
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேர் மற்றும் தரிசன விழா மிகவும் பிரசித்த பெற்ற விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தேர் மற்றும் தரிசன விழாவும், அதே போல் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா நடைபெறும். ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இவ்விழாவில் உலக நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிவ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன தேர் மற்றும் தரிசன விழாவிற்கு கொடியேற்று நிகழ்ச்சி கோவிலில் இன்று காலை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு கோவிலில் தொடர்ந்து பல்வேறு அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகள், சாமி சிலைகள் வீதி உலா என நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து ஜூலை 1-ந்தேதி தேர் திருவிழாவும் 2- தேதி தரிசன விழாவும் நடைபெறும். விழாக்களில் பல லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் திருவிழா காலங்களில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும்.