Skip to main content

கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை; ஹரி பத்மன் அதிரடி கைது

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

Kalashetra; Hari Padman was arrested

 

கலாஷேத்ரா கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பேராசிரியர் ஹரி பத்மனை ஹைதராபாத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் ஒன்றாகச் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 31ஆம் தேதி இந்தப் புகார் குறித்து கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது. அதன்பின் மாணவிகள் அந்தப் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றனர்.

 

Kalashetra; Hari Padman was arrested

 

கலாஷேத்ரா கல்லூரியில் 2019 ஆம் ஆண்டு படித்த கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்தக் கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். குறிப்பாக அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட மாணவிகளுடன் நேரடியாக விசாரணை நடத்தி புகாரின் உண்மைத் தன்மையை உறுதி செய்தனர். தொடர்ந்து மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் ஹரி பத்மன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

இதற்கிடையில், கலாச்சார நிகழ்ச்சிக்காக மாணவிகளுடன் ஐதராபாத் சென்றிருந்த ஹரி பத்மன் சென்னை திரும்பியதும் வழக்கு விசாரணைக்காக போலீஸில் ஆஜராவேன் என்று அவர் தெரிவித்திருந்தார். ஐதராபாத்துக்கு கலாச்சார நிகழ்ச்சிக்காக சென்றிருந்த குழுவினர் சென்னை திரும்பினர். ஆனால், அவர்களுடன் ஹரி பத்மன் சென்னை வராமல் தலைமறைவாகியுள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தலைமறைவான ஹரி பத்மனை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த புகாரில் தேடப்பட்டு வந்த  ஹரி பத்மனை ஹைதராபாத்தில் வைத்து  போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்