Skip to main content

"அதிமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்" - வீடு வீடாகப் பிரச்சாரம் செய்யும் சீர்மரபினர் நலச்சங்கம்!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

We are campaigning not to vote for the AIADMK


1978ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப்போல, தமிழகத்தில் உள்ள 68 சமுதாய மக்களை பழங்குடியின சீர்மரபினர் (DNT) என அறிவிக்க, கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தது. இதனை, சீர்மரபினர் நலச்சங்கம் கையில் எடுத்து, போராட்டங்கள் மூலம் தமிழக அரசிற்கு அழுத்தம் கொடுத்தது.

 

கடந்த 2019ஆம் ஆண்டு, DNC சான்றிதழ் மூலம் தமிழக அரசின் சலுகைகளையும், DNT சான்றிதழ் மூலம் மத்திய அரசின் சலுகைகளும் சீர்மரபின சமுதாய மக்கள் பெறலாம் எனத் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. இந்த இரட்டைச் சான்றிதழ் முறையை எதிர்த்துவந்த சீர்மரபினர் நலச்சங்கம், DNT என்ற ஒற்றைச் சான்றிதழ் முறைக்கான ஆணை வழங்க தமிழக அரசைக் கேட்டுக்கொண்டது.

 

சமீபத்தில், வன்னியர் சமுதாய மக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 10.5% உள் இடஒதுக்கீடு அறிவித்தது தமிழக அரசு. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்திருந்தார். இந்த இடஒதுக்கீட்டுச் சட்டம் தற்காலிகமானது என்றும், 6 மாதங்களுக்குப் பின், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியபின், தேவைப்பட்டால் மாற்றியமைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

 

இந்த நிலையில், வன்னியர் சமூகத்துக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும்போது, சீர்மரபினருக்கு 7% உள் இடஒதுக்கீட்டையும் அறிவித்தது தமிழக அரசு. இந்நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும், அ.தி.மு.க அரசு தங்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாகவும் கூறி, சீர்மரபினர் நலச்சங்கத்தினர், வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி, அ.தி.மு.க-வுக்கு வரும் தேர்தலில் ஓட்டுப் போடக்கூடாது எனப் பிரசாரம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி கிராமத்தில் வீடுகளில் கறுப்புக் கொடி கட்டப்பட்டுள்ளது.

 

இது சம்மந்தமாக சீர்மரபினர் நலச்சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி கூறும் போது, “கடந்த 6 வருட காலமாக, DNT என்ற ஒற்றைச் சான்றிதழ் கொடுக்க வேண்டும் எனப் பலகட்ட போராட்டங்களை நடத்தினோம். அ.தி.மு.க அரசு எங்களைக் கண்டுகொள்ளவில்லை. 7% உள் இடஒதுக்கீடு எனக் கூறி, 68 சமுதாய மக்களையும் ஏமாற்றியிருக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் DNT என்ற ஒற்றைச் சான்றிதழ் கொடுக்கப்பட்டு, மத்திய அரசின் சலுகைகளைப் பெறும்போது, தமிழக அரசு மட்டும் எங்களை வஞ்சிக்கும் விதமாக நடந்துகொள்கிறது. அதனால்தான், எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக, வீடுகளில் கறுப்புக் கொடி கட்டியிருக்கிறோம். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வைப் புறக்கணிக்க, 68 சமுதாய மக்களும் தயாராகி வருகிறோம். வீடுவீடாகச் சென்று அ.தி.மு.க.விற்கு வாக்களிக்காதீர்கள் எனப் பிரசாரம் செய்துவருகிறோம். தென் மாவட்டம் முழுவதும் போராட்டம் தீவிரமடையும்” என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.