
திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா வயது(52) உயிரிழந்தார். மதுரையைச் சேர்ந்த இவர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த போது விபத்தில் சிக்கியுள்ளது.
திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து சாலையின் நடுப்பகுதியைத் தாண்டி வந்ததால் எதிரே வந்த ஆர்.டி.ஓ வாகனத்தின் பக்கவாட்டில் மோதியுள்ளது. இதனால் நிலைதடுமாறிய வாகனம் சாலையோரம் நின்ற ஜே.சி.பி மீது மோதியதில், ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகன ஓட்டுநர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஜீயபுரம் போலீசார் வருவாய் கோட்டாட்சியரின் உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.