இலங்கை கடற்படை மோதிய படகு கடலில் மூழ்கியதால்
சக மீனவர் உதவியால் உயிர் தப்பிய 5 மீனவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டிணத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகில், 900-க்கும் மேற்பட்ட மீனவர்கள், நேற்று இரவு மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். இதில், செல்லதுரை(53) என்பவரது விசைபடகில் சென்ற மீனவர்கள் தர்மராஜ்(26), விஜயகுமார்(30), பாரதி(30), மலைத்துரை(30), செல்வம்(28) ஆகியோர் அதிகாலையில் தமிழக எல்லை பகுதியில் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர். தங்கள் படகு மூலம் மீனவர்களின் விசைப்படகை இடித்து சேதப்படுத்தி விட்டு சென்றனர். இதனால், படகு உடைந்து, படகிற்குள் தண்ணீர் புகுந்து நடுக்கடலில் மூழ்கியது. அப்போது, தங்களை காப்பற்று கதறி, வாக்கி டாக்கி மூலம் இந்த தகவலை சக மீனவர்களுக்கு தெரியப்படுத்தினர்.
இதுபற்றி அறிந்த, சக மீனவரான பாலமுருகன்(30) என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று, 5 மீனவர்களையும் காப்பற்றியதால், அனைவரும் பத்திரமாக கரை திரும்பினர். கடலில் முழ்கிய விசைப்படகை மீட்க முடியவில்லை, இது தொடர்பாக, மீன் வளத்துறையினர், கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
-இரா.பகத்சிங்