வேளாண் உதவி அலுவலர் தற்கொலை
கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் சந்தையடியை சேர்ந்தவர் அமுதன் (35). இவரது மனைவி பிலோ (33). ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். நாகர்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள வேளாண்மை துணை இயக்குநர் அலுவலகத்தில் உதவி அலுவலராக இருந்த இவர், பதவி உயர்வு பெற்று குருந்தன்கோடு உதவி வேளாண்மை அலுவலரானார்.
கடந்த தேர்தலின் போது பறக்கும் படையில் வாகன சோதனை நடத்தி ஏராளமான பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசியவர் யார்? என்பது தெரியவில்லை. ஆனால் அமுதன் அவருடன் காரசாரமாக பேசியுள்ளார்.
பின்னர் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு, மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், உயர் அதிகாரிகள் அதிக வேலை கொடுத்ததாகவும், டிரான்ஸ்பர் செய்வதாக டார்ச்சர் செய்ததாகவும், இந்த மன வேதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் அமுதன் தற்கொலை செய்து கொண்டதாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.