சேலம், நாமக்கல்லில் டெங்கு மரணங்கள்;
தடுப்பு நடவடிக்கைக்கு சென்ற மருத்துவர்கள் சிறைபிடிப்பு!
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் அருகே உள்ள சவேரியார் பாளையத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி இரத்னா. இவர்களது மகன் ஜெயசீலன் (வயது-17). கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்துவந்தார்.
கடந்த 15-ஆம் தேதி காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஜெயசீலனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அருகேயுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஜெயசீலனுக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.
இதனால் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி மாணவர் இறந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் டவுன் சேந்தமங்கலம் பிரிவு ரோடு அருகேயுள்ள ஆத்தூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது-28). இவர் பி.டெக் முடித்துவிட்டு பெரம்பலூரில் உள்ள பிரபல தனியார் சர்க்கரை ஆலையில் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி சங்கீதப்பிரியா (வயது-22). பி.எஸ்.சி. பட்டதாரி. இவர்களுக்கு நித்யஸ்ரீ(வயது-2) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது சங்கீதப்பிரியா 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். கடந்த 11-ந் தேதி இரவு சங்கீதப்பிரியாவுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. இராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்தபோது டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. உடனடியாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 12-ந் தேதி சிகிச்சைக்காக சங்கீதப்பிரியா சேர்க்கப்பட்டார். தொடர்ந்து காய்ச்சல் அதிகரிக்கவே கடந்த 16-ஆம் தேதி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சங்கீதப்பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். சங்கீதப்பிரியா டெங்கு காய்ச்சலால் இறந்து போனதையொட்டி, இராசிபுரம் நகராட்சி சுகாதார பணியாளர்கள் சங்கீதப்பிரியாவின் வீடு மற்றும் அந்தப் பகுதியில் கொசு புகை மருந்து அடித்தனர்.
இதேபோல் இராசிபுரம் நகரிலுள்ள வி.நகர் பாப்பாத்தி காடு பகுதியைச் சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவரின் மகன் விஷ்ணுபிரகாஷ் (வயது-11). என்ற மாணவர் 5-ம் வகுப்பு படித்து வந்தார். விஷ்ணுபிரகாசுக்கு கடந்த ஐந்து நாட்களாக டெங்கு காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதற்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஷ்ணுபிரகாஷ் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தான்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோம்பை தொட்டிய தெருவில் வசித்து வருபவர் சுந்தர்ராஜன் (வுயது-28), விவசாயி. இவருடைய மனைவி கலையரசி (வயது-25). இவர்களுக்கு மகள் பிரீத்தி (வயது-8), மகன் பிரவீன் (வயது-6) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து இருவரையும் பெற்றோர்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் பரிதாபமாக இறந்தான். பிரவீன் உடலை சொந்த ஊரான புதுக்கோம்பைக்கு கொண்டு வந்து நேற்று அடக்கம் செய்தனர். இந்த தகவலை அறிந்த எருமப்பட்டி வட்டார மருத்துவர்கள் அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வந்தனர். அப்போது, தொட்டியதெரு பகுதியினர் திடீரென்று அதிகாரிகளை சிறைபிடித்தனர். இதையறிந்த சேந்தமங்கலம் வட்டாச்சியர் செல்வராஜ், எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மருத்துவர்களை விடுவித்தனர்.
- சிவசுப்பிரமணியம்