
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி, குடிசைப் பகுதிகளை திரைச்சீலை போட்டு மறைக்கப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் தொகுதியின் லாக் நகர் பகுதியில் பல்நோக்கு கட்டட திறப்பு விழா இன்று (23-06-25) நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கிடையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகையை ஒட்டி பக்கிங்காம் கால்வாய் பகுதி மற்றும் சாலையோரத்தில் உள்ள குடிசை குடியிருப்பு பகுதி என இருபுறமும் சுமார் 200 மீ தூரம் வரை திரைச்சீலை போட்டு மறைக்கப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டதா? அல்லது கட்சி சார்பில் செய்யப்பட்டதாக என்பது தெளிவாக தெரியவில்லை. லாக் நகர் அருகே ஒரு புறம் பக்கிங்காம் கால்வாயும், மறுபுறம் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடிசைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.