Skip to main content

திருமணமான 6 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் 

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

A young woman committed herself after 6 months of marriage

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பர்மா காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருக்கு ஜெயசீலி என்ற 23 வயது பெண்ணுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. 25 வயதான ஜெகதீஷ், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.  

 

இந்நிலையில், புதிதாகக் கல்யாணமான தம்பதி என்பதால் கணவன், மனைவி இடையில் அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் நடந்து வந்துள்ளது. இந்த சண்டைகள் நாளடைவில் கடும் வாக்குவாதங்களில் முடிந்துள்ளது. இதனால் ஜெகதீஷின் அம்மா மற்றும் அவரது தங்கை இருவரும் சேர்ந்துகொண்டு ஜெயசீலிக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்த சூழலில், 17 ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஜெயசீலி தனது கணவரான ஜெகதீசை செல்போனில்  தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், ஜெயசீலியுடன் பேச விருப்பம் இல்லாத ஜெகதீஷ் அவரது போனை கட் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயசீலி தனது அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். இதையடுத்து ஜெயசீலி உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதையடுத்து, 23 வயது இளம்பெண்ணை இழந்த சோகத்தில் மருத்துவமனை வளாகத்தில் ஜெயசீலியின் குடும்பத்தார் அங்கேயே அழுது புரண்டனர். அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த ஜெகதீஷ் குடும்பத்தாரை பெண்வீட்டார் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதைத் தடுக்கச் சென்ற இன்ஸ்பெக்டர் அருள் ராஜுக்கும்,  வலது கையில் காயம் ஏற்பட்டது. மேலும், இந்தச் சம்பவத்தில் மருத்துவமனை கண்ணாடிகளும் உடைக்கப்பட்டது.

 

இதுகுறித்து, ஜெயசீலி குடும்பத்தார் பேசும்போது, ''ஜெயசீலியின் சாவில் மர்மம் இருக்கிறது. அவளது நைட்டி கிழிந்திருந்தது. தலை மற்றும் கால்களில் காயம் இருந்தது. ஆகவே, இதில் சம்பந்தப்பட்ட ஜெகதீஷ் குடும்பத்தாரை கைது செய்ய வேண்டும் எனக் கண்ணீருடன் பேசியுள்ளனர். இதையடுத்து, ஜெகதீஷ் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

திருமணமான ஆறே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சிவகங்கை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.