
பள்ளி தலைமை ஆசிர்யருக்கு விசிக நிர்வாகி ஒருவர் கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அரியலூர் மாவட்டம் காட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விசிக நிர்வாகி பாக்கியராஜ். இவரது மகன் 10 ஆம் வகுப்பில் இருந்து தற்போது 11 ஆம் வகுப்பு செல்கிறார். இந்த நிலையில் ஆண்டிமடம் விளந்தையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்ற பாக்கியராஜ், தனது மகனுக்கு 11ஆம் வகுப்பில் ‘ஏ’ குருப் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால், அவரது மகன் 10 ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளதால் ‘ஏ’ குருப் தரமுடியாது என்று பள்ளியில் தலைமையாசிரியர் தமிழமுதன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாக்கியராஜ், தலைமையாசிருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் தன் மகன் கேட்ட குருப் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தலைமையாசிரியர் காவல்துறையில் புகார் கொடுத்ததாகவும், ஆனால், காவல்துறையினர் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
விசிக நிர்வாகி தலைமையாசிரியருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.