
சென்னை நாவலூர் அருகே உள்ள ஒரு கடையில் இளைஞர்கள் சிலர் சிகரெட் வாங்கிவிட்டு காசு கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டு கடையை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரி சிப்காட் பகுதியில் அப்துல்லா என்பவர் ஒரு உணவகம் நடத்திவருகிறார். இவர், கடையில் கடந்த வியாழக்கிழை இரவு இரு இளைஞர்கள் சிகரெட் வாங்கியுள்ளனர். அதற்கு கடையில் இருந்தவர்கள் பணம் கேட்டுள்ளனர். ஆனால், அந்த இளைஞர்கள் பணம் தராமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போதே ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அவர்களைப் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்தச் சமயத்தில் கடையின் உரிமையாளர் அப்துல்லா, அவரது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக ராமநாதபுரத்தில் இருந்துள்ளார். உடனடியாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டுவந்து காவல்நிலையம் சென்றுள்ளார். அங்கு அப்துல்லா, புகார் எதுவும் வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் காவல்துறையினர் அந்த இளைஞர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் முகமூடி அணிந்துகொண்டு அப்துல்லா கடைக்குவந்து, கடையை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அதனை கடை ஊழியர்களும், உரிமையாளர் அப்துல்லாவும் தடுக்க முற்பட்டனர். ஆனால், அந்த இளைஞர்கள் அவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடை உரிமையாளர் அப்துல்லா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த தகராறில் ஈடுபட்ட மற்ற இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தற்போது அந்த தாக்குதல் காட்சி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.