
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் இரு தரப்பு இளைஞர்களிடையே கடந்த 5 ந் தேதி கடைவீதியில் ஏற்பட்ட தகராறு ஒரு தரப்பு குடியிருப்பில் மோதலாக வெடித்தது. இந்த சம்பவத்தில் ஆள் இல்லாத ஒரு வீடு, 3 மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்டது. மேலும் பல மோட்டார் சைக்கிள்கள், கார்கள், அரசு வாகனங்கள் சேதமடைந்தன. போலீசார் முன்னிலையிலேயே தாக்குதல் சம்பவம் நடந்ததாக இருதரப்பினரும் குற்றம்சாட்டினர். இதையடுத்து ஒரு தரப்பில் 21 பேரும் மற்றொரு தரப்பில் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து 8 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் திருச்சி மத்திய மண்டல ஐஜி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து இன்று நேரில் ஆஜரானார்கள். அப்போது, வடகாடு மோதல் சம்பவம் நடந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஏன் நேரில் சென்று ஆய்வு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியது.

அதேபோல, சம்பவம் நாளில் கோயில் மற்றும் சம்பவ பகுதிகளில் பதிவாகி உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவையடுத்து இன்று மாலையே வடகாடு கடைவீதியில் உள்ள கடைகள், சாலையோரம் உள்ள வீடுகளில் கண்காணிப்பு கேமரா உள்ளதா என்றும் கேமரா இருந்த இடங்களில் சம்பவம் நடந்த 5 ந் தேதி முதல் 7 ந் தேதி வரை பதிவான பதிவுகளை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதில் சிக்கும் வீடியோ காட்சிகள் மோதல் சம்பவத்திற்கு போலீசார் ஆதாரமாக சேகரிக்க உள்ளனர்.
இந்நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 14 நபர்களுக்கு நிவாரணமாக ரூ.8.75 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஆலங்குடி வட்டாட்சியர் வில்லியம் மோசஸ் வழங்கினார்.