Skip to main content

“அண்ணாவினுடைய பேச்சும், செயலும் சிலருடைய மனதை புண்படுத்திருக்கலாம்” - ராஜேந்திர பாலாஜி

Published on 23/06/2025 | Edited on 23/06/2025

 

Rajendra balaji says criticism of Anna at Murugan's conference's is regrettable

மதுரையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நேற்று (22.06.2025) நடைபெற்றது. இந்த மாநாட்டில், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தீபம் ஏற்ற வேண்டும், திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளைக் காக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இந்த மாநாநாட்டில், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அதே போன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முன்னாள் மாநில தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான  ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி மற்றும் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோர் பங்கேற்றனர். இதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே பெரியார், அண்ணா குறித்து சர்ச்சைக்குள்ளான வீடியோ ஒளிப்பரப்பட்டது. இது தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. அண்ணாவின் பெயரையே கட்சியின் பெயராக வைத்திருக்கும் அதிமுக, அதன் தலைவரைப் பற்றி அவர்கள் முன்னிலையிலேயே வைக்கப்பட்ட விமர்சனத்துக்கு எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது ஏன்? என திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. 

Rajendra balaji says criticism of Anna at Murugan's conference's is regrettable

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அதில் அவர் பேசியதாவது, “அந்த வீடியோவை தயாரித்தவர்கள் யார் என்று தெரியவில்லை. பேரறிஞர் அண்ணாவினுடைய பெருமைகள் பல இருக்கின்றன. அடித்தட்டு மக்களை, அரசியல் அதிகாரத்திற்கு கொண்டு வந்த தலைவர்களில் முதன்மையானவர் பேரறிஞர் அண்ணா தான். பெரியாருடைய சீர்சிருத்த கருத்துக்கள் ஆயிரம் இருக்கிறது. அதில் சில பேருக்கு பிடிக்காத கருத்துக்களாக இருக்கலாம், பல பேருக்கு பிடித்த கருத்துக்களாக இருக்கலாம். அண்ணாவினுடைய பேச்சும், நடையும், எழுத்தும், செயலும் சிலருடைய மனதை புண்படுத்திருக்கலாம். அதனுடைய வெளிப்பாடாக அந்த வீடியோ இருக்கலாம். 

ஒரு நிகழ்ச்சியில் நடக்கின்ற 99 சதவீத நல்ல நிகழ்வுகளைப் பற்றி நாம் பேசுவோம். அதில் நடந்த ஒரு நிகழ்வை மட்டும் பேசி, அந்த மாநாட்டினுடைய நல்ல கருத்துக்களை எல்லாம் புறக்கணிக்க முடியாது. இருப்பினும் அண்ணாவை புறக்கணித்திருப்பது போல, வஞ்சிப்பதை போல ஒரு செய்தி வந்திருப்பது வருத்தமளிக்கிறது, அதை தவிர்த்திருக்கலாம். இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு மறைந்த தலைவர்களின் நல்ல நிகழ்வுகளையும் பற்றிப் பேசுவது தான் சால சிறந்தது. அவர்கள் எடுத்த முற்போக்கான கொள்கைகளை பற்றியோ, அந்த நேரங்களில் அவர்கள் எடுத்த முடிவுகளைப் பற்றியோ இப்போது விமர்சனம் செய்வது தேவையற்ற ஒரு விவாவதத்தை தற்போது உண்டாக்கியுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு முருக பக்தர் மாநாடு பயம், பீதியை கொடுத்துள்ளது. திமுகவுடன் மனதளவில் உறவை முறித்துக்கொண்ட திருமாவளவன், பெயரளவில் உறவு வைத்துள்ளார். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் அதிமுக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்