Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #03

Published on 25/01/2022 | Edited on 27/01/2022

 

 

maayapuraa series part-3

 

 

நிலாவில் வீடு கட்டி, விண்மீன்கள் பொறுக்கிவந்து, மின்னலில் தோரணம் கட்டி, மேகத்தினை மெத்தை ஆக்கிக் கனவு காணுகின்ற வயது சங்கவிக்கு. ஆம்! 16-ல் இருக்கும் இளைய வசந்தம் அவள். ஆனாலும் அக்காலம் அவளைப் போன்ற கிராமத்துக் கவிதைகளை அப்பாவியாகவே வைத்திருந்தது. சைக்கிள் வைத்திருப்பவர்களையே பணக்காரர்கள் என்று நினைக்கிற காலகட்டம் அது. இட்லி, தோசை, அரிசி சாப்பாடு சாப்பிட்டாலே வசதி படைத்தவர்கள் என்று நினைக்கும் கிராமத்து வாழ்க்கை. இட்லி தோசையே அந்நாளில் பலகாரம் என்று பலராலும் அழைக்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் காலை உணவாக இட்லி சாப்பிடும் நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கிருத்திகை ,அமாவாசை, தீபாவளி உள்ளிட்ட விசேச நாட்களிலும், வீட்டிற்கு உறவினர் வரும் நாட்களிலும் தான் இவை கிடைக்கும்.

 

‘சகலகலா வல்லவன்’ படத்தில் "இளமை.. இதோ.. இதோ... ” என்று கமல் போன்ற ஹீரோக்கள் புல்லட்டில் ஸ்டைலாக பறந்து வரும் போதெல்லாம், சிவப்பாக இருப்பவர்கள் தான் புல்லட் ஓட்ட வேண்டும். அவர்கள்தான் புல்லட் வைத்திருப்பார்கள் என்று அப்பாவியாக நினைத்த அறியாத வயது சங்கவிக்கு. அத்தை வீட்டில் இப்படி ஒரு புல்லட்டை பார்த்ததும்,  ஜூவில் சிங்கத்தைப் பார்த்ததுபோல, அப்படியே அசந்து நின்றுவிட்டாள். அந்த புல்லட்டில் அசோக் மாமாவை பார்த்ததும் சிவப்பாக இருப்பவர்கள் தான் புல்லட் ஓட்ட வேண்டும் என்ற அவளுடைய தீர்மானம் முதலில் உடைந்தது. அசோக் மாநிறத்தில் இருப்பவன். என்றாலும் வாட்ட சாட்டன். அவனிடம் ஒருவித கம்பீரம் அலட்சியமாய் அமர்ந்திருந்தது.

 

மகனிடம் சொல்லிக்கொண்டே வெளியே வந்த தங்கம், வாசலில் மூட்டை முடிச்சுடன் நின்றுகொண்டிருந்த அலமேலுவையும் சங்கவியியும் பார்த்துவிட்டாள். ‘சொன்னாப் போதும்னு வந்துட்டாளுங்க கொட்டிகறத்துக்கு’ என்று மனதில் நினைத்துக்கொண்டவள், புருசன்காரனை ஒரு கணம் எண்ணிப் பார்த்துவிட்டு, செயற்கை உற்சாகத்தோடு, வாயெல்லாம் பல்லாக "வாங்க மச்சி... வாம்மா சங்கவி" என்று வரவேற்றாள் தங்கம். அம்மா யாரிடம் பேசுகிறாள் என்று திரும்பிப் பார்த்த அசோக்கின் கண்களுக்கு அலமேலு அத்தை மங்கலாகத்தான் தெரிந்தாள். அவன் விழிகளுக்கு தலை நிறைய மஞ்சள் கனகாம்பரம் பூ, சைடில் ஸ்பீக்கர் புனல் கட்டியது போல செம்பருத்திப்பூ, கழுத்தில் வெள்ளை மணி என, 16 வயதினிலே மயிலு மாதிரியே நின்றிருந்த சங்கவிதான் பளிச்சென்று தெரிந்தாள். மனசுக்குள் இனம்புரியாத ஒரு புயல் குபீரென வீசியது. ஆண்களின் அடிப்படை குணத்தில் ஒன்று, வெளி மனிதர்கள் மத்தியில் வீட்டில் இருக்கும் பெண்களை அதிகாரம் பண்ணுவதில் அவர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம் பிறக்கும். அத்தையை கவனித்து விட்டவன்... “அடடே வாங்க அத்தே...” என்று அலமேலுவை அழைத்துவிட்டு, சங்கவியை கவனிக்காதது போல, "அம்மா மதியம் 15 ஆளுக்கு கஞ்சி காய்ச்சிடு. ஒரு மணி சங்கு பிடிக்கும்போது காராமணியை அனுப்பறேன். களத்தில் உளுந்து ஒப்பிடி பண்ணனும்" என்றபடி ஸ்டைலாக புல்லட்டை உதைத்து, ஒரு யூ டர்ன் போட்டான். வண்டி, சங்கவி மீது மோதுவது போல பயமுறுத்திவிட்டுச் சென்றது. அவன் சென்ற பிறகு அவன் விட்ட புல்லட் புகை, சங்கவி முகத்தருகே கருமேகமாகக் குவிய, அதற்கு நடுவே நிலவாக ஒளிர்ந்தது அவளின் கிராமத்து முகம். அசோக்கின் நினைவில் சங்கவியின் அகலக் கண்களும், அதில் இருந்த ஒருவித படபடப்பும், அவள் உதட்டில் இருந்த வெள்ளந்திப் புன்னகையும், ஒரு நிமிடம் அவன் கண்முன்னே  வந்து சென்றது.

 

அலமேலுவும் சங்கவியும் தக்கத்தைப் பின் தொடர்ந்து வீட்டுக்குள் காலெடுத்து வைத்தனர். செல்வத்தின் வீடு பெருமாளின் வீட்டை விட மிகப் பெரியது நடுவில் பெரிய முற்றம். 50 மூட்டை நெல்லைக் காய வைக்கலாம் அந்த அளவுக்குப்  பெரியது. வெளித் திண்ணையைத்  தாண்டி உள்ளே கூடத்தில் நுழையும் போது ‘டொக்...டொக்.’ என்று வெற்றிலையை இடிக்கும் ஓசை கேட்டது. கூடத்தில் மாநிறத்துக்கும் கூடுதலான நிறத்தில், ரவிக்கை இல்லாமல் சிவப்பு நிற நூல் புடவை கட்டி, காதில் சிவப்புக்கல் கொப்பு கம்மல் அணிந்தபடி, கழுத்தில் பவள மாலை ஊஞ்சலாட, ஒரு உருவம் வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தது.  இவர்களின் வரவறிந்து... "யாரடி... அவளுங்க. வில்லு வண்டியில ஏற்றி விட்ட சீர் செனத்திய சுமக்க முடியாம சுமந்து வர, சீமைச் சிறுக்கிக" என்று அலமேலுவை புகழ்வது மாதிரி கிண்டலாகப் பேசினார் தங்கத்தின் அம்மா தனம்மா. தனம்மாவின்  இழுவை ஓசையும், "டொக்..டொக்" ஓசையும்  தாளம் தப்பாமல் லயம் சேர்ந்தது போல் இருந்தது.

 

கூடத்தின் ஒரு பக்க மூலையில் கல் இயந்திரத்தில் அரிசி உடைத்து கொண்டிருந்தனர் நான்கு பெண்கள். அலமேலுவைப் பார்த்ததும் "வா... தாயீ, இப்பதான் நேரம் கிடச்சுதா?" என்று கேட்டவர்களுக்கு புன்னகையை பதிலாக்கி விட்டு "அண்ணி... மதியம் சோறு பொங்கியாச்சா... நான் பொங்கறேன்" என்று சொல்லிக்கொண்டே தங்கத்தின் பதிலை எதிர்பார்க்காமல் அடுக்களைக்குள் சென்றாள் அலமேலு. "சங்கவி, கொல்லைப் பக்கம் அடுப்பை பத்த வச்சு, கிணத்தடியில் இருக்கிற ஈயம் பூசிய  பித்தளை அண்டாவில் தண்ணிய புடிச்சு அடுப்பில வைம்மா. ஆளுகளுக்கு கஞ்சு காய்ச்சனும். காராமணி பய  எடுக்கவந்துடுவான்." என்று சொல்லிவிட்டு அலமேலுவை அதிகாரம் பண்ண அடுக்களைக்குள் வந்தாள் தங்கம்.

 

சவுக்கைக் கட்டைகளை வைத்து அடுப்பை மூட்டி, உலை வைத்திருந்தாள் அலமேலு. தங்கத்தை பார்த்ததும் "அண்ணி... அரிசி எவ்வளவு போடணும்னு சொல்லுங்க" என்றாள். "ரெண்டு பெரிய படி போட்டு வடிச்சிடு. கல்யாணம் வரைக்கும் ஆளுங்களுக்கும் இங்கிருந்துதான் சாப்பாடு" என்று சொல்லிவிட்டு "மொதல்ல எங்க அம்மாவுக்கு காபி போட்டு கொடுத்துடு அலமேலு. நல்லா கொழகொழன்னு பில்டர் காபியா இருந்தாதான் அம்மா குடிக்கும்” என்று சொன்னாள் தங்கம். அலமேலுவை பேச்சுக்கு கூட காபி குடிக்கிறாயா? என்று கேட்கவே இல்லை. அடுப்பில் கஞ்சிக்கு  உலை வைத்துவிட்டு, அது கொதிக்கும் நேரத்தில், கொல்லைப் புறத்தில் இருந்த பசு மாடுகளுக்கு சோளத் தட்டுகளை உதறிப் போட்டாள் சங்கவி. அந்த நேரம் பார்த்து கோணிப்பை எடுப்பதற்காக வீட்டிற்குத் திரும்பி வந்த அசோக், வீட்டின் பின்புறம் இருந்த தொம்பைக் கிடங்கு அறையில் கோணியை உதறி போட்டான். அப்போது  சங்கவி, பாவாடையைத் தூக்கிச் சொருகிக்கொண்டு சோளத்தட்டு உதறும் காட்சி அவன் கண்ணில் பட்டது. அவன் கண்கள் ஏனோ சில நொடிகள் இமைக்க மறந்தன. சட்டென்று சுதாரித்துக் கொண்டு கோணிப்பையை உதறி போட ஆரம்பித்தான்.

 

கொதிக்கும் உலையில் கஞ்சிக்கு நொய்யைப் போட்டு நெருப்பை எரியவிட்ட சங்கவியின் மூக்கை துளைத்தது, அம்மா போட்ட காபியின் வாசம். வேகமாக உள் வாசலுக்கு வந்து "அம்மா எனக்கும் ஒரு லோட்டா காப்பி கொடு மா" என்றாள்.

 

"வந்த இடத்தில் நாக்கை அடக்கிக்கிக்கிட்டுகொண்டு சும்மாயிரு" என்று அதட்டினாள் அலமேலு.

 

"நம்ம அத்தை வீடுதானே மா" என்றாள் அப்பாவியாக.

 

"அதான் சொல்றேன். இது அத்தை வீடு தான், அம்மா வீடு இல்லை, இங்கே அவங்க சொல்லாம நீயா எதையும் எடுத்துச் சாப்பிடக் கூடாது" என்று அறிவுரை சொன்னாள் அலமேலு.

 

முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு அடுப்புப் பக்கம் போனாள் சங்கவி. இதை குடோனில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த அசோக், "அத்தை, காபி வாசனை வீட்டைத் தூக்குது. எனக்கும்  உங்க கமகம காப்பியைக் கொடுங்க"என்றான்.

 

"இதோ... வரேன்" என்று அவசரமாக காபி போட்டு சூடாக எடுத்துக்கொண்டு சென்று, கூடத்தில் நின்று  கொண்டிருந்த அசோக்கிடம் கொடுத்தாள் அலமேலு.

 

காபியை வாங்கிய அசோக் "பயங்கரமாக சுடுது.. இது எப்ப ஆர்றது?  நான் எப்ப குடிக்கிறது?" என்று சொல்லிக் கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தான். தனம் பாட்டியும் லோட்டா நிறைய காபியுடன் உட்கார்ந்திருந்தார். தங்கம் வாயில் வெற்றிலை பாக்கு போட்டிருந்தார். "த...புள்ள, அத்தை மவளே இங்க வா" என்று சங்கவியை அழைத்தான் அசோக். பயந்துகொண்டே கூடத்திற்கு வந்த சங்கவி, ‘பாம்பு வாயில் சிக்கிய தவளையின் குரல் போல’ மெல்லியதாக "என் பேர் புள்ள இல்ல சங்கவி" என்றாள்.

 

"அடேங்கப்பா, உனக்குப் பேசக்கூடத் தெரியுதே... சரி.. சரி இதைக் வச்சுக்கோ. இந்த காபியைக் குடிக்காம வீணாக்கினால் அம்மா திட்டுவாங்க. நீயே குடிச்சிடு" என்று அவளிடம் நீட்டினான் அசோக். பிறர் கையில் இருக்கும் உணவுப் பொருளைத் தட்டி விடும் அளவுக்கு அம்மா ஒன்றும் கொடுமைக்காரி இல்லைன்னு அசோக்குக்கு தெரியும். அமைதியாக நின்ற சங்கவி யை பார்த்து "வாங்கிக்கோ" என்று தங்கம் சொன்னாள். அலமேலுவும் கண்ணாலேயே ’வாங்கிக்கோ’ என்றாள். காபியை வாங்கிக் கொண்டாள் சங்கவி. கோணிப் பைகளை எடுத்துக்கொண்டு அவசரமாக வெளியேறினான் அசோக். அடுக்களையில் மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்தாள் அலமேலு.

 

வாசலில் "ஜல்.. ஜல்" என்று சலங்கை சத்தத்துடன் ஒரு வில்லு வண்டி வந்து நின்றது. அதிலிருந்து பூசணிக்காய்க்கு கை கால் முளைத்தது போல ஒரு பெண்மணியின் உருவம் குதித்தது. பட்டுச் சேலை கட்டி, இரண்டு கைகளிலும் தங்க வளையல்கள். அந்த வளையல்கள் சதைகளில் புதைந்து கொண்டு, காப்பு மாதிரி இருந்தது.  தலைக்கு கீழே கழுத்து என்ற உறுப்பைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. அதிலும் டாலர் செயின் ,நெக்லஸ், காசு மாலை என்று என்று அனைத்தையும் போட்டு அழுத்தி வைத்திருந்தார்கள். அவள்தான்  தங்கத்தின் அணணன் மகள் புவனா. அந்தப் பொண்ணு இறங்கி நடந்து வரும்போது இரண்டரை அடி பித்தளை அண்டாவை  உருட்டி விட்டது போலவே இருந்தது. புவனாவிற்கு பின்னால் புவனாவிற்கு 15 வயது அதிகமானால் எப்படி இருப்பாரோ அதே தோற்றத்தில் ஒரு பெண்மணி இறங்கி வந்தார் அவர் தங்கத்தின் அண்ணி நாகம்மா.

 

"டேய் .. இருளாண்டி  வண்டியில இருந்து பழம், பட்சணமெல்லாம் வச்சிருக்கற அண்டாவை உள்ளே எடுத்துட்டு வாடா" என்று கம்பீரமாக அதட்டிவிட்டு மீசையை முறுக்கியபடி வண்டியில் இருந்து இறங்கிய படியே குரல் கொடுத்த அந்த மனிதர், பட்டு வேட்டி சட்டை போட்ட ஐயனார் மாதிரி இருந்தார். அவர்தான் கண்ணுசாமி. தங்கத்தின் அண்ணன். இவர்களைப் பார்த்ததும் வாசல் வரைக்கும் வந்து, "வாங்க அண்ணே, வாங்க மதனி, வாம்மா புவனா”  என்று மனம் மகிழ அழைத்துச்சென்றாள் தங்கம்.

 

அலமேலுவும் வாசலுக்கு வந்து அனைவரையும் வரவேற்றாள். தனம்மா எழுந்து வந்து புவனாவின் கன்னத்தை இரண்டு கைகளாலும் தடவி முத்தம் கொடுத்து திருஷ்டி கழித்தார். "பன்னீரில் குளித்து, பாலாற்று தண்ணிய குடிச்சு, வெண்ணெய்யிலும், நெய்யிலும் கைகழுவி, பாதாமும், முந்திரியும்  சாப்பிட்டு வளர்ந்த இண்டு, இடுக்கு, நாடு நகரம் எட்டு ஜில்லா சீமையிலும் இல்லாத பேரழகி என் பேத்தி" என்று சொல்லி பூரித்தார் தனம்மா. "எங்கம்மா உன் வீட்டுக்காரரை காணோம்" என்று கணீர் குரலில் கேட்டார் கண்ணுசாமி. "நாளைக்கு பந்தக்கால் வச்சு நலங்கு வைக்கிறது, அதான் டவுனுக்கு பொருளுங்க வாங்கியாரப் போயிருக்காரு அண்ணா" என்றாள் தங்கம்.

 

"கல்யாண மாப்பிள்ளை  மணியும், அப்பா  கூட போயிருக்காரா? என்று  மீண்டும் சந்தேகத்தைக் கேட்டார் கண்ணுசாமி. "அண்ணா... மணி அவன் கூட்டாளிங்களுக்கு பத்திரிக்கை  வைக்கப்  போயிருக்கான்" என்று விளக்கினாள் தங்கம்.

 

"எங்க என் புல்லட் மாப்பிள்ளையையும் காணோம்"? என்று நாகம்மா  கேட்டாள்.

 

 "அசோக்... காடு கழனியே கதின்னு இருக்கான்" என்று அங்கலாய்த்தார் தங்கம்.

 

"அசோக் மாமா, பியூசி படிச்சிட்டு ஏன் இப்படி பண்ணை பார்க்கறாரு" என்று புவனா சலிப்புடன் சொன்னாள்.

 

"விடுமா, நாளைக்கு வீட்டோட மாப்பிள்ளையா நம்ம ரைஸ் மில்லில் உட்கார்ந்தார்னா எல்லாம் சரியாயிடும்" என்று மகளுக்கு ஆறுதல் சொன்னார் கண்ணுசாமி.

 

"சாப்பாடு தயாரா இருக்கு எல்லாரும் சாப்பிட வாங்க" என்று அழைத்தாள் அலமேலு. "என்னம்மா அலமேலு ஏதாவது வெள்ளாமை இருக்கா? மூணு வேளை கஞ்சி குடிக்க முடியுதா? பெருமாளு எப்படி இருக்கான்?" -என்று எகத்தாளமாகவும் தோரணையாகவும் கேட்டார் கண்ணுசாமி. "எல்லாம் நல்லபடியா இருக்காங்க அண்ணா" என்று அமைதியாகச் சொன்னாள் அலமேலு. கொல்லைப்புறம் வந்த புவனா அங்கு மாட்டுக்குத் தவிடு புண்ணாக்கு போட்டு தண்ணீர் காட்டிக்கொண்டிருந்த  சங்கவியைப்  பார்த்து,"இதாரு வேலக்காரியா? என்ன உலகத்துல இல்லாத அதிசயமா இருக்கு. இங்க வீட்டு வேலைக்காரி என்னவோ சீவி முடிச்சு சிங்காரிச்சு கிட்டு இருக்குறாளே.” என்று கத்தி எட்டு ஊருக்கு கேட்கிற மாதிரி சொன்னாள். சங்கவியோ ஒரே நொடியில் தன் அத்தனைத் துள்ளளையும் பறிகொடுத்துவிட்டு கூனிக் குறுகிப்போய் சட்டென நின்றாள்.

 

அப்போது...

 

(சிறகுகள் அசையும் )
 

முந்தையப் பகுதி : சாம்பவி சங்கர் எழுதும் ‘மாயப் புறா’ - ஓர் அன்பின் தொடர்கதை! #02

 

 

Next Story

கொலையுண்ட மகனை உயிர்ப்பித்த சிவன்; ‘குஷ்மேஷ்வர் ஜோதி லிங்கம்’ சிவாலயத்தின் கதை

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

ghushmeshwar jyotirlinga  temple story

 

குஸ்மேஷ்வர் நாத் மந்திர் என்பதொரு சிவாலயம். இந்த ஆலயம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பஹேலா என்னுமிடத்தில் பிரதாப்காட் மாவட்டத்தில் இருக்கிறது. ‌வேத காலத்தில் கூறப்படும் "ஸை' என்னும் நதியின் கரையில் ஆலயம் உள்ளது. குட்ஸார்நாத் மந்திர் என்ற பெயரிலும் இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. சிவபுராணத்தில் இந்த கோவிலைப் பற்றிய கதை உள்ளது.

 

பரத்வாஜ வம்சத்தைச் சேர்ந்தவர் சுதர்மா. ஆற்றின் கரையில் இவரது வீடு இருந்தது. இவர் சிவபக்தர். எப்போதும் சிவனை வழிபட்டுக் கொண்டேயிருப்பார். இவருடைய மனைவியின் பெயர் சுதேஹா. வீட்டு வேலைகள் அனைத்தையும் பார்க்கும் அவள் தன் கணவருக்கு சேவை செய்வதிலும் மிகுந்த அக்கறையுடன் இருந்தாள்.

 

சுதர்மா அனைவரையும் மதிப்பார். தன் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை நன்கு உபசரிப்பார். தினமும் "அக்னிஹோத்ரம்' என்னும் சடங்கைச் செய்வார். மூன்று நேரங்களிலும் பூஜையில் ஈடுபடுவார். சூரியனைப் போல் அனைவரையும் அவர் ஈர்ப்பார். வேதத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களைப் பின்பற்றி நடப்பார். அவர் தன் சீடர்களுக்கு வேதத்தைக் கற்றுத்தந்தார். வசதி படைத்தவராகவும் தர்மப்பிரபுவாகவும் இருந்த அவர் நல்ல மனம் கொண்டவராகவும் இருந்தார்.

 

எனினும் அவருக்கு வாரிசில்லை.அதற்காக அவர் கவலைப்படவில்லை. ஆனால் அவரது மனைவி கவலைப்பட்டாள். தனியாக அமர்ந்து கண்ணீர்விட்டு அழுதாள். குழந்தையில்லாத அவர்களை கேலியும் கிண்டலுமாக பலரும் பார்த்தார்கள். அதைத் தொடர்ந்து தன் தங்கையை இரண்டாவது மனைவியாக கணவருக்கு திருமணம் செய்துவைக்க அவள் தீர்மானித்தாள். ஆனால், அதற்கு ஒப்புக்கொள்ள சுதர்மா மறுத்தார். அவள் இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருக்க, இறுதியில் அவர் சம்மதித்தார். அக்காவின் விருப்பத்திற்கு தங்கையும் ஒப்புக்கொண்டாள்.

 

அவளது தங்கைக்கும் கணவருக்கும் திருமணம் நடந்தது. அவர்கள் மூவரும் தினமும் 100 சிவலிங்கங்களை களிமண்ணில் செய்து, அவற்றை அருகிலிருக்கும் குளத்தில் கொண்டுபோய் போடுவார்கள். இதையொரு சடங்காகவே அவர்கள் செய்து வந்தார்கள். தங்கை குஸ்மாவுக்கு சிவபெருமானின் அருளால் ஆண் குழந்தை பிறந்தது. ஆரம்பத்தில் அதற்காக சந்தோஷப்பட்ட அக்கா சுதேஹா காலப்போக்கில் தன் தங்கையின் மீது பொறாமை கொண்டாள்.

 

சிறுவன் வளர்ந்து வாலிபப்பருவம் எய்தினான். அவனுக்கு திருமணம் நடந்தது. மணப்பெண் வீட்டிற்கு வந்ததும் அவளைப் பார்த்து சுதேஹா எரிச்சலடைந்தாள். ஒருநாள் யாருமில்லாத நேரத்தில் தன் தங்கையின் மகனை சுதேஹா பல துண்டுகளாக வெட்டி, ஆற்றில் கொண்டுபோய் போட்டாள்.  இப்படிப்பட்ட கொடூரச் செயலைச் செய்து விட்டு எதுவுமே தெரியாததைப் போல அவள் இருந்தாள்.

 

புதிதாக வந்த மணப்பெண் மறுநாள் கண்விழிக்கும்போது தன் கணவன் இல்லாததைப் பார்த்து கண்ணீர்விட்டுக் கதறினாள். வீட்டில் சில இடங்களில் குருதிக்கறை இருப்பதை அவள் பார்த்தாள். எனினும் அதற்குப் பின்னணியில் நடந்திருக்கும் சதியை அவளால் தெரிந்துகொள்ள முடியவில்லை. இவ்வளவு நடந்த பிறகும் எதுவுமே நடக்காததைப் போல தினமும் சிவனுக்கு பூஜை செய்துகொண்டே இருந்தார் சுதர்மா. பூஜையில் கணவருக்கு உதவியாக இருந்தாள் குஸ்மா.

 

தன் மகன் படுத்திருந்த கட்டிலையே கவலையுடன் சுதர்மா பார்த்தார். தனக்கு குழந்தையை அளித்த சிவபெருமான் நிச்சயம் தனக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். தான் எப்போதும் செய்யக்கூடிய 100 மண் சிவலிங்கங்களை நீரில் போடுவதற்காக அவர் சென்றார்.

 

அப்போது அங்கு கரையில் தன் மகன் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அதைப் பார்த்து அவர் சந்தோஷப்படவும் இல்லை; கவலைப்படவும் இல்லை. அனைத்துமே சிவனின் திருவிளையாடல்கள் என்று எண்ணிக்கொண்டார். அவருடன் குஸ்மாவும் அப்போதிருந்தாள். அவர்களுக்கு முன்னால் சிவபெருமான் ஜோதி வடிவத்தில் தோன்றி, "கொடூரச் செயலைச் செய்த சுதேஹாவை நான் வதம் செய்யட்டுமா?'' எனக் கேட்க, "வேண்டாம்'' எனக் கூறினாள் குஸ்மா.

 

ghushmeshwar jyotirlinga  temple story

 

மேலும், ஜோதி வடிவத்தில் சிவன் தோன்றிய இடத்திலேயே நிரந்தரமாக இருந்து மக்களுக்கு ஆசீர்வாதம் அளிக்க வேண்டுமென அவள் சிவனைக் கேட்டுக்கொண்டாள். அதற்கு சிவன் சம்மதித்தார். அந்த இடத்தில் தான் இப்போதைய ஆலயம் இருக்கிறது.

 

குஸ்மா கேட்ட வரத்தின்படி அமைந்த கோவில் என்பதால் அவளின் பெயரும் ஆலயத்தின் பெயருடன் சேர்ந்துகொண்டது. இதுதான் "குஸ்மேஷ்வர்நாத் மந்திர்' என்ற சிவாலயத்தின் கதை. இந்த ஆலயத்திற்கு வந்து நீராடிவிட்டு சிவனை வழிபடுபவர்களுக்கு அனைத்து பிரச்சினைகளும் தீருமென்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தைத் தேடி உலகமெங்குமுள்ள சிவபக்தர்கள் ஏராளமாக வருகிறார்கள். அலஹாபாத் நகரத்திலிருந்து 64 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த ஆலயம்.

 

 

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #34

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

maayapura part 34

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமாவின் வரவிற்கு பிறகு சிறு மாற்றங்களுடன் காலநதி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மல்லிகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டுப் போன மல்லிகாவின் அண்ணன்களும் அம்மா அப்பாவுடன் மீண்டும் இப்போது தான் இங்கு வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் காசிக்கு சென்றிருந்த அப்பா அம்மா இப்போதுதான் திரும்பி இருந்தார்கள்.

 

மல்லிகாவின் அம்மா வந்து இறங்கியதுமே புராணத்தை ஆரம்பித்துவிட்டார். 

"மானூத்து தோப்புல பாடித்திரிந்த குயிலு, வண்ணாத்தி பாறையில் ஆடி திரிந்த மயிலு, வாடி வதங்கி கட்டில்ல கிடக்கறா.. அதை பார்க்கையில வடக்கால போன பாவி மக  நான் கங்கையிலேயே போயிருக்கக் கூடாதா" என்று ஒப்பாரி  வைத்துக் கொண்டிருந்தார்.

"என்னங்க பண்றது நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. அதுவரைக்கும் அரும்பாடுபட்டு ரெண்டு உயிரையும் காப்பாற்றி ஆச்சு"ன்னு தங்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். "நீங்க என்ன பண்ணுவீங்க சொந்தம் ஆச்சே உங்க சின்ன மருமகளை விட்டுக் கொடுப்பீங்களான்னு" குத்தி காட்டினார் மல்லிகாவின் அம்மா ரஞ்சிதம்.

" அம்மா நான் வேணும்னே செய்யலை தெரியாம நடந்திருச்சு மன்னிச்சுடுங்க" என்று சங்கவி கெஞ்சும் குரலில் சொன்னாள்.

"உன் பசப்பு வார்த்தை எல்லாம் மத்தவங்க நம்பலாம். நான் நம்ப மாட்டேன் நீ முதல்ல உண்டாகலைன்னு தண்ணி ஊத்தி விழ வச்சிருக்க" என்று கோபமாக பேசினார் ரஞ்சிதம்.

"த.. ஏதோ பொண்ணை பெத்தவளுக்கு ஆதங்கம் இருக்கும்னு சும்மா இருந்தா நீ என்னடான்னா அதிகமா பேசுற. இது உன் வீட்ல நடந்திருந்தா உன் மருமக பொறாமையில் செய்தாள்னு நீ சொல்வாயா. போகாத ஊர் எல்லாம் போயி கண்ணுறக்கம் இல்லாம காலிலெல்லாம் விழுந்து உன் மவளைக் காப்பாற்றினால் வசவு பேசுற இனிமே இப்படி பேசினா அவ்வளவுதான்" என்று கோபமாக கத்தினார் தனம்மா பாட்டி.

"ஏதோ மகளை பெற்றவங்க ஆதங்கத்தில் நாலு வார்த்தை பேசி விட்டேன். அதுக்குப் போயி இப்படி கோபிக்கறீங்க" என்று குழைந்தாள் ரஞ்சிதம்.

" அம்மா புரியாம பேசாத.. சங்கவி இல்லன்னா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். அவளை திட்டாத மா" என்று சங்கவிக்கு பரிந்து பேசினார் மல்லிகா.

 

சங்கவி எதையும் காதில் வாங்காமல் விருந்தாளிக்கு சமைப்பதற்காக கோழி அடித்து குழம்பு வைக்க சென்றாள்.

 

மணியை அழைத்துக்கொண்டு மச்சான்கள் வயக்காட்டு பக்கம் போனார்கள்.

"மாப்ள  எவ்வளவு நாளைக்குதான் வாய்க்கா வரப்புன்னு மல்லுகட்றது உங்களுக்குன்னு தொழில் வேணாமா?எப்ப தான் நீங்க கெத்தா கார்ல வந்து இறங்கறது. நாங்க கார் கதவை திறந்து விடுவது" என்று மணிக்கு புகழ் போதையை கோப்பையில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

"அட போங்க மச்சான் விவசாயத்திற்கு முதல் போட முடியாம மூச்சு முட்டுது. இதுல எங்க இருந்து தொழிலுக்கு முதல் போடறது" என்று ஆதங்கப்பட்டான் மணி.

 

ஒரு மனிதனுக்கு புகழை போல போதை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை. அதில் மிதக்கும் வரையில் அவன் வாழ்வு தப்பியது. மூழ்க ஆரம்பித்தால் அவனும் சேர்ந்து மூழ்கி விட வேண்டியதுதான். லேசாக துளிர்விட்டு இருந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் மல்லிகாவின் அண்ணன்கள். "மாப்பிள்ளை எங்க ஊர்ல டூரிங் டாக்கீஸ் லீசுக்கு வருது அதை எடுத்து நடத்துவோம். ஜம்முனு தியேட்டர் ஓனர் மாதிரி காரில் வந்து இறங்கி கல்லாப்பெட்டியில பணத்தை எண்ணிக்கிட்டு இரு. நாங்க உனக்கு உழைச்சி தர்ரோம் மாப்பிள்ளை" என்று ரீல் விட்டுக் கொண்டிருந்தனர் மல்லிகாவின் அண்ணன்கள்.

"அப்படியா சொல்றீங்க கேட்க நல்லாத்தான் இருக்கு பணத்துக்கு எங்கே போறதுன்னு" புலம்பினான் மணி.

"அது உங்க பாடு மாப்பிள்ளை. 2 நாளில் 10 ஆயிரம் ரூபாய் எடுத்துகிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க நாம லீசுக்கு வாங்கி முடிச்சிடலாம் " என்று மணியின்  நாக்கில் தேனை தடவினார்கள். "மல்லிகா இன்னும் எத்தனை நாளைக்கு தான் கூட்டுக்குடும்பத்தில் இருக்க போற? புள்ள பொறக்க போறான். உன் புருஷன் உழைச்சி எல்லாரும் அனுபவிக்கிறார்கள்" என்று நெருப்பில்லாமல் பத்த வைத்துக் கொண்டிருந்தார் ரஞ்சிதம்.

 

ஆண்களுக்கு புகழ் போதை என்றால் பெண்களுக்கு எது சுதந்திரம் என்பது தெரியாத போதை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் அடிமை தனியாக இருந்தால் சுதந்திரம் என்னும் தவறான எண்ணம் பெண்கள் மனதில் வேரூன்றி உள்ளது. தன் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் மருமகள் தனிக்குடித்தனம் போக கூடாது. மகள் மட்டும் தனிக்குடித்தனம் வந்துவிடவேண்டும். இந்த அம்மாக்களின் லாஜிக் என்னவென்று புரியவில்லை. ரஞ்சிதம் தன் மகளுக்கு அப்படித்தான் உரு ஏற்றி கொண்டிருந்தாள். பாவம் மல்லிகா சின்ன பெண் தானே வாழ்வில் நல்லது கெட்டது அறியாதவள். அம்மா சொல்லை வேதவாக்காக நினைத்துக் கொண்டு மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கு மச்சான்கள் வேப்பிலை அடித்தார்கள். மல்லிகாவிற்கு அவள் அம்மா பாடம் படித்தாள். 

"வெடக்கோழி விருந்தை விரலிடுக்கில் கூட விடாமல் வழித்து சாப்பிட்டுவிட்டு மணிக்கும் மல்லிகாவிற்கும் மூளைச்சலவை செய்து விட்டு கிளம்பினார்கள் மல்லிகாவின் குடும்பத்தினர். 

 

சினிமாவில் வில்லன்  பாம் வைப்பதுபோல வைத்து விட்டு சென்றுள்ளனர். எப்போது வெடிக்கும் என்று தான் தெரியவில்லை. மணி ரெண்டு நாளா மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே சுற்றிக் கொண்டிருந்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்வது என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருந்தது. ரமா அம்மாவை கேட்கலாம் என்று நினைத்தால் அவர்கள் நிச்சயம் வீட்டில் சொல்லி விடுவார் என பயந்து அந்த திட்டத்தை கைவிட்டான். பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த மணி ஒரு முடிவுக்கு வந்தவனாக வீட்டிலிருக்கும் அலமாரியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

(சிறகுகள் படபடக்கும்)