
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த மே 7ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்றது. இதில், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் அபாயம் இருந்த நிலையில், அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிட்டது. அதன்படி, இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது. தற்போது, அமைதி நிலவி வருகிறது.
இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை கெளரவிக்கும் விதமாக, இந்தியர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களையும், மரியாதையையும் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மிக உயரமான சிகரத்தில் இந்தியக் கொடியை ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது மலையேறும் வீரர் ஒருவர் சிகரத்திலேயே சிக்கியுள்ளார். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மலையேறும் வீரரும், அரசு செயலக ஊழியருமான ஷேக் ஹசன் கான் என்பவர், திறமையாக மலையேறக் கூடியவர். இவர், உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமான ஏறி சாதனைப் படைத்துள்ளார்.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூரை நடத்திய இந்திய ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக வட அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள மிக உயரமான தெனாலி மலையில் இந்தியக் கொடியை ஏற்றும் பணியில் ஷேக் ஹசன் கான் ஈடுபட தொடங்கினார். அதன்படி அந்த மலையில் ஏறிய ஷேக் ஹசன் கான், கடுமையான பனிப்புயல் காரணமாக அவர் அந்த மலையிலேயே சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கடந்த ஜூன் 10ஆம் தேதி உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துளார். அதன் பிறகு அவரிடம் இருந்து எந்தவித செய்தியும் வரவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த 10ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவில், ஷேக் ஹசன் கான் தெனாலி மலைக்குச் செல்லும் வழியில் தனது கடைசி நிறுத்தத்தைப் பற்றி பேசியுள்ளார்.
திறமையாக மலையேறும் ஷேக் ஹசன் கான், தெனாலி மலையில் ஏற்பட்ட திடீர் வானிலை மாற்றத்தால் சிக்கிய அவரை மீட்கும் பணியில் கேரளா மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இது குறித்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘மலையில் சிக்கியுள்ள ஷேக் ஹசன் கானை மீட்கும் விஷயத்தில் உடனடியாக தலையிட வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்ல அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தேவையான வழிமுறைகளை வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.