 

 

எளிமையாக இருந்தாலும் பிறர் கண்களைக் கவரும் அழகியாக  இருந்தாள். சலவைக்குப் போய் வந்த நிலவு போல. புவனா நேர்மாறாகக் கிளம்பினாள்  ‘சின்தால்’ சோப்பு போட்டுக் குளித்துவிட்டு, சும்மா கமகமன்னு, வீட்டிலிருந்து கட்டிவந்த மல்லிப் பூச் சரத்தை யாருக்கும் கொடுக்க மனமில்லாமல், தானே வைத்துக்கொண்டாள். என்ன பூவை விட முடி குட்டையாக இருந்தது.

 

தாமரையைச் சுற்றிலும் முத்துச் சலங்கை வைத்த அழகான வெள்ளி குங்குமச் சிமிழைக் கையில் வைத்துக்கொண்டு, ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, குங்குமம் கொடுத்து  மறு நாள் விசேஷத்திற்கு வரச் சொல்லிவிட்டு வந்தனர். நிறைய வீடுகளில் சங்கவி யாரென அலமேலுவைக் கேட்டனர். அலமேலு அடிக்கடி அண்ணன் வீட்டிற்கு வருவதால் அவரை அனைவருக்கும் தெரிந்திருந்தது. சில வீடுகளில் புவனாவையும் சங்கவியையும் ஒப்பிட்டுப் பேசினார்கள்.

 

தங்கம், தன் அண்ணன் மகள் புவனாவைத் தன் இரண்டாவது மகன் அசோக்குக்கு மணம் முடிக்கப் போகிறார். அண்ணன்காரன் திருமணம் முடிந்ததும், அதே மேடையில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போகிறது என்றெல்லாம் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த விஷயம் அலமேலுவுக்கோ சங்கவிக்கோ தெரியாது.

"சங்கவி அழகா இருக்கா, குணமாய் இருக்கா, இவளையே பேசி முடிக்கலாம்" என்று சிலர் வாயாலேயே பந்தல் போட்டனர். "தங்கத்தைப் பற்றி தெரியாதா உனக்கு?  ரசத்தில் இருக்கும் மிளகாயை எடுத்துவைத்து, கார குழம்பு வைக்கிற கஞ்சகி. பணமோ பணம்ன்னு அலையறவ" என்று சிலர்  வாய்ப் பந்தலில் கொடியை ஏற்றினர். 

 

ஒரு வழியாக இவர்களின் ஊர்வலம் முடிந்து, வீடு சேரும் போது இருட்டி நீண்ட நேரம் ஆகியிருந்தது. வீட்டிற்குள் நுழைந்த சங்கவி, அங்கே 12 வயதில் ஒரு சிறுமியும்  பத்து வயதில் ஒரு பையனும் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். இவர்கள் யாராக இருக்கும்? என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே 

"வாம்மா கோமளம்? எப்படி இருக்க? மாப்பிள்ளை வந்திருக்கிறாரா?” என்று அன்புடன் விசாரித்தார் அலமேலு.

"நல்லா இருக்கேன் அத்தை. அவருக்கு லீவு இல்லை. நேராக கல்யாணத்திற்கு வந்துவிடுவார்" என்று கூறினாள் விசேசத்துக்கு வந்திருந்த தங்கத்தின் மூத்த மகள் கோமளம்.

 

இவர்களையே பார்த்துக்கொண்டிருந்த சங்கவியிடம் "என்னடி அப்படி பார்க்குற? இது செல்வம் அண்ணனோட மூத்தப்  பெண் கோமளம்” என்றாள் அலமேலு.

 

பளிச்சென்று இருந்த கோமளமோ  "இதாரு அத்தை. உன் மவ சங்கவியா? பார்க்க நல்லாத்தான் இருக்கா. படிக்கிறாளா? கல்யாணத்துக்கு வளர்ந்து நிக்கிறா? காலத்தோட முடிச்சிட வேண்டியதுதானே?? என்று அவளது யூகங்கள் கேள்விகளாக வந்தது. 

"பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சை எழுதி இருக்கா. எங்க தகுதிக்கு ஏற்ற மாதிரி நல்ல இடமாக வந்தால், முடித்துவிட வேண்டியதுதான்” என்று என்னவோ எல்லாம் நாளைக்கே நடக்கிற மாதிரி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். 

"அம்மா நான் காலேஜ் போய் படிக்கணும். இப்ப கல்யாணமெல்லாம் வேண்டாம்" என்று சங்கவி சிணுங்கினாள்.

"இந்த 12 ஆம் படிப்புக்கே மாப்பிள்ளைய, எங்க போய்த் தேடுறதுன்னு தெரியலை. எல்லாரும் பண்ணையம் பண்றவங்களா இருக்காங்க" என்று நீட்டி முழக்கினாள் அலமேலு.

"எவடி அவ காதுல கயிறு திரித்து, ஆகாசத்துல வலையை பின்னி, தரையில மீனப் பிடிக்கிறவ? வந்திருக்கற சொந்த பந்தங்களுக்கு நாக்குக்கு ஒனவா  சமைத்துப் போடறதை விட்டுட்டு, வீண் கதை பேசுறவங்க”ன்னு தனம்மா சத்தம் போட்டதும் அலமேலு தாமாக அடுக்களைக்குள் சென்றாள்.

 

அவசர அவசரமாக இரவு நேர உணவு தயாரித்து அனைவருக்கும் சாப்பாடு போட்டு வேலைகளை முடிப்பதற்கும், சுவர்க் கடிகாரத்தில் மணி 11 முறை மணி அடிப்பதற்கும் சரியாக இருந்தது.

"அலமேலு காலையில ரெண்டு மணிக்கெல்லாம் எழுந்து எல்லாரும் குளிப்பதற்கு வெந்நீர் போட்டுவிடு, நலங்கு வைக்க வர்றவங்களுக்கு சாப்பாடு செஞ்சுடு" என்று என்னவோ ஓட்டலில் ஆர்டர் கொடுப்பது போல சொன்னாள் தங்கம்.

"அம்மா எல்லாரும் போல, நாமளும் கல்யாணத்தன்னைக்கு  வந்திருக்கலாம். ஏன்தான் முன்னாடி வந்து இப்படி கஷ்டப்படுறோமோ தெரியலை?” என்றாள் சங்கவி.

"செல்வம் அண்ணனுக்காக தான் சங்கவி இதையெல்லாம் செய்றோம்.  இங்க நாம படுற கஷ்டத்தை எல்லாம் அப்பாக்கிட்ட சொல்லாத.". என்றாள் அலமேலு.

"அம்மா உனக்குப் புரியுதா? நாம ஏழைன்னு  எப்பவாவது அவங்க சொல்லிக்  காட்டினா  பரவால்ல. பேசுற ஒவ்வொரு சொல்லுமே அப்படித் தான் இருக்கும்மா" என்று வேதனையுடன் சொன்னாள் சங்கவி.

"நமக்கு இப்ப சொந்தமா 4 காணி இருக்குன்னா, அதுக்கு செல்வம் அண்ணா தாம்மா காரணம். அவர் நிலத்தை குத்தகைக்கு பயிர் செஞ்சு,  20 வருஷமா கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து, அவர் கிட்டக் கொடுத்து வந்தோம். அவர் பெரிய மனசு பண்ணி அந்த நிலத்தை நமக்கே எழுதிக் கொடுத்திட்டார்.  கூடப்பிறந்த அண்ணன் தம்பிகளே  ஏமாத்தற இந்த காலத்துல,  நமக்கு இதை எவ்வளவு பெரிய உதவியா செஞ்சிருக்கார். அதுக்கு நான் நன்றியோட இருக்கேன். அதனாலதான் அண்ணி என்ன மாதிரி திட்டினாலும் பொறுத்துகிட்டு, அண்ணனுக்காக வேலை செய்யறேன்." என்று பாசமலர் சாவித்திரி மாதிரி பேசினாள் அலமேலு.

”என்ன இருந்தாலும் கஞ்சோ கூலோ நம்ம வீட்ல இருக்கிற மாதிரி நிம்மதி இங்க இல்லம்மா. உங்க அண்ணனுக்கு நன்றி செய்யணும்னா வெளில எங்கயாவது வேலை செய்து, அதில் கிடைக்கிற பணத்தில் ஏதாவது செய்யலாம். நீ இந்த வயசுல கஷ்டப்படுறதையும், மத்தவங்கக்கிட்ட அவமானப்படுறதையும் என்னால தாங்கமுடியலம்மா?” என்று சொல்லும் போதே சங்கவியின் விழிகளில் ஈரம் கோத்துக்கொண்டது..

"விடு சங்கவி, கல்யாணம் முடிஞ்சதும் நமக்கு இங்கே என்ன வேலை இருக்கு? ஊரைப்  பார்க்கப் போக வேண்டியதுதான்" என்று சங்கவிக்கு ஆறுதலாகப் பேசினாள் அலமேலு. இவர்களின் இந்த உரையாடல் முழுதும், அடுத்த அறையில் இருந்த அசோக்கின் காதில் அப்ப்பட்டமாக விழுந்துகொண்டுதான் இருந்தது. அவன் இறுக கண்களை மூடிக்கொண்டான்.

 

அடுக்களை அருகே இருந்த அறையில் மகளுடன் உறங்கச் சென்றாள் அலமேலு. படுக்கையில் படுத்த பின்னர், அலுமேலுவுக்குத் தெரியாமல் சங்கவியும், சங்கவிக்குத் தெரியாமல் அலமேலுவும், கண்ணீர் பதுமையாக மாறி இருந்தனர். 

 

அடுத்த நாள்  நடக்கப் போகும் விதியின் விளையாட்டை யார் அறிவார்?

 

(சிறகுகள் படபடக்கும் ) 
 

 

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #03

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #34

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

maayapura part 34

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமாவின் வரவிற்கு பிறகு சிறு மாற்றங்களுடன் காலநதி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மல்லிகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டுப் போன மல்லிகாவின் அண்ணன்களும் அம்மா அப்பாவுடன் மீண்டும் இப்போது தான் இங்கு வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் காசிக்கு சென்றிருந்த அப்பா அம்மா இப்போதுதான் திரும்பி இருந்தார்கள்.

 

மல்லிகாவின் அம்மா வந்து இறங்கியதுமே புராணத்தை ஆரம்பித்துவிட்டார். 

"மானூத்து தோப்புல பாடித்திரிந்த குயிலு, வண்ணாத்தி பாறையில் ஆடி திரிந்த மயிலு, வாடி வதங்கி கட்டில்ல கிடக்கறா.. அதை பார்க்கையில வடக்கால போன பாவி மக  நான் கங்கையிலேயே போயிருக்கக் கூடாதா" என்று ஒப்பாரி  வைத்துக் கொண்டிருந்தார்.

"என்னங்க பண்றது நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. அதுவரைக்கும் அரும்பாடுபட்டு ரெண்டு உயிரையும் காப்பாற்றி ஆச்சு"ன்னு தங்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். "நீங்க என்ன பண்ணுவீங்க சொந்தம் ஆச்சே உங்க சின்ன மருமகளை விட்டுக் கொடுப்பீங்களான்னு" குத்தி காட்டினார் மல்லிகாவின் அம்மா ரஞ்சிதம்.

" அம்மா நான் வேணும்னே செய்யலை தெரியாம நடந்திருச்சு மன்னிச்சுடுங்க" என்று சங்கவி கெஞ்சும் குரலில் சொன்னாள்.

"உன் பசப்பு வார்த்தை எல்லாம் மத்தவங்க நம்பலாம். நான் நம்ப மாட்டேன் நீ முதல்ல உண்டாகலைன்னு தண்ணி ஊத்தி விழ வச்சிருக்க" என்று கோபமாக பேசினார் ரஞ்சிதம்.

"த.. ஏதோ பொண்ணை பெத்தவளுக்கு ஆதங்கம் இருக்கும்னு சும்மா இருந்தா நீ என்னடான்னா அதிகமா பேசுற. இது உன் வீட்ல நடந்திருந்தா உன் மருமக பொறாமையில் செய்தாள்னு நீ சொல்வாயா. போகாத ஊர் எல்லாம் போயி கண்ணுறக்கம் இல்லாம காலிலெல்லாம் விழுந்து உன் மவளைக் காப்பாற்றினால் வசவு பேசுற இனிமே இப்படி பேசினா அவ்வளவுதான்" என்று கோபமாக கத்தினார் தனம்மா பாட்டி.

"ஏதோ மகளை பெற்றவங்க ஆதங்கத்தில் நாலு வார்த்தை பேசி விட்டேன். அதுக்குப் போயி இப்படி கோபிக்கறீங்க" என்று குழைந்தாள் ரஞ்சிதம்.

" அம்மா புரியாம பேசாத.. சங்கவி இல்லன்னா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். அவளை திட்டாத மா" என்று சங்கவிக்கு பரிந்து பேசினார் மல்லிகா.

 

சங்கவி எதையும் காதில் வாங்காமல் விருந்தாளிக்கு சமைப்பதற்காக கோழி அடித்து குழம்பு வைக்க சென்றாள்.

 

மணியை அழைத்துக்கொண்டு மச்சான்கள் வயக்காட்டு பக்கம் போனார்கள்.

"மாப்ள  எவ்வளவு நாளைக்குதான் வாய்க்கா வரப்புன்னு மல்லுகட்றது உங்களுக்குன்னு தொழில் வேணாமா?எப்ப தான் நீங்க கெத்தா கார்ல வந்து இறங்கறது. நாங்க கார் கதவை திறந்து விடுவது" என்று மணிக்கு புகழ் போதையை கோப்பையில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

"அட போங்க மச்சான் விவசாயத்திற்கு முதல் போட முடியாம மூச்சு முட்டுது. இதுல எங்க இருந்து தொழிலுக்கு முதல் போடறது" என்று ஆதங்கப்பட்டான் மணி.

 

ஒரு மனிதனுக்கு புகழை போல போதை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை. அதில் மிதக்கும் வரையில் அவன் வாழ்வு தப்பியது. மூழ்க ஆரம்பித்தால் அவனும் சேர்ந்து மூழ்கி விட வேண்டியதுதான். லேசாக துளிர்விட்டு இருந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் மல்லிகாவின் அண்ணன்கள். "மாப்பிள்ளை எங்க ஊர்ல டூரிங் டாக்கீஸ் லீசுக்கு வருது அதை எடுத்து நடத்துவோம். ஜம்முனு தியேட்டர் ஓனர் மாதிரி காரில் வந்து இறங்கி கல்லாப்பெட்டியில பணத்தை எண்ணிக்கிட்டு இரு. நாங்க உனக்கு உழைச்சி தர்ரோம் மாப்பிள்ளை" என்று ரீல் விட்டுக் கொண்டிருந்தனர் மல்லிகாவின் அண்ணன்கள்.

"அப்படியா சொல்றீங்க கேட்க நல்லாத்தான் இருக்கு பணத்துக்கு எங்கே போறதுன்னு" புலம்பினான் மணி.

"அது உங்க பாடு மாப்பிள்ளை. 2 நாளில் 10 ஆயிரம் ரூபாய் எடுத்துகிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க நாம லீசுக்கு வாங்கி முடிச்சிடலாம் " என்று மணியின்  நாக்கில் தேனை தடவினார்கள். "மல்லிகா இன்னும் எத்தனை நாளைக்கு தான் கூட்டுக்குடும்பத்தில் இருக்க போற? புள்ள பொறக்க போறான். உன் புருஷன் உழைச்சி எல்லாரும் அனுபவிக்கிறார்கள்" என்று நெருப்பில்லாமல் பத்த வைத்துக் கொண்டிருந்தார் ரஞ்சிதம்.

 

ஆண்களுக்கு புகழ் போதை என்றால் பெண்களுக்கு எது சுதந்திரம் என்பது தெரியாத போதை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் அடிமை தனியாக இருந்தால் சுதந்திரம் என்னும் தவறான எண்ணம் பெண்கள் மனதில் வேரூன்றி உள்ளது. தன் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் மருமகள் தனிக்குடித்தனம் போக கூடாது. மகள் மட்டும் தனிக்குடித்தனம் வந்துவிடவேண்டும். இந்த அம்மாக்களின் லாஜிக் என்னவென்று புரியவில்லை. ரஞ்சிதம் தன் மகளுக்கு அப்படித்தான் உரு ஏற்றி கொண்டிருந்தாள். பாவம் மல்லிகா சின்ன பெண் தானே வாழ்வில் நல்லது கெட்டது அறியாதவள். அம்மா சொல்லை வேதவாக்காக நினைத்துக் கொண்டு மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கு மச்சான்கள் வேப்பிலை அடித்தார்கள். மல்லிகாவிற்கு அவள் அம்மா பாடம் படித்தாள். 

"வெடக்கோழி விருந்தை விரலிடுக்கில் கூட விடாமல் வழித்து சாப்பிட்டுவிட்டு மணிக்கும் மல்லிகாவிற்கும் மூளைச்சலவை செய்து விட்டு கிளம்பினார்கள் மல்லிகாவின் குடும்பத்தினர். 

 

சினிமாவில் வில்லன்  பாம் வைப்பதுபோல வைத்து விட்டு சென்றுள்ளனர். எப்போது வெடிக்கும் என்று தான் தெரியவில்லை. மணி ரெண்டு நாளா மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே சுற்றிக் கொண்டிருந்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்வது என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருந்தது. ரமா அம்மாவை கேட்கலாம் என்று நினைத்தால் அவர்கள் நிச்சயம் வீட்டில் சொல்லி விடுவார் என பயந்து அந்த திட்டத்தை கைவிட்டான். பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த மணி ஒரு முடிவுக்கு வந்தவனாக வீட்டிலிருக்கும் அலமாரியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

(சிறகுகள் படபடக்கும்)

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #33

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

maayapura part 33

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

"என் வாழ்க்கைப் பயணத்தில் கடைசி ஸ்டேஷனை எதிர்பார்த்துப் பயணிக்கிறேன். எப்பொழுது வரும் என்று தான் தெரியவில்லை" என்று ரமா சொல்லி விட்டு  வாசலைத் தாண்டும்போது "த..நில்லு" என்று ஒரு குரல் அதட்டலாக வந்தது.

"என்ன தனம்மா" என்று சொல்லிக்கொண்டே அவரைப் பார்த்தார் ரமா,

"எனக்கு மருவாதையா பேசத் தெரியாது மனசில் இருக்குறதை பட்டு பட்டுன்னு கேட்டு விடுவேன். ஆனால் பாசக்காரி பிடிச்சிருந்தா பாசம் காட்டுவேன். வேஷம் போடத் தெரியாது. ரமா எங்க அன்புள்ள என்ன குறையைக் கண்ட இப்படிக் கிளம்பி போற" என்று உரிமையாகக் கேட்டாள் தனம்மா. "என்னால எந்த பயனும் இல்லை நான் அடுத்தவங்களுக்கு ஏன் பாரமா இருக்கணும். அதான் கிளம்பி போறேன்னு" சோகமாகச் சொன்னார் ரமா.

"பொம்பளை சுமக்கிற கருவை பாரமா நினைத்திருந்தால் இந்த உலகம் உருவாகி இருக்குமா? நம்ம கூட வாழ உறவை பாரமா நினைச்சா உறவுகள் எல்லாம் சுமக்க முடியாத சுமையாகத்  தான் இருக்கும். நல்லதோ கெட்டதோ அது தான் நான் வாங்கி வந்த வரம் என்று நினைத்துப் பார்த்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும் இவ்வளவு பேரைச் சுமக்கிற இந்த ஆல மரக் கிளைக்கு ஒரு கிளியைச் சுமப்பதா பாரம்" என்று தத்துவமாகப் பேசினார் தனம்மா. குடும்பத்தினர் அனைவரும் வாயடைத்து நின்றனர். தனம்மா பாட்டிக்கு அன்பாகவும் பேசத் தெரியுமா? என்று மல்லிகாவும் சங்கவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"இல்ல தனம்மா  நீங்க என்னதான் சொன்னாலும் அது சரிவராது. புது கிராமம் பழக்கமில்லாத மக்கள். என் கடைசிக் காலம் வரை இங்கேயே என்பது எனக்குத் தயக்கமாக இருக்கு" என்று சொன்னார் ரமா. "வெள்ளைக்காரன் அடி எடுத்து வைக்கும் போது இப்படி நினைக்கலையே மொழி தெரியாத வேற நாட்டுக்காரன் பல வருஷமா நம்பள அதிகாரம் பண்ணி வந்திருக்கான். அன்பால நம்மாள ஒன்றா வாழ முடியாதா?" என்று தனம்மா உதாரணம் எல்லாம் சொல்லிப் பேசியதைக் கேட்டதும் அனைவரும் எலி ஹெலிகாப்டர் ஓட்டுவதைப் பார்ப்பது போல அதிசயத்து நின்றனர். தனம்மாவின் வேறு பரிமாணங்கள் மின்ன ஆரம்பித்தது. அனைவர் மனதிலும் எண்ணக் குவியல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதைக் கொத்திக் கிளற மனித கோழிகளுக்குத் தான் வாய்ப்பு இல்லை.

"எங்கம்மா சொல்வதிலும் நியாயம் இருக்கு. அடம்பிடிக்காம எங்களுடனே தங்கிடுங்க என்று தங்கமும் சொன்னாள்.

"சரி பக்கத்தில் எதற்கு இந்த குடிசையைக்  கட்ட சொன்னே என்று தனம்மா சரியான பாயிண்டை பிடித்தார்கள்.

"என் காலத்துக்குப் பிறகு நான் படித்த புத்தகங்களை எல்லாம் சின்னதா நூலகம் மாதிரி வைக்கலாம்னு சொன்னேன். அசோக் தான் நான் இப்பவே கட்றேன். நீங்க பார்த்து மனம் மகிழ்ச்சியாய் இருங்கள். இங்கு உங்கள் கண்கள் தேடிய உலகம் மக்களின் விடியலாய் இருக்கும் என்ற நினைவோடு இருப்பீங்கன்னு சொல்லிட்டு கட்டினான்" என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் ரமா.  

"அம்மா உயிரற்ற எழுத்துகளுக்கு உணர்வுகளால் உயிர் கொடுப்பதைவிட, உயிரான அறிவு எங்களுக்கு வழிகாட்டுவது எவ்வளவு சிறப்பாக இருக்கும். நீங்கள் இந்த குடிலிலேயே தங்குங்கம்மா" என்று சற்று கெஞ்சலுடன் சொன்னாள் சங்கவி. 

"நீங்க சுதந்திரமா அந்த குடிசையிலே இருங்க. உங்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம்" என்று மணியும் அவன் பங்குக்கு வாய்திறந்து சொன்னான்.

 

அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் அன்பானவர்கள் தான் பல உணர்வுகளின் கலவை சேரும்போது அன்பு வெளிப்படையாகக் கண்ணில் தெரிவதில்லை. பிறர் காட்டும் அன்பு சில நேரங்களில் நம்மை நாமாக வாழ விடுவதில்லை. பிறரின் முடிவுகளுக்கு நம்மை வாழவைக்கிறது. அதுபோலத்தான் ரமாவும் அந்த குடிசையில் தங்குவது என்று முடிவு செய்தாள்.

"நான் அன்புக்காக ஏங்குகிறவள். உங்க அன்பும் எனக்கு தேவைப்படுகிறது. நான் உங்களுடனேயே தங்கிக் கொள்கிறேன்" என்று ரமா முகத்தில் பொலிவுடன் சொன்னார்.

 

ரமாவின் வாழ்க்கை பயணம் வேறு ஒரு உலகில் தொடங்கியது போலப் புதிதாக மகிழ்வுடன் தொடங்கியது. கும்மட்டி அடுப்பு என்று சொல்லக்கூடிய அடுப்பில் அவளுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டாள். என்ன பெரிய உணவு வெண்கல குண்டில் சிறிது சாப்பாட்டைப் பொங்க வைத்து உண்பாள். ரமாவின் ஆகச்சிறந்த உணவே இதுதான். ஊருக்குத் தகவல் சொல்லி ரமாவின் வக்கீல் வந்தார். அவர் வரும்போது சூட்கேஸ் நிறைய ரமா வாசித்த புத்தகங்களை எடுத்து வந்திருந்தார். அதில் தி.ஜா, ஜெயகாந்தன், அம்பை, கி.ரா.,கண்ணதாசன், பாரதிதாசன், பெரியார், மார்க்ஸ், லெனின் இப்படிப் பல எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பார்க்கும்போது மெலிதாக புன்னகைத்தார்.

"ஏன் சிரிக்கிறீங்க? என்று வக்கீல் புரியாமல் கேட்டார். "இவ்வளவு நாட்கள் இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் உடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த கிராமத்திற்கு வந்த பிறகு இவர்களோடு வாழ்வது போன்ற உணர்வு இருக்குங்க சார்" என்று தன் அனுபவத்தைச் சொன்னார். நான் சொன்னது போல உயில் ரெடி பண்ணி விடுங்க அதை ரிஜிஸ்டர் பண்ணி என்னிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொன்னார் ரமா.சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினார் வக்கீல்.

 

ரமாவின் குடிலுக்கு எதிரே மிகப்பெரிய இடம் இருந்தது. அதன் பிறகு ஓணான் கொடியால் வேலி போடப்பட்டது. மாலை நேரங்களில்  ஈசி சேர் போட்டு அங்கே அமர்ந்திருப்பார் வயல் வேலைகளை முடித்துவிட்டுப் போகும் பெண்கள் ஆரம்பத்தில் ரமாவை ஏதோ சந்திரமண்டலத்திலிருந்து வந்த பெண் போல அதிசயமாகப் பார்த்தனர்.

 

ரமாவே அவர்களை அழைத்துப் பேசுவார். பிறகு பெண்கள் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அவர்களின் குடும்ப கஷ்டங்களை எல்லாம் ரமாவிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். ரமாவும் அவர்களுக்கு எழுத்து கற்பித்து தன்னம்பிக்கை எண்ணங்களைத் தூண்டினார். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயம் என்ற ஒன்று ரொம்ப முக்கியம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுடர் விளக்கைத் தூண்டும் போது அந்த தூண்டு குச்சி மீதும் விரல் மீதும் அனல் படத்தான் செய்யும் தூண்டுகோல் அதைப் பொறுத்துக் கொண்டால் தான் விளக்கு பிரகாசமாக எரியும். அது போலப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் போது பாதிக்கப்பட்ட ஆண்கள் ரமாவிடம் சண்டைக்கு வந்தார்கள். அப்போதெல்லாம் அசோக் தான் அரணாக இருந்து ரமாவைப் பாதுகாத்தான். தங்கள் பெயரை எழுத  கற்றுக் கொண்ட பெண்கள் வேலி நாச்சியார் மாதிரி இடுப்பில் அரிவாளைச் சொருகிக் கொண்டு களையெடுப்பதற்குக் கம்பீரமாக நடந்தார்கள். அவர்கள் வீட்டு அடுக்களை சுவரெல்லாம் கரியால் இவர்கள் பெயர்கள் ஓவியமாக வரையப்பட்டது. பொருளாதார உதவி தேவைப்படும் பெண்களுக்கு இடது கைக்குத் தெரியாமல் உதவி செய்தார் ரமா. தனம்மா பாட்டியின் பாக்கு உரலும் சுண்ணாம்பால் பெயர் பொறிக்கப்பட்டு தனம்மாவின் கல்வெட்டானது.

 

பெண்களிடம் பேசப் பேச இப்படி ஒரு அறிவு உலகம் இருக்கா என்று வியந்தனர். உங்கள் உழைப்பு உங்களுக்கான தேவைகளுக்கு எல்லாம் பிறரிடம் கையேந்தக் கூடாது. கொஞ்சம் சேமிப்பு உங்களிடம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். ரமாவிற்கு அந்த கிராமம் மிகவும் பிடித்துவிட்டது. கிராம மக்கள் ரமாவிடம் மிகவும் அன்பாக இருந்தனர். 

 

காலநதி எந்த சலனமும் இல்லாமல் சென்றால் எப்படி? நதியில் ஒரு முதலை அடித்து வந்தது.

 

( சிறகுகள் படபடக்கும்)